"வாவ்" கண்டம்! 15 கோடி ஆண்டுக்கு முன் தொலைந்துபோன ஆர்கோலாண்ட்.. ஒரு வழியாக கண்டுபிடித்த ஆய்வாளர்கள்
வாஷிங்டன்: சுமார் 15 கோடி ஆண்டுகள் பழமையான ஆர்கோலாண்ட் மாயமான நிலையில், அது இப்போது எங்கே இருக்கிறது என்பது குறித்து சில முக்கிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
இந்த உலகம் எப்போதும் இதுபோல இருந்தது இல்லை. எரியும் பிழம்பாக இருந்த உலகம், பல கோடி வருடங்களாக ஏற்பட்ட மாற்றங்களுக்குப் பிறகு இப்போது இந்த நிலையை அடைந்துள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் அதில் ஏகப்பட்ட மாற்றங்கள் அரங்கேறியுள்ளது.

பல கண்டங்கள், நாடுகள் இந்த காலத்தில் தோன்றியுள்ளது. அவை கடலிலும் மூழ்கி இருக்கிறது. அப்படி பண்டைக் காலத்தில் நடந்த மாற்றங்கள் குறித்துக் கண்டறிய ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
ஆர்கோலாண்ட்: இவை வரும் காலத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் நடக்கும் என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. அதன்படி சுமார் 15.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியா உடன் இருந்த பகுதி ஆர்கோலாண்ட், அதன் பிறகு கண்டம் தனியாகப் பிரிந்தது. அதன் பிறகு அந்த கண்டம் எங்கே போனது.. என்ன ஆனது என்றே தெரியவில்லை. பல காலமாக நீட்டித்த இந்த மர்மத்திற்கு இப்போது விடை கிடைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் இருந்து இப்படியொரு தனி கண்டனம் பிரிந்தது அனைத்து ஆய்வாளர்களுக்கும் தெரியும். அப்படிப் பிரிந்து சென்ற ஆர்கோலாண்ட் எங்குச் சென்றது என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, இப்போது நெதர்லாந்தில் உள்ள உட்ரெக்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த கேள்விக்கு விடையைக் கண்டுபிடித்துள்ளனர்.
தென்கிழக்கு ஆசியா: இந்த ஆர்கோலாண்ட் தென்கிழக்கு ஆசியாவின் கிழக்கு தீவுகளுக்கு அடியில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இது குறித்து நெதர்லாந்து ஆய்வாளர் எல்டர்ட் அட்வோகாட் கூறுகையில், "இது ஆஸ்திரேலியாவின் வடக்கே சென்றிருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், இப்போது அது தென்கிழக்கு ஆசியாவில் இருப்பதைக் கண்டறிந்துள்ளோம்" என்றார்.
15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தச் சம்பவம் நடந்த போது என்ன நடந்திருக்கும் என்பதை ஆய்வாளர்கள் மீண்டும் கணினி மூலம் உருவாக்கி ஆய்வு செய்தனர். அதில் இந்தோனேசியா மற்றும் மியான்மரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த பண்டைய கண்டத்தின் பகுதிகள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இருப்பினும், முழுமையாக அந்த கண்டனம் எங்கே இருக்கிறது என்பதை ஆய்வாளர்களால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
ஆஸ்திரேலியா: இந்த ஆர்கோலாண்டு சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அங்கே இருந்துள்ளது. அது ஆஸ்திரேலியா உடன் அப்போது இருந்துள்ளது. டெக்டோனிக் தகடுகளில் ஏற்பட்ட நகர்வு காரணமாக அது ஆஸ்திரேலியாவில் இருந்து பிரிந்துள்ளது. காலப்போக்கில் அது தென்கிழக்கு ஆசியா பகுதியில் சிதறியதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
ஆர்கோலாண்ட் உண்மையில் முழுமையாக மாயமாகவில்லை.. அது இப்போது இந்தோனேசியாவின் கிழக்கே உள்ள தீவுகளாக உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதேநேரம் ஆர்கோலாண்டிற்கு என்ன ஆனது.. அது துல்லியமாக இப்போது எங்கே எப்படி இருக்கிறது என்பதைக் கண்டறியக் கூடுதல் ஆய்வுகள் நமக்குத் தேவை.
பெருங்கடல்: இந்த ஆய்வு அப்பகுதியில் நிலவி வந்த காலநிலையைப் புரிந்து கொள்ள உதவுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆர்கோலாண்டு வடக்கு நோக்கி நகர்ந்த பிறகு, அது துண்டுகளாகச் சிதறிய நிலையில், அதைச் சுற்றி பெருங்கடல்களும் உருவாகியிருக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.இந்தோனேசியாவில் பல தனித்துவமான தாவரங்கள் மற்றும் விலங்குகள் இருக்கவும் இது ஒரு காரணமாகும்.












Click it and Unblock the Notifications