மீண்டும் பாசிட்டிவ்.. மீண்டும் தனிமை.. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா உறுதி!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டு தொடக்கம் முதல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் மாதிரியான ஓமைக்ரான் வைரஸ் பரவல் ஏற்பட்டது. இதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு பெரிய அளவில் உயர்ந்தது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக ஓமைக்ரான் வைரஸ், கொரோனாவின் மற்றொரு மாதிரியான டெல்டாவை போல இல்லாமல் லேசான பாதிப்பையே ஏற்படுத்தியது.

இதனால் வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்த போதிலும் உயிரிழப்பு அதிகரிக்கவில்லை. அதன் பின்னர் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது. ஆனால் கடந்த இரு மாதங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகள் அதிகளவில் இல்லை என்ற போதும், பாதிப்புகள் அதிகமாகியது.
இதனால் பொதுமக்கள் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர வேண்டும் என்று அனைத்து நாடுகளும் வலியுறுத்தின. அதே போல் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு ஊரடங்கு குறித்த அச்சமும் எழுந்துள்ளது.
இதனிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 79 வயதாகும் பைடனுக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பதாகக் கூறப்பட்டது.
அவர் ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசி மற்றும் இரு முறை பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டவர். இருந்தும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதில் இருந்து ஜூலை 28ம் தேதி குணமடைந்ததாக வெள்ளை மாளிகை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோல் சிறிய சதவிகித மக்களுக்கு நடக்கிறது. எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. ஆனால் சுற்றியுள்ள பாதுகாப்பிற்காக மீண்டும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
தனிமையில் இருந்துகொண்டே பணியைத் தொடர்ந்து வருகிறேன். விரைவில் குணமடைந்துவிடுவேன் என்று நம்பிக்கை உள்ளதாக பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications