அடிமை முறையை ஒழித்த லிங்கனின் குடியரசு கட்சி.. டிரம்ப் வசம் வந்தது எப்படி! இது அமெரிக்க அரசியல்
வாஷிங்டன்: ஒரு காலத்தில் அடிமை முறையை ஒழிக்கப் போராடியது தான் குடியரசு கட்சி. அக்கட்சியின் தலைவர் ஆபிரகாம் லிங்கன் அடிமை முறையை ஒழிக்கப் போராடிய நிலையில், அவர் கொல்லப்பட்டார். அப்படிப்பட்ட குடியரசு கட்சி தான் இப்போது டிரம்ப் வசம் வந்துள்ளது. இந்த மாற்றம் எப்படி நடந்தது.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்
அமெரிக்காவைப் பொறுத்தவரை இப்போது இரண்டே கட்சிகள் தான் பிரதானமாக உள்ளன. ஒன்று ஜனநாயக கட்சி.. மற்றொன்று குடியரசு கட்சி. இதில் டிரம்ப் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

குடியரசு கட்சி: இப்போது வெள்ளை இன மக்கள் அதிகம் உள்ள கட்சியாக குடியரசு கட்சி இருக்கிறது. மேலும், அரசின் அதிகாரம் பெரியளவில் இருக்கக்கூடாது. சந்தையே அனைத்தையும் தீர்மானிக்க வேண்டும் என்பதையே கொள்கையாக வைத்துள்ளது. பெரும்பாலும் பழமைவாதிகள் இருக்கும் கட்சியாகவே குடியரசு கட்சி இருக்கிறது.
இந்தக் கட்சிக்கு வெள்ளை இன மக்கள் ஆதரவே அதிகம். இதன் காரணமாகவே வெள்ளை இனத்தவர் அதிகம் வாழும் அமெரிக்காவின் தென் மாகாணங்களில் குடியரசு கட்சி எளிதாக வெல்கிறது. அக்கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப், இன ரீதியான கருத்துகளைத் தொடர்ச்சியாகக் கூறி வருகிறார். புலம் பெயர்ந்து அமெரிக்காவுக்கு வருவோரை மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறார். ஆனால் குடியரசு கட்சி எப்போதும் இப்படியே இருந்தது இல்லை. 160 ஆண்டுகளில் அடிமை முறையை ஒழித்த லிங்கனின் கட்சி என்பதில் இருந்து டிரம்ப் கட்சி என்ற நிலைக்கு மாறியிருக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
வரலாறு: 1800களில் ஜனநாயக கட்சியும், விக்ஸ் என்ற மற்றொரு கட்சியும் இருந்தது. அந்த காலகட்டத்தில் தான் அப்போது அமெரிக்கா தன்னுடன் புதிய மாகாணங்களை இணைத்துக் கொண்டு இருந்தது. அந்த புதிய மாகாணங்களில் அடிமை முறையை அனுமதிக்க வேண்டுமா கூடாது என்பதில் விவாதம் எழுந்தது. அப்போதைய ஜனநாயக கட்சி அப்போது அடிமை முறை இருக்க வேண்டும் என்றது. ஆனால், விக்ஸ் கட்சி இதை எதிர்த்தது. அடிமை முறை இருக்கும் மாகாணங்கள் அதிகரித்தால் தங்கள் அதிகாரம் குறையும் என்று அஞ்சியது. மேலும், இது வெள்ளை இன தொழிலாளர்களையும் பாதிக்கும் என நினைத்தது.
அப்போது ஏற்பட்ட குழப்பத்தில் விக்ஸ் கட்சியே கலைக்கப்பட்டது. விக்ஸ் கட்சியில் இருந்த சிலர் இணைந்து 1854ம் ஆண்டு குடியரசு கட்சியைத் தொடங்கினர். அவர்கள் அடிமை முறையைக் கடுமையாக எதிர்த்தனர். இதற்கு அமெரிக்காவின் வடக்கு பிராந்தியத்தில் நல்ல ஆதரவு கிடைத்த நிலையில், 1861ல் நடந்த அதிபர் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் குடியரசு கட்சியின் லிங்கன் அதிபராகத் தேர்வானார்.
உள்நாட்டு போர்: லிங்கன் அடிமை முறையை முழுமையாக ஒழித்துவிடுவார் என்று அஞ்சிய அமெரிக்காவின் 11 மாகாணங்கள் தாங்கள் அமெரிக்காவை விட்டுப் பிரிவதாக அறிவித்தது. இதையடுத்து அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் வெடித்தது. லிங்கன் தரப்பு வென்ற நிலையில், நாடு முழுக்க அடிமை முறை ஒழிக்கப்பட்டது. அது மட்டுமின்றி அடிமைகளாக இருந்து விடுவிக்கப்பட்டோரின் உரிமைகளுக்காகவும் குடியரசு கட்சி போராடியது. கறுப்பின மக்களுக்கும் வாக்களிப்பது உள்ளிட்ட அனைத்து அடிப்படை உரிமைகளும் இருப்பதை உறுதி செய்யும் சிவில் உரிம சட்டத்தை 1866இல் நிறைவேற்றினர்.
உள்நாட்டுப் போரின் போது அரசு அதிகம் செலவு செய்ய வேண்டி இருந்தது. இதனால் குடியரசு கட்சியில் இருந்த தொழிலதிபர்கள் பணக்காரர்கள் ஆனார்கள். அவர்கள் குடியரசு கட்சியை மெல்ல தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்கள். கறுப்பினத்தவரின் உரிமைகள் குறித்துப் பேசினால் அதிகாரத்தைத் தக்கவைக்க முடியாது என்று அவர்கள் நினைத்துள்ளனர். இதனால் 1870களில் கறுப்பின விவகாரத்தை அப்படியே விட்டுவிட்டனர். காலம் செல்ல செல்ல தொழிலதிபர்கள் ஆதிக்கம் செலுத்தும் கட்சியாகக் குடியரசு கட்சி மாறியது.
அமெரிக்காவில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் போது குடியரசு கட்சியின் ஆதரவு அதிகரிக்கும்.. பொருளாதாரம் மோசமாக இருக்கும் போது எல்லாம் குடியரசு கட்சி தடுமாறும். 1950களில் அமெரிக்காவில் மீண்டும் கறுப்பின மக்கள் போராட்டம் வெடித்தது. ஆனால், இந்த முறை ஜனநாயக கட்சி சிவில் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. ஆனால், குடியரசு கட்சி இதை மிகக் கடுமையாக எதிர்த்தது.
மாறிய நிலைப்பாடு: இது அரசின் அதிகாரத்தை அதிகரிக்கும் வகையில் இருப்பதாகச் சொன்னது குடியரசு கட்சி. இந்த நேரத்தில் தான் கறுப்பின மக்கள் முழுமையாகக் குடியரசு கட்சியில் இருந்து ஜனநாயக கட்சி பக்கம் வந்தார்கள். அதேபோல வெள்ளை இன மக்கள் மொத்தமாகக் குடியரசு கட்சி பக்கம் சென்றனர். 1900, 2000களில் வந்த குடியரசு கட்சித் தலைவர்கள் இதை நிலைப்பாட்டை உறுதியாக எடுத்தனர்.
உள்ளே வந்த டிரம்ப்: 1800களில் அடிமை முறை, இன வெறி பிரச்சினை என்றால் இப்போது குடியேற்றம் ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது. குடியேற்றம் விவகாரத்தில் மற்ற குடிரயசு தலைவர்கள் வலுவான முடிவெடுக்க முடியாமல் தடுமாறினர். இந்த நேரத்தில் தான் குடியரசு கட்சிக்குச் சம்பந்தமே இல்லாத தொழிலதிபர் டிரம்ப் உள்ளே புகுந்து மொத்தமாகக் கட்சியைத் தன்வசம் கொண்டு வந்தார். குடியரசு கட்சியின் தலைவர்கள் அவரை பெரிதாக ஆதரிக்காத போதிலும் வெள்ளை இன மக்கள் ஆதரவு அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாகவே தொடர்ச்சியாக 3வது முறையாக அவரால் போட்டியிட முடிகிறது.











Click it and Unblock the Notifications