ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங்
வாஷிங்டன்: ஈரானில் தனது இலக்குகளை எட்டும் தருவாயில் அமெரிக்கா உள்ளதாகவும், அந்த நாடு ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கே மீண்டும் திரும்பும் அளவிற்கு தள்ளப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் போருக்கு நடுவே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று வெள்ளை மாளிகையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். டிரம்ப் அப்போது பேசியதாவது:- ஈரானின் அனைத்து ராணுவ தளவாடங்களையும் அழிக்க இருக்கிறோம். ஈரானும் ராணுவ திறன்கள் பெருமளவு அழிக்கப்பட்டுவிட்டன.

ஈரானை கற்காலத்திற்கு கொண்டு செல்வோம்
அவர்களின் வான், கப்பல்படைகள் ஒழிக்கப்பட்டுவிட்டன. அவர்களின் தலைவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். முக்கியமான பாதுகாப்பு ஆலைகள், உள்கட்டமைப்புகள் பெரும்பாலும் அழிந்துவிட்டன. எண்ணெய் விலை உயர்ந்து வருவது தற்காலிகமானதுதான். ஈரான் எண்ணய் வயல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. மீண்டும் விலைகள் குறைந்துவிடும்.
ஈரான் ஒப்பந்தத்திற்கு முன்வராவிட்டால் கற்காலத்திற்கு ஈரானை அமெரிக்கா கொண்டு செல்லும். அங்குள்ள மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம். அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு மிக தீவிரமான தாக்குதல் நடத்த இருக்கிறோம். ஈரானின் ஏவுகணை ஏவும் திறனும் குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப்பட்டுவிட்டது. முக்கிய பாதுகாப்பு தொழிற்சாலைகள் மற்றும் அடிப்படை கட்டமைப்புகள் "பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்டன.
ஈரான் சிதைக்கப்பட்டுவிட்டது
இதன் மூலம், தெஹ்ரானின் போர்திறன் கிட்டத்தட்ட முழுமையாக சிதைக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகள் பாதிக்கப்படுவதை அமெரிக்கா அனுமதிக்காது" என்றார். ஈரான் மீதான தாக்குதலை கடந்த கால அமெரிக்க போர்களுடன் ஒப்பிட்டு பேசிய டிரம்ப், ஒரு மாதகால நடவடிக்கையில், மிகப்பெரிய அளவில் ராணுவ பலன்களை எட்டியுள்ளோம்.
நாம் இந்த ராணுவ நடவடிக்கையில் 32 நாட்களாக உள்ளோம். அந்த நாடு (ஈரான்) முற்றிலும் சிதைக்கப்பட்டு, இப்போது அது பெரும்பாலும் அச்சுறுத்தலாக இல்லை. ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதைத் தடுப்பது தான் அமெரிக்காவின் முக்கிய இலக்காக உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications