பிறப்புரிமை குடியுரிமை! டிரம்ப் உத்தரவுக்கு தடை விதித்த அமெரிக்க நீதிமன்றம்! இந்தியர்களுக்கு நிம்மதி
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டிரம்ப் முதல் நாளே அதிரடியாகப் பல உத்தரவுகளைப் பிறப்பித்தார். குறிப்பாகப் பிறப்புரிமை அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமையை ரத்து செய்வது குறித்து முதல் நாளே நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பித்து இருந்தார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து அங்குள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றப் போகிறேன் என்பதை முன்னிறுத்தியே டிரம்ப் இந்த முறை தேர்தலைச் சந்தித்தார். இதற்கு அமெரிக்காவில் மக்களிடையே நல்ல ஆதரவும் இருந்தது.

அதன்படி அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டிரம்ப், முதல் நாளே இது தொடர்பான நிர்வாக உத்தரவைப் பிறப்பித்தார். அதாவது பிறப்புரிமை அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமையை நிறுத்துவது தொடர்பாக நிர்வாக உத்தரவைப் பிறப்பித்து இருந்தார்.
அமெரிக்கச் சட்டம்:
அதாவது அமெரிக்க சட்டப்படி பெற்றோர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்து இருந்தாலும் கூட அவர்களுக்கு அமெரிக்காவில் குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்கும். அதாவது பெற்றோர் சட்டவிரோதமாகக் குடியேறியவராக இருந்தாலும், அமெரிக்க மண்ணில் குழந்தை பிறந்தால் குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமை கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது.
இந்த விதியை நீண்ட காலமாகவே டிரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார். இது அபத்தமானது என்றும் இதை ரத்து செய்வேன் என்றும் டிரம்ப் கூறி வந்தார். சொன்னது போலவே முதல் நாளே பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் சட்டத்தை ரத்து செய்து நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பித்தார். இந்த உத்தரவின் அடிப்படையில் இனி பிறப்புரிமை அடிப்படையில் புலம்பெயர்ந்தோரின் குழந்தைகளுக்குக் குடியுரிமை வழங்கப்படாது.
புதிய விதிகள்:
டிரம்பின் இந்த உத்தரவின்படி சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் மட்டுமன்றி சுற்றுலாப் பயணிகள், கல்லூரி படிப்பிற்கு வந்தவர்கள், தற்காலிக தொழிலாளர்களாக வேலை செய்ய வந்தோர் ஆகியோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் கூட பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படாது. இந்த புதிய விதிகள் பிப்ரவரி 20ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் உத்தரவிடப்பட்டு இருந்தது.
இது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அங்குள்ள புலம்பெயர்ந்தோர் பலரும் அவசர அவசரமாக சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதும் கூட அதிகரித்துள்ளது. இதற்கிடையே டிரம்ப்பின் இந்த நிர்வாக உத்தரவுக்கு எதிராக அங்குள்ள பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் சி. கஃஹெனூர், இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
நீதிபதி உத்தரவு:
டிரம்பின் நிர்வாக உத்தரவுக்கு எதிராக அங்குள்ள பல்வேறு மாகாண அரசுகள் வழங்கு தொடர்ந்த நிலையில், அதில் தான் நீதிபதி ஜான் சி. கஃஹெனூர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். "இது அப்பட்டமான அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான உத்தரவு" என்று குறிப்பிட்ட நீதிபதி இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்தின் இந்த உத்தரவு டிரம்பிற்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
ஏன் முக்கியம்:
மேலும், இந்த வழக்கில் வரும் காலங்களில் நீதிமன்றம் என்ன மாதிரியான உத்தரவுகளைப் பிறப்பிக்கப் போகிறது என்பதும் முக்கியம். ஏனென்றால் அமெரிக்காவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறி வாழ்ந்து வருகிறார்கள். இந்தியாவில் இருந்தும் கணிசமானோர் அங்குச் சென்றுள்ளனர். இதன் காரணமாகவே டிரம்பின் நிர்வாக உத்தரவுக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications