"கொலை முயற்சி!" எலான் மஸ்கிற்கே இந்த நிலைமையா! அவரே சொல்வதை பாருங்க! ஆளும் தரப்பு மீது பரபர புகார்
வாஷிங்டன்: தன்னை கொல்ல முயற்சிகள் நடப்பதாகத் தெரிவித்துள்ள உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், அதற்கான சில பகீர் காரணங்களையும் பகிர்ந்துள்ளார்.
உலகின் பணக்காரர்கள் வரிசையில் இப்போது முதல் இடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். இவருக்குச் சொந்தமான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்கள் மூலம் இவர் பல பில்லியன் டாலர் சம்பாதித்து வருகிறார்.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், இவர் ட்விட்டர் நிறுவனத்தை ஒட்டுமொத்தமாக வாங்கினார். ஒரு ஷேருக்கு சுமார் 50 டாலர் விகிதம் 44 பில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டரை இவர் வாங்கினார்.

எலான் மஸ்க்
இடையில் போலிக் கணக்குக்கள் தொடர்பாகத் தெளிவாகத் தகவல்கள் இல்லை எனக் கூறி, எலான் மல்க் பின்வாங்க முயன்றாலும் கூட போர்ட் உறுப்பினர்கள் அவர் மீது வழக்கு தொடரப்போவதாக எச்சரிக்கை விடுத்தனர். இதனால் வேறு வழியில்லாமல் அவர் ட்விட்டர் தளத்தை வாங்கத் தள்ளப்பட்டார் என்றே கூடச் சொல்லலாம். இருப்பினும், ட்விட்டரை வாங்கிய முதல் நாளில் இருந்தே பல அதிரடிகளைச் செய்து வருகிறார். முதல் நாளே அவர் டாப் அதிகாரிகளை வேலையைவிட்டு நீக்கினார். பின்னர், ட்விட்டர் ஊழியர்கள் சுமார் 50% பேரை ஒரே நாளில் வீட்டிற்கு அனுப்பினார்,

கொலை முயற்சி
அத்துடன் நில்லாமல் தொடர்ந்து சர்ச்சையான கருத்துகளையும் அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார். இதற்கு அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தாலும் கூட, பெரும்பாலும் எலான் மஸ்க் கூறும் எதிர்ப்புகளே அதிகம் இருந்து வருகிறது. இதற்கிடையே சமீபத்தில் ட்விட்டர் ஸ்பேஸில் நடந்த நிகழ்வில் உரையாடி எலான் மஸ்க் பல்வேறு விஷயங்கள் குறித்து மிக விரிவாகப் பேசினார். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவர், தான் கொலை செய்யப்படவும் வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவித்தார்.

ஹண்டர் பைடன்
எலான் மஸ்க் இப்போது உள்ள அங்குள்ள பைடன் அரசுக்கு எதிராகத் தொடர்ச்சியாகக் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். அதிலும் குறிப்பாக பைடனின் மூத்த மகன் ஹண்டர் பைடன் லேப்டாப் விவகாரத்தை ட்விட்டர் மூடி மறைத்ததாகவும் அது தொடர்பாக விரைவில் புதிய தகவல்களை வெளிவரும் என சொல்லியிருந்தார். இதற்கிடையே அந்த ட்விட்டர் ஸ்பேஸ் நிகழ்வில் பேசிய மஸ்க், "என்னைக் கொலை செய்யச் சதித் திட்டத்தைச் சிலர் தீட்டி வருகின்றனர். இதனால் நான் என்ன நடந்தாலும் திறந்தவெளி காரில் பயணிக்கக் கூடாது என முடிவெடுத்துள்ளேன்.

சுட்டு கொல்ல வாய்ப்பு
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் விரைவில் எனக்கு எதாவது மோசமாக நடக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக என்னைச் சுட்டுத் தள்ளவும் கூட வாய்ப்புகள் உள்ளது. அவர்கள் விரும்பினால் ஒருவரைக் கொல்வது அவ்வளவு கடினம் அல்ல.. இது போன்ற சம்பவங்கள் நடக்காது என்று நான் நம்பினாலும் கூட நிச்சயமாக சில ஆபத்துகள் இருக்கவே செய்கின்றது. நான் எப்போதும் பேச்சுரிமைக்கும் கருத்துரிமைக்கும் ஆதரவாகவே இருப்பேன்.. இங்கு யாரும் நம்மை ஆதிக்கம் செலுத்தாதே எதிர்காலமே அனைவரது விருப்பமாக உள்ளது. இதற்கு முக்கியமே கருத்துரிமை தான். அதைக் காக்கவே நான் நடவடிக்கை எடுத்து வருகிறேன்" என்றார்.

ஹண்டர் பைடன் லேப்டாப் விவகாரம்
எலான் மஸ்க் கடந்த சில வாரங்களாகவே ஹண்டர் பைடன் லேப்டாப் ஸ்டோரி தொடர்பாகப் பேசி வருகிறார். ஹண்டர் பைடனின் லேப்டாப்பில் இருந்த தகவல்கள் எனச் சொல்லி அமெரிக்கச் செய்தி நிறுவனமான நியூயார்க் போஸ்ட் கடந்த 2020 அதிபர் தேர்தலுக்கு வெளியிட்டது. இதில் ஒபாமா காலத்தில் துணை அதிபராக இருந்த பைடன் உக்ரைனில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அதற்கான ஆதாரங்களை அவரது மகன் ஹண்டர் பைடனின் லேப்டாப்பில் இருந்து எடுத்துள்ளதாகவும் கூறி இருந்தனர். தேர்தலுக்கு சில நாட்கள் முன்னால் வெளியான இந்த செய்தி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

கட்டுப்பாடு
இது தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும், இது பொய்யான தகவல்களைப் பரப்ப வாய்ப்புள்ளதாகக் கூறி ட்விட்டர் நிறுவனம், இது தொடர்பான தகவல்களைக் கட்டுப்படுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய பின்னரே, சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. ஹண்டர் பைடன் லேப்டாப் ஸ்டோரி கட்டுப்படுத்துவதன் மூலம் பைடனுக்கு ஆதரவாக ட்விட்டர் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. அதாவது ஆபாசப் படங்களை எந்தளவுக்கு முடக்க வேண்டுமோ அந்தளவுக்கு இந்த லேப்டாப் ஸ்டோரியை ட்விட்டர் கட்டுப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications