"நோ சான்ஸ்!" இறங்கி வந்த பைடன்! ஒட்டுமொத்தமாக நிராகரித்த புதின்! கடுங்கோபத்தில் அமெரிக்கா! என்னாச்சு
வாஷிங்டன்: உலக பொருளாதாரமே இப்போது இக்கட்டான சூழலில் இருக்கும் நிலையில், பைடன் விடுத்த கோரிக்கையை ரஷ்யா நிராகரித்துள்ளது.
ரஷ்ய அதிபர் புதின் கடந்த பிப். மாதம் உக்ரைன் போரை ஆரம்பித்தார். சில நாட்களில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போர் பல மாதங்கள் கடந்தும் கூட இன்னும் தொடர்கிறது.
உக்ரைன் ராணுவம் இந்தளவுக்குப் பதிலடி தரும் என்பதை புதின் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இப்போது படையை வாபஸ் வாங்கினால், அது தோல்வியை ஒப்புக் கொண்டது போல ஆகிவிடும் என்பதால் போரைத் தொடர்ந்து வருகிறார்.
படியில் உருண்டு விழுந்த புதின்.. நீல நிறத்தால் மாறிய கைகள்! ரஷ்ய அதிபர் மாளிகையில் பெரும் குழப்பம்
உக்ரைன் போர்
இரண்டாம் உலகப் போருக்குப் பின், ஐரோப்பாவில் நடைபெறும் மிகப் பெரிய ராணுவ நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. இந்தப் போரில் உலகில் மிகப் பெரிய ராணுவங்களில் ஒன்றான ரஷ்யா மிக மோசமான பின்னடைவைச் சந்தித்து உள்ளது. கடந்த சில மாதங்களாகவே அமைதியாக இருந்த ரஷ்யா இப்போது உக்ரைன் நாட்டின் மின்சார மையங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு மிகப் பெரியளவில் மின்வெட்டுகள் ஏற்படுகிறது. உக்ரைன் நாட்டிலுள்ள மருத்துவமனைகள் கூட இருளில் மூழ்கியுள்ளன.
உலக நாடுகள்
கடந்த சில நாட்களுக்கு முன்பு, மின்சாரம் இல்லாததால் அங்குள்ள மருத்துவமனையில் மருத்துவர் டார்ச் வெளிச்சத்தில் சிறு குழந்தைக்கு ஆப்ரேஷன் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பி இருந்தது. இந்தப் போரால் ரஷ்யா உக்ரைன் மட்டுமின்றி உலகின் பல நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பல நாடுகளில் விலைவாசி உச்சம் தொடுவதற்கும் உக்ரைன் போர் காரணமாக உள்ளது. இதனால் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் அனைத்து நாடுகளும் ஈடுபட்டு வருகின்றனர்.
இறங்கி வந்த பைடன்
இதற்கிடையே உக்ரைன் போர் தொடங்கி பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அமெரிக்க அதிபர் பைடன் ரஷ்ய அதிபர் புதினை நேரடியாகச் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியானது. இது தொடர்பாக பைடன் கூறுகையில், "இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர புதினுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக உள்ளேன். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர இது மட்டுமே ஒரே வழி. ஆனால், பேச்சுவார்த்தைக்கு முன்பு, புதின் தனது ரஷ்யப் படைகளை உக்ரைனில் இருந்து முழுமையாக வாபஸ் பெற வேண்டும்" என்று நிபந்தனையுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
நிராகரித்த புதின்
இந்தச் சூழலில் இருவரும் நேரடியாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினால் போர் முடிவுக்கு வர வாய்ப்புகள் அதிகம் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும், இந்த நிபந்தனையை புதின் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். இது தொடர்பாக அவரது செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், "உக்ரைனில் நாங்கள் கைப்பற்றிய பிரதேசங்களை விட்டுக்கொடுக்க முடியாது. அதேநேரம் எங்கள் இலக்குகளை அடைய நாங்கள் பேச்சுவார்த்தைக்கு எப்போதுமே தயாராகவே உள்ளோம். அதேநேரம் உக்ரைனில் இருந்து படைகளை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை.
ரஷ்ய நிலைப்பாடு
ரஷ்யா உடன் இணைக்கப்பட்ட புதிய பிரதேசங்களை அமெரிக்கா இன்னும் கூட புதிய பிரதேசங்களை ரஷ்ய கூட்டமைப்பின் ஒரு பகுதியாக இன்னுமே கூட அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை.. இது சுமுக முடிவை ஏற்படுத்தும் பரஸ்பர முயற்சிகளை நிச்சயம் பாதிக்கவே செய்யும்" என்று அவர் தெரிவித்தார். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று பைடன் சொன்ன போதிலும், ரஷ்யா அதை நிராகரித்துள்ளது.
உலக நாடுகள்
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, உக்ரைன் போர் இப்போதைக்கு முடிவுக்கு வராது என்பதைப் போலவே தோன்றுகிறது. அமெரிக்க அதிபர் பைடன் மட்டுமின்றி, பிரான்ஸ் அதிபர் மக்ரோன் கூட போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனக் கூறியுள்ளார். தனது அமெரிக்கப் பயணத்தை முடித்துவிட்டு பிரான்ஸ் திரும்பியதும் புதினுடன் பேச உள்ளதாகவும் போரை முடிவுக்குக் கொண்டு வரத் தயாராக இல்லை என்றால் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் என மக்ரோன் தெரிவித்தார். ரஷ்ய அதிபர் புதினுடன் நல்ல நட்பில் இருக்கும் மக்ரோனே இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.