இந்திய விவசாயிகள் போராட்டத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும்.. 7 எம்.பி.க்கள் பரபரப்பு கடிதம்
வாஷிங்டன்: இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி, இந்திய-அமெரிக்கரான, காங்கிரஸ் உறுப்பினர் பிரமிளா ஜெயபால் உட்பட ஏழு எம்பிகள் அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நவம்பர் 26ம் தேதி முதல் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நாளையுடன் ஒரு மாதத்தை எட்ட உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான பிரமிளா ஜெயபால் உட்பட ஏழு எம்பிக்கள் அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.
அமெரிக்காவில் வாழக்கூடிய பல இந்திய வம்சாவளியினர் இந்த விவகாரத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குடும்பத்தின் பராம்பரிய சொத்துக்கள் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளனர். எனவே இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தை நீங்கள் தொடர்பு கொண்டு இந்த விஷயத்தில் அமெரிக்காவின் கவலையை தெரிவிக்க வேண்டும்.
ஒரு நாட்டின் எம்பி என்ற முறையில் இந்திய நாட்டின் கொள்கைகளுக்கு மதிப்பு வழங்க வேண்டும் என்பதை நாங்கள் அறிந்து இருக்கிறோம். அதே நேரம் அமைதியாக போராடிக்கொண்டிருக்கும் இந்திய விவசாயிகளின் பொருளாதார இழப்பு தொடர்பான அச்சத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. இவ்வாறு அந்த கடிதத்தில் அவர்கள் கூறியுள்ளனர்.
முன்னதாக, இந்திய விவசாயிகள் பற்றி மோசமான சில விமர்சனங்களை நாம் பார்க்க வேண்டியுள்ளது. அது போன்ற விமர்சனங்கள் தேவையற்றது.
ஒரு ஜனநாயக நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடுவது சரியில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஸ்ரீவத்ஸவா இந்த மாத தொடக்கத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.