டிரம்ப் ஒரு பக்கம் "அப்படி" சொல்ல.. மறுபுறம் வங்கதேச நிதியை மொத்தமாக நிறுத்திய அமெரிக்கா! பின்னணி
வாஷிங்டன்: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்பு தொடர்பாக டிரம்ப் கடந்த வாரம் தான் சில பரபர கருத்துகளைக் கூறியிருந்தார். இதற்கிடையே ஒரே வாரத்தில் வங்கதேசத்திற்குச் செல்லும் 29 மில்லியன், அதாவது 251 கோடி ரூபாயை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க மக்களின் வரிப் பணத்தை மிச்சப்படுத்தும் நடவடிக்கையாக இது எடுக்கப்பட்டுள்ளது.
மீண்டும் அமெரிக்காவை மிகச் சிறந்த நாடாக மாற்றுவேன் என்ற முழக்கத்துடன் அதிபராகப் பதவியேற்ற டிரம்ப், பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இது சர்வதேச அளவில் விவாதங்களையும் கிளப்பி வருகிறார்.

வங்கதேசத்திற்கு நிதி கட்
அவர் அமெரிக்க மக்களின் பணத்தை மிச்சப்படுத்தும் ஒரு முயற்சியாக அமெரிக்க அரசின் செலவுகளைக் குறைக்க டாஜ் (DOGE) என்ற துறையே தனியாக உருவாக்கி, அதற்குத் தலைவராக எலான் மஸ்கையும் நியமித்தார். இதற்கிடையே இந்த டாஜ் அமைப்பு இப்போது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் வங்கதேசம் உட்பட பல நாடுகளுக்குப் போகும் நிதியை ரத்து செய்துள்ளது. இந்த நடவடிக்கையால் வங்கதேசத்திற்குச் செல்லும் 29 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.251 கோடி நிறுத்தி வைக்கப்படுகிறது.
டிரம்ப் பதில்
வங்கதேசத்தில் கடந்தாண்டு ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதில் அமெரிக்காவுக்கு எதாவது தொடர்பு இருக்கிறதா என்று கேட்ட கேள்விக்குக் கடந்த வாரம் தான் பதிலளித்திருந்தார். அதாவது ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்பில் முத்தைய பைடன் அரசுக்குத் தொடர்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு டிரம்ப், "இல்லை இதில் அமெரிக்காவுக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை. வங்கதேச விவகாரத்தை நான் பிரதமர் மோடியிடம் விட்டுவிடுவேன்" என்று கூறியிருந்தார்.
வங்கதேசத்திற்கும் இந்தியாவுக்குமான உறவு என்பது ஹசீனா இருந்தவரைச் சிறப்பாகவே இருந்தது. இரு தரப்பிற்கும் இடையே நல்ல ஒத்துழைப்பும் இருந்தது. ஆனால், கடந்த ஆகஸ்ட் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. பல விஷயங்களில் இரு தரப்பிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. குறிப்பாக ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு அங்குச் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் தாக்கப்பட்டனர். இவை விரிசலை அதிகரித்தது.
அமெரிக்கா வங்கதேசம் உறவு
அதேபோல இந்த காலகட்டத்தில் அமெரிக்கா வங்கதேச உறவு கூட சிறப்பாக இல்லை. அதேநேரம் இப்போது டிரம்ப் வருகைக்குப் பிறகு நல்லுறவை ஏற்படுத்த முயற்சிகள் நடந்து வருகிறது. இப்போது முதற்கட்டமாக வங்கதேசத்தில் ஸ்டார்லிங்க் மூலம் சாட்டிலைட் இணையச் சேவை வழங்குவதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக வங்கதேச அரசு ஸ்டார்லிங்க் உடன் பேச்சுவார்த்தைகளையும் நடத்தி வருகிறது.
வங்கதேசம் நிலை என்ன
வங்கதேசத்தைப் பொறுத்தவரை இட ஒதுக்கீடு விவகாரம் குறித்தே போராட்டம் வெடித்தது. வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்த நிலையல், அதை எதிர்த்து போராட்டம் வெடித்தது. இட ஒதுக்கீடு விவகாரம் முடிவுக்கு வந்த போதும் போராட்டம் மட்டும் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் வங்கதேச பிரதமர் மாளிகையையும் கூட போராட்டக்காரர்கள் முற்றுகையிடவே வேறு வழியின்றி ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
அதேநேரம் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த தலைவர் ஒருவர் வங்கதேசத்தில் ராணுவ தளம் அமைக்க அனுமதி கோரியதாகவும் அதைத் தான் மறுத்ததாலேயே தனது ஆட்சி கவிழ்க்கப்பட்டதாகக் கூறி பகீர் கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications