ஒர்க் பெர்மிட்டை நிறுத்தும் அமெரிக்கா? இந்தியர்களுக்கு பெரிய சிக்கல்.. டிரம்ப் வந்ததும் இப்படியா?
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தியர்கள் அதிகமானோர் படித்தும் வேலை செய்தும் வருகிறார்கள். இதற்கிடையே வெளிநாட்டினரை வேலை செய்ய அனுமதிக்கும் OPT ஆப்ஷனல் ஒர்க் பெர்மிட் திட்டம் சட்ட விரோதமானது என்றும் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இதனால் இந்தியர்கள் பெரியளவில் பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது.
இப்போது ஒவ்வொரு ஆண்டும் கணிசமான அளவுக்கு இந்தியர்கள் படிப்பிற்காகவும் வேலை வாய்ப்பிற்காகவும் வெளிநாடுகள் செல்கிறார்கள். அப்படி இந்தியர்கள் அதிகம் செல்லும் நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இருக்கிறது.

குறிப்பாக ஐடி துறையில் அதிகப்படியான இந்தியர்கள் அமெரிக்காவில் தங்கி வேலை செய்து வருகிறார்கள். அங்குப் பல முக்கிய நிறுவனங்களின் சிஇஓக்களாக கூட இந்தியர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இப்போது அதற்குச் சிக்கல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ஒபிடி பெர்மிட்:
அப்படி இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினர் பலரும் அமெரிக்காவில் பட்டப்படிப்பையும் மேற்கொள்கிறார்கள். இதுபோல அமெரிக்காவில் பட்டப்படிப்பை மேற்கொள்வோர் அங்குப் பணி அனுபவத்தைப் பெற OPT எனப்படும் ஆப்ஷனல் பிராக்டிக்கல் டிரைனிங் என்ற திட்டம் அமலில் இருக்கிறது. இதற்கிடையே இந்த ஒபிடி அமெரிக்கர்களுக்குக் கிடைக்கக்கூடிய வேலையைப் பறிப்பதாகவும், வெளிநாட்டினர் அமெரிக்காவில் குடியேறவும் ஒரு வாய்ப்பை இது அமைத்து தருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த ஒபிடி திட்டம் முதலில் தற்காலிகமாகவே வடிவமைக்கப்பட்டது. இந்த ஒபிடி திட்டத்தில் F-1 விசாவில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள் STEM (சயின்ஸ், டெக்னாலஜி, இன்ஜினியரிங், கணிதம்) ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருந்தால் அவர்கள் மூன்று ஆண்டுகள் வரை அமெரிக்காவில் தங்கி வேலை செய்யலாம்.
எதிர்ப்பு:
இருப்பினும், அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் இது அமெரிக்கப் பட்டதாரி இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பதாகவும் அங்கு இப்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும், அமெரிக்காவில் புறவாசல் வழியாக நுழைய இது வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாகவும் அந்நாட்டினர் சாடியுள்ளனர்.
கோரிக்கை:
அமெரிக்க டெக் ஒர்கர்ஸ் என்ற குழுவினர் இந்த திட்டத்தை மிகக் கடுமையாக எதிர்த்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் ட்விட்டரில், "ஒபிடி திட்டம் என்பது வெளிநாட்டு மாணவர்களுக்கான திட்டம். இன்டர்ன்ஷிப் போன்ற திட்டம் எனச் சொல்லி ஏமாற்றும் வேலைவாய்ப்பு திட்டம் இது. பல்கலைக்கழகங்கள் படிப்பிற்குப் பதிலாக ஒர்க் பெர்மிட்களை விற்கின்றன. இது சட்டவிரோதமாக உருவாக்கப்பட்டது. அமெரிக்கக் கல்லூரி பட்டதாரிகளைப் பாதுகாக்க இந்த ஒபிடி திட்டத்தை டிரம்ப் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்" என்று வலியுறுத்துகிறார்கள்.
இந்தியர்களுக்குச் சிக்கல்
ஒருவேளை இந்த கோரிக்கையை ஏற்று டிரம்ப் ஒபிடி திட்டத்தை நிறுத்தினால் அது வெளிநாட்டு மாணவர்களைக் கடுமையாகப் பாதிக்கும். குறிப்பாக இந்தியர்களுக்குத் தான் பாதிப்பு அதிகமாக இருக்கும். என்று கூறப்படுகிறது. அங்கு ஏற்கனவே ஹெச்1 பி விசா திட்டத்தைக் குடியரசு கட்சியினர் எதிர்த்து வருகிறார்கள். இதற்கு எதிராக நீதிமன்றங்களிலும் கூட வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்தச் சூழலில் ஒபிடி திட்டத்திற்கும் அமெரிக்காவில் எதிர்ப்பு எழுந்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அதேநேரம் ஹெச்1 பி விசா திட்டத்தைப் பொறுத்தவரைக் குடியரசு கட்சியிலேயே எலான் மஸ்க் உள்ளிட்ட தொழிலதிபர்கள் அதற்கு ஆதரவே தெரிவித்து வருகிறார்கள். சர்வதேச அளவில் மிகச் சிறந்த நபர்களை வேலைக்கு எடுக்க அந்தத் திட்டமே உதவுவதாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications