ரூ.13 லட்சத்தை எடுத்து வை.. அப்போ தான் அமெரிக்க விசா.. டிரம்ப் தடாலடி! இந்தியர்களுக்கு சிக்கல்?
வாஷிங்டன்: டிரம்ப் அரசு இப்போது தனது பாண்ட் விசா திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. கடந்த ஆகஸ்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பாண்ட் திட்டத்தின்படி 15,000 டாலர் (கிட்டத்தட்ட ரூ.13 லட்சம்) செலுத்தினால் மட்டுமே அமெரிக்க விசா கொடுக்கப்படும். டிரம்ப் நிர்வாகத்தின் இந்த உத்தரவு ஏன் முக்கியம்.. இதனால் யாருக்குப் பாதிப்பு இருக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களும் வேலைவாய்ப்பிற்காக அமெரிக்கச் செல்ல விரும்புகிறார்கள். பெரும்பாலான வெளிநாட்டினர் சட்டப்பூர்வமாகவே அமெரிக்கா செல்கிறார்கள். ஆனால், சிலர் சட்டவிரோதமான முறையைப் பின்பற்றி, அமெரிக்கா சென்று வேலை செய்கிறார்கள். அப்படிச் சட்டவிரோதமாகச் செல்வோர் இரு வழிகளைப் பயன்படுத்துவார்கள்.

அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டினர்
முதலில் முறைகேடாக அல்லது திருட்டுத்தனமாக அமெரிக்காவுக்குள் நுழைவது.. இன்னொரு வகைச் சுற்றுலா விசாவில் அமெரிக்கா சென்று, அங்கு வேலை செய்வது. சுற்றுலா விசா என்பது சுற்றிப் பார்க்கத் தரப்படும் விசா. அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அமெரிக்காவில் இருந்து கிளம்பிவிட வேண்டும். ஆனால், அமெரிக்காவுக்குச் சுற்றுலா விசாவில் செல்லும் பலரும் அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடுகிறார்கள்.
இதைத் தடுக்க டிரம்ப் அரசு, விசா பாண்ட் திட்டத்தை (US Visa bond) அறிமுகப்படுத்தியிருந்தது. கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் முதற்கட்டமாக அடுத்தாண்டு ஆகஸ்ட் வரை ஒரு ஆண்டு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே இந்தத் திட்டத்தில் இப்போது புதிதாகச் சில நாடுகளை அமெரிக்கா சேர்த்துள்ளது.
பாண்ட் தொகை
இந்தத் திட்டத்தின்படி குறிப்பிட்ட நாடுகளில் இருந்து விசா கோரி விண்ணப்பிப்போர், பாண்ட் தொகை கட்ட வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு விசா வழங்கப்படும். எந்த நாட்டை சேர்ந்தவர்கள் விசா காலம் கடந்த அதிகக் காலம் தங்கியிருப்பதாக அதிகம் புகார் வருகிறதோ.. அந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த லிஸ்ட்டில் சேர்க்கப்படுவார்கள். மேலும், சில நாடுகளில் முதலீடு செய்தாலே வெளிநாட்டவர்களுக்குக் குடியுரிமை வழங்கும். அதுபோன்ற நாட்டில் இருந்து வருவோரும் பாண்ட் தொகை செலுத்த வேண்டும்.
ரூ.13 லட்சம்
இதுபோல வருவோர் அதிகபட்சம் 15,000 டாலர் (கிட்டத்தட்ட ரூ.13 லட்சம்) வரை பாண்ட் தொகையைச் செலுத்த வேண்டும். இந்தத் தொகையைத் தூதரக அதிகாரிகள் நிர்ணயிப்பார்கள். அவர்கள் இந்தத் தொகையைச் செலுத்திய பிறகே விசா பிராசஸ் செய்யப்படுமாம். வேலை அல்லது ஓய்வுக்காக (B-1/B-2) விசா கோரி விண்ணப்பிக்கும் வெளநாட்டினருக்கு இது பொருந்தும்.
இதுபோல பாண்ட் தொகை கட்டி விசா பெறுவோருக்கு வேறு ஒரு முக்கிய கட்டுப்பாடு இருக்கிறது. அதாவது மற்ற நாட்டை சேர்ந்தவர்கள் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படும் எந்த வழிகளில் வேண்டுமானாலும் அமெரிக்காவில் நுழையலாம். ஆனால், பாண்ட் விசா பெறுவோர் பாஸ்டன் லோகன் சர்வதேச விமான நிலையம் (BOS), ஜான் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையம் (JFK) மற்றும் வாஷிங்டன் டல்லஸ் சர்வதேச விமான நிலையம் (IAD) வழியாக மட்டுமே அமெரிக்காவுக்குள் நுழையவும் வெளியேறவும் வேண்டும்.
முழு தொகை கிடைக்குமா?
இதுபோல அமெரிக்காவில் நுழையும் ஒருவர் எல்லா விதிமுறைகளையும் முறையாகப் பின்பற்றினால்.. அவர்கள் நாட்டை விட்டு வெளியேறும்போது பாண்ட் தொகை முழுமையாகத் திரும்பத் தரப்படும்.. இல்லை என்றால் பாண்ட் தொகை தரப்படாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், விசா பெறுவோர் முன்கூட்டியே அமெரிக்காவில் இருந்து வெளியேறுவது, விசா பெற்ற பிறகும் அமெரிக்காவுக்கு வராமல் இருப்பது, அமெரிக்காவில் அவர்கள் அனுமதி மறுக்கப்படுவது போன்ற சூழல்களிலும் அவர்களுக்கு பாண்டு தொகை முழுமையாகத் திரும்பத் தரப்படுமாம்.
இந்தியர்களுக்கு சிக்கல்?
கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட இந்த லிஸ்ட்டில் இப்போது மூன்று நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. காம்பியா, மலாவி மற்றும் சாம்பியா ஆகிய நாடுகள் லிஸ்டில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
ஒரு ஆய்வின்படி, 2023இல் 3,822 இந்தியர்கள் மட்டுமே அமெரிக்காவில் விசா காலம் கடந்து தங்கியுள்ளனர்.. இது வெறும் 1.58% ஆகும். மேலும், இந்த விசா பாண்ட் திட்டத்தில் இந்தியா இதுவரை சேர்க்கப்படவில்லை. எனவே, இந்தியர்கள் இதற்காகக் கவலைப்படத் தேவையில்லை.












Click it and Unblock the Notifications