டிரம்ப் இந்தியா-அமெரிக்க உறவை இழந்த.. அதிபராக மாறப்போகிறார்! கடுமையாக எச்சரித்த எம்பிக்கள்
நியூயார்க்: வரி விஷயத்தில் அமெரிக்கா கொஞ்சம் ஓவராகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்தியா மீது விதித்துள்ள வரி மிக, மிக அதிகம். இப்படியே போனால், நிச்சயம் இந்தியா உடனான அமெரிக்க உறவை இழக்க நேரிடும் என்றும், அப்படி மட்டும் நடந்தால் அதற்கு டிரம்ப்தான் முழு முதல் காரணமாக இருப்பார் எனவும் அந்நாட்டு எம்பிக்கள் எச்சரித்துள்ளனர்.
டிரம்ப் கட்சியான குடியரசுக் கட்சி எம்பிக்களும், எதிரக்கட்சியான ஜனநாயக கட்சி எம்பிக்களும் டிரம்பின் வரி விவகாரம் குறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. குறிப்பாக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சிட்னி கமலாகர்-டோவ், இந்தியாவுடனான உறவை இழந்த பிரதமர் என்கிற பெயரை டிரம்ப் பெறுவார் என்று எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பேசிய அவர், தனது தனிப்பட்ட வெறுப்புகளுக்காக வரி, விசா கட்டணங்களை டிரம்ப் அதிகரித்திருக்கிறார். அரசியல் காரணங்களால் இரு நாடுகளின் உறவை சீர்குலைத்து, அமெரிக்கா பல ஆண்டுகளாக இந்தியாவுடன் கட்டி எழுப்பி வந்த உறவை வீணடித்து விட்டார். டிரம்ப் இந்த போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் இந்தியாவை இழந்த அமெரிக்கா ஜனாதிபதியாக வரலாற்றில் அறியப்படுவார். இந்தியா மீது விதித்துள்ள 50 சதவீத வரிகள் மற்றும் இந்தியர்கள் அதிக அளவில் பயன்படுத்தும் H-1B விசாக்களுக்கான கட்டண உயர்வு ஆகியவை, இந்தியாவுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
தொழில்நுட்பம் மற்றும் அறிவியலுக்கு இந்தியர்கள் செலுத்தி வரும் பங்களிப்பை அவமதிக்கும் வகையில், டிரம்ப்பின் செயல்பாடு இருக்கிறது என்றும் கூறியுள்ளார். இந்தியா மீதான ட்ரம்பின் இந்த அணுகுமுறைக்கு காரணம் அமைதிக்கான நோபல் பரிசை பெறுவதில் உள்ள தனிப்பட்ட வெறிதான் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
பாதுகாப்பு துறை, எரிசக்தி துறை, செயற்கை நுண்ணறிவு, விண்வெளி மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் போன்ற வளர்ந்து வரும் துறைகளில், அமெரிக்காவின் தற்போதைய சூழலுக்கு இந்தியாவுடன் நல்ல உறவு தேவையாக இருக்கிறது. அப்படி இருக்கையில் டிரம்ப் இவ்வாறு செய்திருப்பது சர்வதேச உறவுகளை கடுமையாக பாதிக்கும் என எச்சரித்துள்ளார்.
அதேபோல குடியரசு கட்சியை சேர்ந்த எம்பி பில் ஹூயிசெங்கா, "தற்போது உலகில் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. சீனாவின் ஆதிக்கத்தை சரி கட்ட வேண்டும் எனில், இந்தோ-பசிபிக் பகுதியை சுதந்திரமாக இயங்க அனுமதிக்க வேண்டும். இது காலத்தின் தேவை" என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஜனநாயக கட்சியை சேர்ந்த மற்றொரு எம்பியான அமி பெரா கூறுகையில், "தற்போதைய சூழலில் அமெரிக்காவுடனும், ரஷ்யாவுடனும், உக்ரைனுடனும் நட்புடன் பழகும் ஒரே நாடு இந்தியா மட்டுமாக இருக்கிறது. எனவே, உக்ரைன்-ரஷ்யா மோதல் விவகாரத்தில், இந்தியாவை அமைதிக்காக நம்மால் பயன்படுத்த முடியும். இப்படி இருக்கையில், இந்தியர்களை குறிவைத்து பேசப்படும் ஒவ்வொரு குற்றச்சாட்டுகளும், அமெரிக்காவின் சமூக நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக அமையும்" என்று எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications