இந்தியாவுடன் மோதல்.. கனடா மீது கடுங்கோபத்தில் அமெரிக்கா? வந்து விழுந்த கேள்வி! வெள்ளை மாளிகை நறுக்
வாஷிங்டன்: காலிஸ்தான் பயங்கரவாதி கொலை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான உறவு மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் சர்ரேவில் வைத்துக் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார்.

அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அங்குள்ள குருத்துவாரா முன்பு அவரை சுட்டுத் தள்ளியுள்ளனர். இந்த காலிஸ்தான் பயங்கரவாதி கொலை சம்பவம் இந்தியா கனடா உறவை மிக மோசமாகப் பாதித்துள்ளது.
இந்தியா கனடா உறவு: இதில் முதலில் கனடாவில் இருந்த இந்தியத் தூதர் ஒருவர் வெளியேற்றப்பட்ட நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கனடா தூதரும் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதேபோல இரு நாடுகளும் தங்கள் குடிமக்களுக்கு வார்னிங் மெசேஜ்யையும் கொடுத்ததும். அனைத்திற்கும் மேலாகக் கனடா நாட்டினருக்கான விசா நடவடிக்கையை இந்தியா நிறுத்தி வைத்தது. இருப்பினும், இந்தியா தனது குற்றச்சாட்டை மறுத்தே வருகிறது.
இவ்வளவு நடந்த பிறகும் மீண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் நேற்று இந்தியாவைக் குற்றஞ்சாட்டியுள்ளார். நம்பகமான இடத்தில் இருந்து தகவல் வந்ததாகவும் அதன் அடிப்படையிலேயே இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறுவதாகவும் அவர் தெரிவித்தார். இருந்த போதிலும் ட்ரூடோ இதுவரை எந்தவொரு ஆதாரத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா: இந்தச் சம்பவத்தால் கனடாவுக்கும் அதன் அண்டை நாடான அமெரிக்காவுக்கும் சிக்கல் எழுந்துள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்கிடையே அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தால் அமெரிக்கா கனடா உறவில் எந்தவொரு சிக்கலும் இல்லை என்று அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக ஜேக் சல்லிவன் மேலும் கூறுகையில், "அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் உலா வருகிறது. இருப்பினும், இதை நான் திட்டவட்டமாக நிராகரிக்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வாஷிங்டன் போஸ்ட் செய்தி ஒன்றை வெளியிட்டது. அதாவது அமெரிக்கா உட்பட அதன் நட்பு நாடுகளும் இந்தியாவைக் கண்டிக்க வேண்டும் எனக் கனடா விரும்பியதாகவும் இருப்பினும் அமெரிக்கா அதை மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. இதனால் அமெரிக்கா கனடா நாடுகளுக்கு இடையேயான உறவில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்தத் தகவலைத் தான் அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
பின்னணியில் என்ன நடந்தது: கடந்த ஜூன் மாதம் கனடாவின் சர்ரே பகுதியில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து அப்போதே ஃபைவ் ஐஸ் உளவுத்துறை கூட்டமைப்பின் மூத்த அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் சந்தேகம் எழுப்பியுள்ளனர். ஃபைவ் ஐஸ் என்பது ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, இங்கிலாந்து, அமெரிக்காவை உள்ளடக்கிய உளவு கூட்டணியாகும்.
தனிப்பட்ட முறையில் அவர்கள் சந்தேகம் தெரிவித்த போதிலும், டெல்லி ஜி20 மாநாடு வரை இது குறித்து பொதுவெளியில் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை தான் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இது குறித்து முதல்முறையாக பேசியிருந்தார். ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை சம்பவத்தில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருக்கலாம் என தாங்கள் சந்தேகிப்பதாகக் கூறி பரபரப்பைக் கிளப்பினார். இருப்பினும், இந்தியா இந்த குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்தது.












Click it and Unblock the Notifications