சபாஷ்... இக்கட்டான நிலையில் இந்தியா.. உடனடியாக மருத்துவ பொருட்களை அனுப்பிய அமெரிக்கா
வாஷிங்டன்: கொரோனா 2ஆம் அலையால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவும் வகையில் மருத்து உபகரணங்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலின் தீவிர தன்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சுமார் 3.79 லட்சம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் கொரோனா 2ஆம் அலை மோசமாக இருக்கும் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அப்போது, தினசரி கொரோனா பாதிப்பு 8 முதல் 10 லட்சம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா உதவி
இந்நிலையில், கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள மோசமான பாதிப்புகளைக் கட்டுப்படுத்த இந்தியாவுக்கு உதவும் வகையில் பல்வேறு நாடுகளும் உதவி செய்து வருகின்றன. அதன்படி மருத்து பொருட்களுடன் முதல் ராணுவ விமானம் நேற்று அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்குப் புறப்பட்டது. இது முதல்கட்டம் தான் என்றும் அடுத்த வாரம் கூடுதல் மருத்துவ பொருட்களுடன் விமானங்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுடன் துணை நிற்போம்
இது தொடர்பாக லாயிட் ஆஸ்டின் தனது ட்விட்டரில், முன்னரே கூறியது போல, இந்தியாவில் இருக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் சுகாதார ஊழியர்களுக்கும் அனைத்து வழிகளிலும் உதவு முயன்று வருகிறோம். நம்பிக்கையுடன் இருங்கள் உதவி வந்து கொண்டிருக்கிறது. இந்த கொடூரமான நோயை எதிர்த்துப் போராடும் இந்தியா நண்பர்களோடு துணை நிற்போம். அவசரக்கால மருத்துவப் பொருட்களைக் கொண்டுள்ள முதல் விமானம் வியாழக்கிழமை இந்தியாவில் தரையிறங்கும்" என அவர் பதிவிட்டுள்ளார்.

100 மில்லியன் டாலர்
அமெரிக்கா அனுப்பியுள்ள இந்த விமானம், அவரசகா மருத்துவ பொருட்களைக் கொண்டுள்ளது. இந்த விமானத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள், மாஸ்க்குகள் உள்ளிட்ட மருத்துவ பொருட்கள் உள்ளன. ஏற்கனவே, இந்தியாவுக்கு உதவ சுமார் 100 மில்லியன் டாலர் மதிப்பிலான 1100 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 15 மில்லியன் N95 மாஸ்க்குகள், 1,700 ஆக்டிஜன் செறிவூட்டிகள் ஆகியவற்றை அனுப்பவுள்ளதாக அமெரிக்கா அதிபர் பைடன் அறிவித்திருந்தார்.

தடுப்பூசி மூலப் பொருட்கள்
முன்னதாக, கொரோனா தடுப்பூசிகளின் மூலப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என சீரம் நிறுவனத்தின் சிஇஓ ஆதார் பூனவல்லா உள்ளிட்ட பலர் வலியுறுத்தினர். இருப்பினும், அமெரிக்கா அந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்த மறுத்துவிட்டது. அமெரிக்காவில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் மருந்து நிறுவனங்களுக்கு மூலப் பொருட்களின் எவ்வித தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அமெரிக்கா இந்தக் கட்டுப்பாட்டை விதித்துள்ளது.












Click it and Unblock the Notifications