டிரம்ப்பிற்கு விழுந்த மரண அடி! இப்படி நடக்கும்னு யாருமே எதிர்பார்க்கல! சொந்த நாட்டில் கிளம்பிய பூதம்
வாஷிங்டன்: கடந்த சில மாதங்களாகவே உலகெங்கும் டிரம்ப் குறித்தே பேச்சாக இருக்கிறது. இதற்கிடையே சொந்த நாடான அமெரிக்காவில் டிரம்ப்பிற்கு எந்தளவுக்கு ஆதரவு இருக்கிறது என்பது குறித்த சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த முடிவுகள் சுவாரசியமாகவே இருக்கிறது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபராகக் கடந்த ஜனவரி மாதம் டிரம்ப் பொறுப்பேற்றார். அதன் பிறகு அவர் எடுக்கும் பல முடிவுகள் சர்ச்சையைக் கிளப்புவதாகவே இருந்துள்ளது. சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றுவது, சட்டப்பூர்வமாகக் குடியேறியவர்களுக்கு அழுத்தம் கொடுப்பது, ரெசிப்ரோகல் வரி என அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் சர்வதேச அளவில் பேசுபொருள் ஆகிறது.

டிரம்ப்
இதற்கிடையே டிரம்ப்பிற்கு அவரது சொந்த நாடான அமெரிக்காவில் மவுசு எப்படி இருக்கிறது. அமெரிக்க மக்கள் டிரம்ப் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்த கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. பொதுவாக அமெரிக்காவில் தொடர்ச்சியாக ஒரு அரசு குறித்த சர்வே வெளியாகிக் கொண்டே இருக்கும்.
குறையும் டிரம்ப் செல்வாக்கு
அதாவது நம்ம ஊரில் தேர்தல் சமயத்தில் மட்டுமே கருத்துக்கணிப்பு எடுப்பார்கள். ஆனால், அமெரிக்காவில் அப்படி இல்லை. தேர்தல் இருக்கோ.. இல்லையே தொடர்ச்சியாகக் கருத்துக்கணிப்புகள் இருக்கும். ஒரு அதிபர் மீது மக்களுக்கு என்ன மாதிரியான பார்வையைக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய இது உதவும். இதை அப்ரூவல் ரேட்டிங் (approval rating) என்பார்கள்
இப்போது வெளியாகியுள்ள புதிய கருத்துக் கணிப்பில், பெரும்பான்மையான அமெரிக்கர்கள் அதாவது 53% பேர் டிரம்ப் மீது அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாகக் குடியேற்ற விவகாரத்தில் டிரம்ப்பின் நடவடிக்கைகளை அவர்கள் ஏற்கவில்லை. கடந்த பிப்ரவரி மாதத்தை விட இந்த மாதம் அவர் மீதான அதிருப்தி அதிகரித்து இருக்கிறது.
கருத்துக்கணிப்பு
கடந்த ஏப்ரல் 18 முதல் 22 வரை வாஷிங்டன் போஸ்ட்- ஏபிசி நியூஸ்- இப்சோஸ் இணைந்து இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. இதில் குடியேற்ற விவகாரத்தில் டிரம்ப் மீதான அதிருப்தி அதிகரித்துக் கொண்டே இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. குடியேற்றக் கொள்கை விவகாரத்தில் சுமார் 53% பேர் டிரம்ப் செயல்பாடுகளை ஏற்கவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் அதிருப்தி 50%க்கு கீழ் தான் இருந்தது. ஆனால், இப்போது அது கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்த சர்வேயின்படி எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்களில் 90% பேர் டிரம்ப் செயல்பாடுகள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. கட்சி சார்பு இல்லாமல் இருப்போரில் சுமார் 56% பேர் டிரம்ப் மீது அதிருப்தியில் உள்ளனர். டிரம்ப்பின் சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியிலும் சுமார் 11% பேர் டிரம்ப் செயல்பாடுகளில் அதிருப்தியை வெளிப்படுத்தி இருப்பதாக அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் அதிருப்தி
உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் நாடு கடத்தல் நடவடிக்கைகளை எடுப்பது, பெடரல் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் இருப்பது ஆகியவை காரணமாகவே டிரம்ப் மீதான அதிருப்தி அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவில் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்து வசித்து வந்த கில்மர் அப்ரிகோ கார்சியா என்பவரை டிரம்ப் நிர்வாகம் நாடு கடத்தியது அது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 42% அமெரிக்கர்கள் இந்த நபரை மீண்டும் அமெரிக்கா அழைத்து வர வேண்டும் என்கிறார்கள்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது குடியேற்ற விவகாரத்தில் டிரம்ப் மீது அதிருப்தியே அதிகமாக இருக்கிறது. சுமார் 48% மக்கள் குடியேற்ற விவகாரத்தில் டிரம்ப் எல்லை மீறி நடவடிக்கை எடுப்பதாகக் கருதுகிறார்கள். மேலும் சுமார் 51% பேர் சந்தேக நபர்களை நீதிமன்ற விசாரணைகள் இல்லாமல் எல் சால்வடாருக்கு அனுப்புவதை எதிர்க்கின்றனர்.

அதிபர் டிரம்ப்
டிரம்ப் தன்னை சட்டவிரோதமாகக் குடியேற்றத்தைக் கடுமையாக எதிர்க்கும் நபராகக் காட்டிக் கொள்கிறார். இதனாலேயே நாடுகடத்தலை அவர் தீவிரமாக எடுத்து வருகிறார். இருப்பினும், அவர் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில்லை என்பதால் மக்கள் அதிருப்தி அதிகரித்து வருகிறது.
ஏனென்றால் டிரம்ப் தரப்பு சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்தவர்களை மட்டுமின்றி சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் நுழைந்தவர்களுக்கும் அழுத்தம் கொடுத்து வருகிறது. சிறு சிறு விதிமீறல்களுக்குக் கூட நாடு கடத்தும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதனால் சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் வசிப்போரும் கூட எங்கு தாங்கள் நாடுகடத்தப்படுவோமோ என்ற பயத்தில் உள்ளனர். குறிப்பாக அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் சிக்கலில் இருக்கிறார்..
வெளிநாட்டு மாணவர்கள்
அங்குப் படிக்க வெளிநாட்டு மாணவர்களுக்கு F-1 விசா வழங்கப்படுகிறது. இருப்பினும், அவர்கள் சிறு விதிமீறல் அல்லது தவறாகக் கைது செய்யப்பட்டு இருந்தால் கூட அவர்களின் F-1 மாணவர் விசா ரத்து செய்யப்பட்டு, உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற உத்தரவை எதிர்கொள்கிறார்கள். இதுவும் அங்குப் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
இந்தியா சீன மாணவர்கள்
சமீபத்தில் தான் டிரம்ப் நாடு கடத்தல் நடவடிக்கைக்கு எதிராக இந்திய மாணவர்களும் சீன மாணவர்களும் இணைந்து சட்டப் போராட்டத்தை அங்குத் தொடங்கினர். ஏற்கனவே 3 இந்திய மாணவர்கள் டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த நிலையில், 2 சீன மாணவர்கள் அதில் இணைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர். சிறு சிறு விதிமீறல்களுக்காக எஃப் 1 விசா ரத்து செய்யப்படும் முடிவை டிரம்ப் நிர்வாகம் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் நாடு கடத்த உத்தரவிடுவதை நிறுத்த வேண்டும் என அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

கடும் பாதிப்பு
டிரம்ப் நிர்வாகத்தின் இது போன்ற நடவடிக்கைகளால் வெளிநாட்டு மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த இரண்டு மாதங்களாகவே மாணவர்களைக் குறிவைத்து நாடுகடத்தல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது மாணவர்களின் பேக் கிரவுண்டை செக் செய்யும் அதிகாரிகள் அதில் எதாவது கைது இருந்தால் உடனடியாக விசாவை ரத்து செய்து, நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடுகிறார்கள். எதற்காகக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. அதில் நீதிமன்றம் என்ன உத்தரவிட்டுள்ளது என்பதைக் கண்டுகொள்வதில்லை. இதனால் அப்பாவி மாணவர்கள் பலரும் பாதிக்கப்படுகிறார்கள்.
கிளம்பிய பூதம்
கடந்த 2 மாதங்களாக அங்கு 170 கல்வி நிறுவனங்களில் சுமார் 1,100 மாணவர்கள் இதுபோன்ற நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளனர். அமெரிக்காவில் சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்களே அதிகம் படித்து வருகிறார்கள். இந்தச் சூழலில் டிரம்ப் அரசின் நடவடிக்கைகள் இந்த மாணவர்களையே அதிகம் பாதிக்கிறது. இது மட்டுமின்றி டிரம்ப்பின் குடியேற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவில் நாடு முழுக்க போராட்டங்களும் நடந்து வருகிறது. வார இறுதி நாட்களில் அங்குள்ள எல்லா மாகாணங்களிலும் போராட்டம் நடந்து வருகிறது. இதுவும் டிரம்ப் நிர்வாகத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.












Click it and Unblock the Notifications