சீன மாணவர்களின் விசாக்களை ரத்து செய்வோம்.. டிரம்ப் நிர்வாகம் தடாலடி! இந்தியர்களுக்கு சிக்கல் வருமா?
வாஷிங்டன்: டிரம்ப் அரசு அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச மாணவர்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே அமெரிக்காவில் படிக்கும் சீன மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. முக்கியமான துறைகளில் படிக்கும் அனைத்து சீன மாணவர்களின் விசாக்களையும் ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.
அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டிரம்ப், முதலில் சட்டவிரோத குடியேறிகள் மீது நடவடிக்கை எடுத்தார். ஆனால், அத்தோடு நிற்காமல் பிறகு சட்டப்பூர்வமாகக் குடியேறியவர்கள் மீதும் கூட பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினார். சிறிய விதிமீறல்களுக்குக் கூட நாடு கடத்தப்படும் சூழல் ஏற்பட்டது. இதனால் அங்கு வாழும் வெளிநாட்டினர் அச்சமடைந்தனர்.

டிரம்ப் அரசு
டிரம்ப் அத்தோடு நிற்கவில்லை.. வெளிநாட்டு மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தார். தவறாகக் கைது செய்யப்பட்ட மாணவர்களின் விசாக்களையும் கூட டிரம்ப் நிர்வாகம் ரத்து செய்ய ஆரம்பித்தது. டிரம்ப் அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளால் 1000+ மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே இப்போது சீன மாணவர்களின் விசாக்களை ரத்து செய்யவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் (தேசிய பாதுகாப்பு சார்ந்த) முக்கியமான துறைகளில் படிக்கும் சீன மாணவர்கள் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய சீன மாணவர்களின் விசாக்களை அமெரிக்க அரசு ரத்து செய்யத் தொடங்கும் என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார். ஏற்கனவே அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்களிடையே குழப்பம் அதிகரித்து வரும் சூழலில், இந்த அறிவிப்பு வந்துள்ளது.
சீன மாணவர்கள்
அமெரிக்காவில் உள்ள மிகப் பெரிய சர்வதேச மாணவர் சமூகமாக இந்தியா இருக்கிறது. இந்தியாவுக்குப் பிறகு சீனாவைச் சேர்ந்த மாணவர்களே அமெரிக்காவில் அதிகபட்சமாக உள்ளனர். 2023-2024 கல்வியாண்டில் சீனாவைச் சேர்ந்த 2.70 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அமெரிக்காவில் படித்து வந்தனர். அதாவது அமெரிக்காவில் உள்ள சர்வதேச மாணவர்களில் நான்கில் ஒருவர் சீனர்கள் என்ற நிலையே இருக்கிறது.
விசா ரத்து
இந்தச் சூழலில் தான் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பில் இருப்போர் மட்டுமின்றி குறிப்பிட்ட துறைகளில் படிக்கும் மாணவர்களின் விசாக்களும் ரத்து செய்யப்படும் என ரூபியோ கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "சீன மாணவர்களின் விசாக்களை ரத்து செய்வதில் தீவிரமாக இருக்கிறோம். உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையுடன் இணைந்து இந்த நடவடிக்கைகளை எடுப்போம். சீன கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் முக்கிய துறைகளில் படிக்கும் சீன மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படும்" என்றார்.
அழுத்தம்
சீனா உடனான உறவை அமெரிக்க பல்கலைக்கழகங்கள் துண்டிக்க டிரம்ப் அரசு பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்து வரும் நிலையில், இப்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமீபத்தில் குடியரசுக் கட்சி எம்பிக்கள் டியூக் பல்கலைக்கழகத்திற்கு வெளிப்படையாகவே இதில் அழுத்தம் கொடுத்தனர். அமெரிக்க அரசு நிதியளிக்கும் முக்கிய ஆய்வு திட்டங்களைச் சீன மாணவர்கள் அணுக முடிவதாகவும் அது தேசிய நலனுக்கு ஏற்றதாக இருக்காது என்பதால் சீனா உடனான உறவை முடித்துக் கொள்ள வேண்டும் என அவர்கள் அழுத்தம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியர்களுக்கு சிக்கல்?
டிரம்ப் நிர்வாகம் சீன மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ள நிலையில், எங்கு இந்திய மாணவர்களின் விசாவும் ரத்து செய்யப்படுமோ எனப் பலருக்கும் அச்சம் இருக்கிறது. இருப்பினும், அமெரிக்கா இந்தியா இடையேயான உறவு வலுவாக இருப்பதால் இந்தியர்களைக் குறிவைத்து இதுபோன்ற நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் எடுக்காது என்றே பரவலாகச் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications