கனடாவுக்கு 35% வரி.. மற்ற நாடுகளுக்கு 20% வரை வரி? டிரம்ப் தடாலடி.. அப்போ இந்தியாவுக்கு எவ்வளவு?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான டிரம்ப் மீண்டும் இறக்குமதி வரி விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். ஒவ்வொரு நாடுகளுக்கும் இது தொடர்பான லெட்டர் பறந்து வருகிறது. இதற்கிடையே கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 35% வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். மேலும், பெரும்பாலான நாடுகளுக்கு 15% அல்லது 20% என்ற அளவில் மொத்த வரி விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபரான டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் முதலில் ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்திருந்தார். ஒவ்வொரு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா விதிக்கும் வரியே இந்த ரெசிப்ரோக்கல் வரியாகும். ஏப்ரல் மாதம் இவர் முதலில் இந்த இறக்குமதி வரியை அறிவித்த போதே அது சர்வதேச வர்த்தகத்தைப் பாதிப்பதாகவே இருந்தது.

இறக்குமதி வரி
இருப்பினும், அப்போது சில காரணங்களால் இறக்குமதி வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அவர் அறிவித்தார். அந்த 90 நாள் காலக்கெடு கடந்த வாரத்துடன் நிறைவடைந்தது. இதனால் இப்போது உலக நாடுகளுக்கு அமெரிக்காவில் இருந்து லெட்டர் போய்க் கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு நாடுகளுக்கு ஒவ்வொரு வரிகளை அமெரிக்கா விதித்து வருகிறது. அதேநேரம் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் நாடுகளுக்கு இதுவரை வரிகள் விதிக்கப்படவில்லை.
கனடாவுக்கு 35% வரி
இதற்கிடையே அமெரிக்காவின் அண்டை நாடான கனாவுக்கு 35% வரி விதிக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 1 முதல் புதிய வரி நடைமுறைக்கு வரும் என்றும், கனடா பதிலடி என வரியை அறிவித்தால் இறக்குமதி வரி மேலும் அதிகரிக்கும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.. கனடாவில் இருந்து குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் அமெரிக்காவில் நுழைவதாகவும் அதைத் தடுக்கத் தவறியதால் மற்றும் பல முக்கிய விவகாரங்களில் ஒத்துழைக்க மறுப்பதாகச் சொல்லி டிரம்ப் இந்த வரிகளை அறிவித்துள்ளார்.
மற்ற நாடுகள்
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில நாட்களாகவே உலக நாடுகள் மீது டிரம்ப் வரிகளை அள்ளி வீசி வருகிறார். இதுவரை, பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரி உட்பட புதிய வரி விகிதங்கள் தொடர்பாக 22 நாடுகளுக்கு டிரம்ப் லெட்டர் அனுப்பியிருக்கிறார். இதுபோக ஆகஸ்ட் 1ம் தேதி காப்பர் இறக்குமதிகளுக்கும் டிரம்ப் 50% வரியையும் அவர் அறிவித்தார். நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் தென்கொரியா உட்பட பல நாடுகளுக்கு டிரம்ப் புதிய வரிகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் சொல்வது என்ன
வியாழக்கிழமை டிரம்ப் என்பிசி செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் இது போன்ற கடிதங்களைப் பெறாத மற்ற வர்த்தக நாடுகளும் கூட வரியை எதிர்கொள்ள நேரிடும் என்று டிரம்ப் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அனைவருக்கும் கடிதம் அனுப்ப வேண்டிய அவசியமில்லை. நாங்கள் வரிகளை படிப்படியாக ஆலோசித்து அமல்படுத்தி வருகிறோம். மீதமுள்ள நாடுகள் அனைத்திற்கும் 20% அல்லது 15% வரி விதிக்கப் போகிறோம். விரைவில் அது குறித்து நாங்கள் முடிவு செய்வோம்" என்று டிரம்ப் கூறியிருந்தார்.
டிரம்பின் இந்த வரி அறிவிப்பு சர்வதேச நாடுகளிடையே மீண்டும் பதற்றத்தை அதிகரிப்பதாகவே இருக்கிறது. டிரம்ப்பிற்குப் பதிலடியாக மற்ற நாடுகளும் வரி விதித்தால் அது வணிகப் போரைத் தான் உருவாக்கும்.












Click it and Unblock the Notifications