இங்கேயும் வந்துட்டீங்களா... அடுத்த ட்விஸ்ட் தரும் டிரம்ப்.. ஈரானுக்கு பறந்த கடிதம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஈரான் நாட்டு அரசுக்கு டொனால்ட் டிரம்ப் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். ஈரான் அரசு பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொள்ளும் என்று நம்புவதாகவும் கூறினார். ஈரான் அணுசக்தி திட்ட விவகாரத்தில் அமெரிக்காவிற்கு உதவுவதற்கு அண்மையில் ரஷ்யா தயாராகி வருவதாக செய்திகள் வெளியான நிலையில் டிரம்ப் அனுப்பியுள்ள கடிதம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரி விதிப்பு விவகாரத்தில் ஒவ்வொரு நாடுகளுக்கும் பகிரங்கமாக எச்சரித்து வருகிறார். தங்கள் நாட்டுக்கு எதிராக அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே பாணியில் வரி விதிப்பேன் என்று கொக்கரித்து வருகிறார்.இதன் காரணமாக இந்தியா, சீனா, மெக்சிகோ, கனடா, பிரேசில் உள்பட பல்வேறு உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன.

அடுத்தடுத்து வரி விதிப்பு விவகாரத்தில் கடுமையாக நடந்து கொண்டு வருகிறார் டிரம்ப். அதேபோல் உக்ரைன் விவாகரத்தில் இதுவரை இருந்த அமெரிக்காவின் நிலைப்பாடு அடியோடு மாறி உள்ளது. கிட்டத்தட்ட உக்ரைன் ரஷ்யா இடையே போரையே முடிவுக்கு கொண்டு வரும் அளவிற்கு டிரம்ப் அதிரடியாக செயல்பட்டு வருகிறார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் டிரம்ப் நடந்து கொண்ட விதம் மொத்த ஐரோப்பிய நாடுகளையும் அதிர வைத்துள்ளது.
அடுத்தாக அமெரிக்காவிற்கு நீண்ட காலமாக தலைவலியாக உள்ள ஈரான் அணுசக்தி விவகாரத்தையும் கையில் எடுத்துள்ளார். அண்மையில் ரஷ்யா ஈரான் அணுசக்தி விவகாரத்தில் அமெரிக்காவின் பேச்சுவார்த்தைக்கு உதவுவதாக கூறியிருந்தது. இதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக அறிவித்துள்ளார். நேற்று ஈரான் நாட்டு தலைமைக்கு ஒரு கடிதத்தை அனுப்பினார். அந்த கடிதம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொள்வார்கள் என்று நம்புவதாக தெரிவித்தார். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

டிரம்ப் இன்று காலை ஃபாக்ஸ் பிசினஸ் நெட்வொர்க் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "நீங்கள் ( ஈரான் மத தலைவர் அயதுல்லா அலி கமேனி )பேச்சுவார்த்தை நடத்துவீர்கள் என்று நம்புகிறேன், ஏனெனில் அது ஈரானுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். அவர்கள் (ஈரான்) அந்தக் கடிதத்தைப் பெற விரும்புகிறார்கள் என்று நினைக்கிறேன். ஈரான் விவகாரத்தை பொறுத்தவரை மற்றொரு மாற்று வழி என்னவென்றால், நாம் ஏதாவது நிச்சயம் செய்தாக வேண்டும். ஏனென்றால் அணு ஆயுதங்களை அனுமதிக்க முடியாது." என்று கூறினார். எனினும் ஈரானுக்கு கடிதம் அனுப்பப்ட்டது குறிது வெள்ளை மாளிகை உடனடியாக எந்த பதிலும் அளிக்கவில்லை.
ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ், ஈரானின் அணுசக்தி திட்டத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலையைத் தீர்ப்பதற்கான சர்வதேச நாடுகளின் (அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின்) முயற்சிகள் குறித்து ஈரானிய தூதர் காசெம் ஜலாலியுடன் விவாதித்ததாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications