சர்ருனு எகிறி அடித்த தங்கம்.. திடீரென படுவேகமாக உயர என்ன காரணம்.. இப்போது வாங்கலாமா! விலை குறையுமா
வாஷிங்டன்: தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 700 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. இதனிடையே தங்கத்தின் விலை வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்பது குறித்துப் பார்க்கலாம்.
சர்வதேச அளவில் என்றைக்கும் தங்கம் தான் எளிய மக்களின் முக்கிய சேமிப்பாகவும் முதலீடாகவும் இருக்கும். முதலீடு என்றால் என்னவென்றே தெரியாதவர்களும் கூட தங்கத்தை வாங்கி வைப்பார்கள்.
ஏனென்றால் ஆபத்தான காலகட்டத்தில் நமக்கு எப்போதும் கை கொடுப்பது தங்கம் தான். கொரோனா பெருந்தொற்று காலத்தில் கூட இக்கட்டான நிலையில் சிக்கியவர்களுக்குத் தங்கம் தான் பெரியளவில் உதவியது.

தங்கம்: சொத்து, பங்கு என எதில் முதலீடு செய்திருந்தாலும் அதை எந்த நேரத்திலும் உடனடியாக பணமாக்க முடியாது. உதாரணமாக நாட்டின் பொருளாதாரம் மோசமாக இருந்தால் பங்குச் சந்தை மதிப்பு குறைந்துவிடும். சொத்து கூட நாட்டில் போர் ஏற்பட்டால் காலியாகிவிடும்.. ஆனால், தங்கம் மட்டும் உலகம் முழுக்க எடுத்துச் செல்லக் கூடிய பொருள். இதன் மூலம் எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட்டாலும் கூட தங்கத்தை எடுத்துச் சென்றுவிட்டால் பிழைத்துக் கொள்ளலாம்.
இதன் காரணமாகவே தங்கத்தின் மீது எப்போதும் பலரும் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர். நம்ம ஊர் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் கூட குறைந்தது 400 கிராம் தங்கத்தை வாங்க வேண்டும் என்றே தொடர்ந்து கூறி வருகிறார். சேமிப்பு மட்டுமின்றி, கலாச்சார ரீதியாகவும் தங்கத்திற்கு நமக்குப் பிணைப்பு உள்ளது. திருமணம் தொடங்கி அனைத்து சுப நாட்களிலும் தங்கமே பிரதானம்..

இது தவிர உலக நாடுகளும் கூட தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. இந்தியா கடந்த சில ஆண்டுகளாகவே 7, 8 டன் தங்கத்தை வாங்கி வருகிறது. கடந்தாண்டில் ரஷ்யா 32 டன் தங்கத்தையும், சீனா 40 டன்னுக்கு மேல் தங்கத்தையும், துருக்கியும் 32 டன் தங்கத்தையும் வாங்கியுள்ளன. அதேபோல வளர்ந்த நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரும் கூட இப்போது தங்கத்தை வாங்க ஆரம்பித்துவிட்டன. அதாவது இந்தியா, ரஷ்யா, சீனா, துருக்கி, சிங்கப்பூர் என அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கிக் குவித்து வருகின்றன.
தங்கம் விலை உயர்வு: சர்வதேச அளவில் இப்படி இருக்கும் போது இந்தியாவிலும் தங்கத்தின் விலை தொடர்ந்து வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் 22 கேரட் தங்கம் ஒரே நாளில் 728 ரூபாய் உயர்ந்து 48 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.. சில நாட்களாக ஏற்றம் இல்லாமல் இருந்த தங்கத்தின் விலை இப்போது ஒரே நாளில் உச்சம் தொட்டுள்ளது. தங்கம் மிக முக்கிய முதலீடாக இருக்கும் நிலையில், இப்போது தங்கம் வாங்கச் சரியான நேரமா.. வரும் காலங்களில் விலை குறையுமா என்பது குறித்துப் பார்க்கலாம்.
இன்று சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரே நாளில் 728 ரூபாய் உயர்ந்து 48 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.. சர்வதேச அளவில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றம் காரணமாகவே இந்தியாவிலும் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. இந்தியா தனது பெரும்பாலான தங்கத்தை இறக்குமதியே செய்கிறது. குறிப்பாக உலகளவில் தங்கத்தை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாகவும் தங்கம் இருக்கிறது. இதனால் சர்வதேச அளவில் சற்று விலை ஏறினாலும் அது இந்தியச் சந்தையிலும் எதிரொலிக்கும்.
ஏன் உயர்கிறது: மேலும், அமெரிக்காவிலும் இப்போது இக்கட்டான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கே சில மாதங்களுக்கு முன்பு வரிசையாக சில வங்கிகள் திவாலானது. அப்போது தங்கம் விலை உயர்ந்தது. அதேபோல இப்போது ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியும் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பல வங்கிகளும் திவாலாகும் என முதலீட்டாளர்கள் நினைப்பதால் பல டாப் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.

இது மட்டுமின்றி அமெரிக்க மத்திய வங்கியின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்கிறது. அதைத் தொடர்ந்து வட்டி விகிதம் 0.25% உயர்த்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி விகிதம் உயர்ந்தாலே பங்குச் சந்தை சரியும். இதனால் தங்கத்தின் விலை தானாகவே அதிகரிக்கும்.
இப்போது அமெரிக்காவில் ஒரு அவுன்ஸ் அதாவது 28.35 கிராம் தங்கத்தின் விலை 2015 டாலர் அதாவது 1.64 லட்சமாக உள்ளது. அதேநேரம் இந்தியாவில் வரி உள்ளிட்டவை சேர்த்துத் தங்கத்தின் சில்லறை விற்பனை விலை இதைக் காட்டிலும் சற்று அதிகமாகவே இருக்கிறது.
சென்னையில் இப்போது ஒரு சவரன் 728 உயர்ந்து 45648 ரூபாயாக உள்ளது. அதேபோல ஒரு கிராம் 92 உயர்ந்து 5706 ரூபாயாக உள்ளது. அதேபோல ஒரு கிராம் வெள்ளி 1.30 உயர்ந்து 81.80 ரூபாயாக உள்ளது. வரும் காலத்தில் வட்டி விகிதம் தொடர்ந்து சில காலம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தங்கம் மேலும் உயரும் என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications