டிரம்ப் உயிரே போய் இருக்கும்! ஒபாமா கூட தோற்று போன மேட்டர்! அமெரிக்க அரசியலை புரட்டி போடும் பிரச்சனை
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் பல்வேறு விஷயங்கள் முக்கியமாகப் பேசுபொருளாக உள்ளன. அதில் மிக மிக முக்கியமானது துப்பாக்கி. எது அதிபர் தேர்தலில் துப்பாக்கி முக்கியமா எனக் கேட்கிறீர்களா.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவில் ஒருவர் துப்பாக்கியை வைத்திருக்க வேண்டும் என்றால் அதற்குப் பல கட்டுப்பாடுகள் உள்ளன. இதற்கான அனுமதி அவ்வளவு சீக்கிரம் அனைவருக்கும் கிடைத்துவிடாது.

துப்பாக்கி: குறிப்பிட்ட காரணங்கள் இருந்தால் மட்டுமே அனுமதி தரப்படும். அதற்கும் பல கட்டுப்பாடுகளை விதிப்பார்கள். துப்பாக்கி குண்டுகளுக்கும் இங்கு நாம் கணக்குக் காட்ட வேண்டும். தேர்தல் போன்ற நிகழ்வுகள் வரும் போது துப்பாக்கிகளை முன்கூட்டியே போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். இப்படிப் பல விதிகள் உள்ளன.
ஆனால், உலகின் மிக முக்கிய ஜனநாயக நாடாகப் பார்க்கப்படும் அமெரிக்காவில் துப்பாக்கிகளை வைத்திருக்க நமது நாட்டை போலப் பெரியளவில் கட்டுப்பாடுகள் இல்லை. அங்கு 18 வயதைக் கடந்தவர்கள் அனைவரும் சட்டப்பூர்வமாகத் துப்பாக்கிகளை வைத்திருக்கலாம். சில மாகாணங்களில் 18 வயதுக்குக் குறைவானவர்களும் கூட சில குறிப்பிட்ட வகை துப்பாக்கிகளை வைத்திருக்க முடியும்.
சட்டம் தரும் உரிமை: ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகக் கூறும் அமெரிக்காவில் எதற்குத் துப்பாக்கி என கேட்கலாம். அதற்கும் அவர்கள் துப்பாக்கிகளையே காரணமாகச் சொல்கிறார்கள். அமெரிக்க நாட்டின் சட்டமே துப்பாக்கிகளை வைத்திருக்க சட்டப்பூர்வ உரிமையைத் தருவதால் தங்கள் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது என்கிறார்கள். அமெரிக்காவின் இரண்டாவது சட்டத் திருத்தம் தான் துப்பாக்கிகள் வைத்திருப்பதை சட்டப்பூர்வமாக அனுமதிக்கிறது. இது சார்ந்தே பெரும் அரசியல் அங்கு நடந்து வருகிறது.
இந்த துப்பாக்கி விவகாரத்தைப் பொறுத்தவரை அமெரிக்காவில் இரு வேறு கருத்துகள் நிலவுகிறது. அங்கு பெரும்பாலான மக்கள் யாரும் துப்பாக்கிகளுக்கு முழுமையாகத் தடை விதிக்க வேண்டும் என்பதை விரும்பவில்லை. சட்டம் தங்களுக்கு வழங்கிய உரிமையை இழக்க விரும்பவில்லை என்கிறார்கள்.
அமெரிக்க மக்கள் கருத்து: அதேநேரம் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரிப்பதால் இதில் சில கட்டுப்பாடுகள் வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். அதாவது எளிதாக அனைவருக்கும் துப்பாக்கி கிடைக்கக்கூடாது. துப்பாக்கி வாங்கும் நபரின் பின்னணி பரிசோதிக்க வேண்டும். ஏற்கனவே கிரிமினல் குற்றச்சாட்டில் கைதானவர்கள் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் தேவை என 57% மக்கள் கூறுகிறார்கள். மறுபுறம் துப்பாக்கியை வைத்திருக்கும் உரிமையைச் சட்டமே வழங்கும் போது அதில் தலையிடக்கூடாது என்று 43% மக்கள் சொல்கிறார்கள்.
எனவே, துப்பாக்கி தொடர்பான கட்டுப்பாடுகள் தேவையா இல்லையா என்பதே அமெரிக்காவில் நீண்ட நெடிய சிக்கலாக இருந்து வருகிறது. மக்களின் பெரும் பகுதியினர் கட்டுப்பாடுகளுக்கு ஓகே சொன்னாலும் கூட அங்குள்ள துப்பாக்கி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இதற்கு முட்டக்கட்டை போடுகின்றன. ஒபாமா காலத்தில் பல சட்டங்களை இந்த நிறுவனங்கள் தடுத்து நிறுத்திவிட்டன. மேலும், கட்சி ரீதியாகப் பார்க்கும் போது பொதுவாக ஜனநாயக கட்சியினர் அதிக கட்டுப்பாடுகள் தேவை என்பார்கள்.. குடியரசு கட்சியினர் எந்தவொரு கட்டுப்பாடும் இருக்கக்கூடாது என்பார்கள்.
கமலா ஹாரிஸ்: கமலா ஹாரிஸை பொறுத்தவரை அவர் கட்டுப்பாடுகள் தேவை என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். பைடன் அதிபர் காலத்தில் துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் துப்பாக்கிகளைக் கட்டுப்படுத்தும் பல சட்டங்களைக் கொண்டு வந்துள்ளார். அதேநேரம், துப்பாக்கிகளை முழுமையாகத் தடை விதிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்பதையும் தன்னிடமும் பெரும்பாலான அமெரிக்கர்களைப் போலப் பாதுகாப்பிற்குத் துப்பாக்கிகள் இருப்பதாகவும் தொடர்ந்து கூறி வருகிறார்.
டிரம்ப்: மறுபுறம் டிரம்பை பொறுத்தவரை அவர் எப்போதும் துப்பாக்கிகளுக்கு ஆதரவு தான். துப்பாக்கி வைத்திருப்பதைச் சட்டம் அனுமதிப்பதால் எந்தவொரு கட்டுப்பாடுகளும் இருக்கக்கூடாது என்பதே அவரது கருத்து. பைடன் காலத்தில் போடப்பட்ட கட்டுப்பாடுகளையும் கூட முழுமையாக நீக்குவேன் என்றே கூறி வருகிறார். இதே துப்பாக்கி விதிகள் காரணமாகவே டீன் ஏஜ் சிறுவன் கைகளில் துப்பாக்கி கிடைத்து, அதை வைத்து ட்ரம்பை கொல்ல முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications