பேக் அடித்த டிரம்ப்.. மெக்சிகோ மீதான அனைத்து புதிய வரிகளையும் நிறுத்தி வைப்பதாக அறிவிப்பு!
வாஷிங்டன்: மெக்சிகோ, கனடா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன்பு 25% வரிகளை அறிவித்திருந்தார். இது அந்த நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தைக் கடுமையாகப் பாதிப்பதாக இருந்தது. இதற்கிடையே திடீர் திருப்பமாக மெக்சிகோ மீதான வரிகளை நிறுத்தி வைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிரான டிரம்ப் தனது அண்டை நாடுகளான மெக்சிகோ மற்றும் கனடா மீது 25% வரிகளை அறிவித்திருந்தார். சட்டவிரோத குடியேற்றம், போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க தவறியதற்காக வரிகளைப் போடுவதாக டிரம்ப் அறிவித்திருந்தார்.

இது சர்வதேச அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. டிரம்ப் இதேபோல மற்ற நாடுகள் மீதும் வரிகளைப் போட்டால் அது சர்வதேச வர்த்தகத்தைப் பாதிக்கும். மேலும் பலரும் இதை வர்த்தக போர் என்றும் கூட குறிப்பிட்டனர்.
கனடா பதிலடி
டிரம்பின் வரி அறிவிப்புக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கனடா 25% வரிகளைப் போட்டது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் பல்வேறு பொருட்களுக்கு வரிகளை விதிக்கப் போவதாகக் கனடா அறிவித்தது. அமெரிக்க அரசு தனது வரிகளைத் திரும்பப் பெறாத வரை தங்கள் வரிகளும் அமலில் இருக்கும் எனக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
சீனாவும் கூட இதேபோல அமெரிக்காவுக்கு எதிராகப் பல வரிகளை அறிவித்து இருந்தது. அமெரிக்காவின் எந்தவொரு நடவடிக்கைக்கும் பதிலடி தரத் தயாராகவே இருப்பதாகச் சீனா அறிவித்து இருந்தது.
மெக்சிகோ
அதேநேரம் மெக்சிகோ பதிலடி தரும் வகையில் எந்தவொரு வரிகளையும் விதிக்கவில்லை. உடனடியாக அமெரிக்கா சென்ற மெக்சிகோ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். வரி குறித்த கேள்விக்கும் கூட, பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவே மெக்சிகோ அதிபர் கிளாடியா கூறியிருந்தார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை என்றால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்பிடம் மெக்சிகோ அதிபர் கிளாடியா நேரடியாகப் பேசினார். இரு தலைவர்களுக்கும் இடையேயான அந்த பேச்சுவார்த்தை பாசிட்டிவாகவே இருந்துள்ளது. இந்தச் சூழலில் தான் மெக்சிகோ மீதான வரிகளைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென அறிவித்துள்ளார்..
திடீர் அறிவிப்பு
புதிதாக அறிவிக்கப்பட்ட வரிகள் செயல்பாட்டிற்கு வராது என அறிவித்த டிரம்ப், வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வரை புதிய விதிகளை நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளார். திடீரென டிரம்ப் வரிகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரம் மெக்சிகோ மீதான வரிகளை அவர் தற்காலிகமாகவே நிறுத்தி வைத்துள்ளார். ஏப்ரல் 2ம் தேதிக்குள் இரு தரப்பிற்கும் இடையே முக்கிய டீல் இறுதியாகும் எனத் தெரிகிறது. ஒருவேளை டீல் இறுதியாகவில்லை என்றால் டிரம்ப் மீண்டும் வரிகளை விதிக்கவே போகிறார்
அடுத்த சிக்கல்
இது ஒரு பக்கம் இருக்க வரும் ஏப்ரல் 2ம் தேதி முதல் ரெசிப்ரோகல் வரியை அமல்படுத்தப் போவதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார். அதாவது உலகின் மற்ற நாடுகள் அமெரிக்காவுக்கு எந்தளவுக்கு வரி விதிக்கிறதோ.. அதே அளவுக்கு அமெரிக்காவும் அந்த நாடுகளுக்கு வரி விதிக்க போகிறதாம். இதுபோல ஒரு வரியை டிரம்ப் அரசு அறிவித்தால் அது சர்வதேச வர்த்தகத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என்றே வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications