இந்தியர்களுக்கு நிம்மதி கொடுத்த டிரம்ப்.. "ஹெச்-1பி விசா நிச்சயம் தேவை.." திடீரென மனம் மாறிட்டாரே
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான டிரம்ப் தொடர்ச்சியாக ஹெச்-1பி விசாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருவது அனைவருக்குமே தெரியும். இதற்கிடையே ரொம்பவே அரிதான மேட்டராக டிரம்ப் ஹெச்-1பி விசாவுக்கு ஆதரவான கருத்துகளைக் கூறியுள்ளார். அமெரிக்காவில் குறிப்பிட்ட பிரிவுகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுவது உண்மை தான் என்றும் இதனால் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் ஐடி உள்ளிட்ட சில துறைகளில் வெளிநாட்டைச் சேர்ந்த ஊழியர்கள், குறிப்பாக இந்தியர்களே அதிகம் வேலை செய்கிறார்கள். இவர்கள் ஹெச்-1பி விசா மூலம் அமெரிக்கா சென்றவர்கள். இருப்பினும், அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினருக்கு எதிரான நடவடிக்கைகளை டிரம்ப் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறார்.

டிரம்ப்
இதற்கிடையே அமெரிக்காவில் குறிப்பிட்ட பிரிவுகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுவது உண்மை தான் என்பதை டிரம்ப் முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் அந்த குறிப்பிட்ட பிரிவுகளில் வெளிநாட்டிலிருந்து திறமையானவர்களைப் பணிக்கு அமர்த்த வேண்டியது அவசியம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹெச்-1பி விசா
அவர் அதிபராகப் பதவியேற்றது முதலே ஹெச்-1பி விசா திட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வந்தார். ஹெச்-1பி விசாவுக்கான கட்டணத்தை கூட அவர் கடுமையாக உயர்த்தியிருந்தார். இதனால் இந்தியர்களே அதிகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகி இருந்தது. மேலும், அமெரிக்காவும் விசாவுக்கு கெடுபிடி காட்ட ஆரம்பித்தது. இதனால் பல்வேறு நிறுவனங்களும் தங்கள் ஹெச்-1பி விசா விண்ணப்பங்களைக் கூட குறைத்துக் கொண்டன.
ஹெச்-1பி விசாவுக்கு டிரம்ப் மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளைக் கூட விதிக்கலாம் எனச் சொல்லப்பட்டு வந்த நிலையில், ஹெச்1-பி விசாவுக்கு ஆதரவாக அவர் பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த விசா திட்டத்தால் அதிகம் பலன் பெறுவது இந்தியர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் பற்றாக்குறை
இது தொடர்பாகப் பிரபல அமெரிக்க ஊடகத்திற்கு டிரம்ப் விரிவான பேட்டியை அளித்தார். அதில் ஹெச்1-பி விசா திட்டத்தால் அமெரிக்கத் தொழிலாளர்களின் ஊதியங்கள் குறையுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த டிரம்ப், "ஆம், இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.. ஆனால் நாம் திறமையான ஊழியர்களை இங்குக் கொண்டுவர வேண்டும்" என்றார்.
அமெரிக்காவிலேயே பல திறமையான தொழிலாளர்கள் இருக்கிறார்களே என்ற கேள்விக்கு அவர், "இல்லை.. அப்படி பொதுவாகச் சொல்லிவிட முடியாது.. குறிப்பிட்ட சில துறைகளில் நம்மிடம் திறமைசாலிகள் இல்லை.. அமெரிக்கர்கள் அதை எல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும். வேலையில்லாமல் இருப்போரை உடனடியாக ராக்கெட் தயாரிக்கும் தொழிற்சாலையில் நியமிக்க முடியாது.. படிப்படியாகவே முன்னேற்ற முடியும்" என அவர் விளக்கமளித்தார்.
ரெய்டு & விளக்கம்
கடந்த செப்டம்பர் ஜார்ஜியாவில் உள்ள ஹூண்டாய் ஆலையில் அமெரிக்கக் குடியேற்ற அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் முறையான விசா இல்லாமல் அமெரிக்காவுக்கு வந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். இதைச் சுட்டிக்காட்டிய டிரம்ப், "சட்டவிரோதக் குடியேறிகளைக் கண்டுபிடிக்கவே இந்தச் சோதனை நடத்தப்பட்டது. அங்குத் தென் கொரியாவைச் சேர்ந்தவர்கள் இருந்தனர். அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் பேட்டரிகள் தயாரித்தவர்கள். பேட்டரிகள் தயாரிப்பது மிகவும் சிக்கலானது, அபாயகரமானது.
பேட்டரிகளை தயாரிக்க அங்கு அவர்களுக்கு 500 அல்லது 600 பேர் தேவைப்பட்டனர்.. அதை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுத்தும் வந்தனர். இருப்பினும், அவர்கள் சட்டவிரோதமாக நாட்டில் வந்தவர்கள் என்பதால் அவர்களை வெளியேற்ற வேண்டி இருந்தது. இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.












Click it and Unblock the Notifications