"இதுதான் யூதர்களின் அரசியல்".. இஸ்ரேலை விடாமல் அமெரிக்கா ஆதரிப்பது ஏன் தெரியுமா? இப்படியொரு காரணமா?
வாஷிங்டன்: ஹமாசுக்கு எதிராக பாலஸ்தீனத்தின் காசாவில் போர் தொடங்கியது, லெபனானில் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினருடன் மோதினாலும் கூட இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது. மேலும் நேற்றைய தினம் ஈரானில் இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலுக்கு உதவ அதிபர் ஜோபைடன் அமெரிக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டார். இப்படி இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு தெரிவிப்பதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணம் வெளியாகி இருக்கிறது.
இஸ்ரேல் என்பது பாலஸ்தீனம் மற்றும் லெபனான் உடன் எல்லையை பகிர்ந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசாவை கைப்பற்றுவதில் இஸ்ரேல் மற்றும் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு மோதல் நடந்தது. இந்த மோதல் கடந்த ஆண்டு அக்டோபர் 7 ம் தேதி போராக மாறியது. இஸ்ரேல், காசாவிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு லெபனான் நாட்டில் இருந்து இஸ்ரேலை தாக்கி வருகிறது. ஹிஸ்புல்லாவுக்கு பேஜர் தாக்குதல், வாக்கி டாக்கி தாக்குதல், வான்வெளி தாக்குதலை தொடர்ந்து தரைவழி தாக்குதலை இஸ்ரேல் பதிலடியாக கொடுத்து வருகிறது. ஹிஸ்புல்லாவின் தலைவர் நஸ்ருல்லா உள்பட பல தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனால் ஈரான் தற்போது நேரடியாக களமிறங்கி உள்ளது. நேற்றைய தினம் ஈரான் 180 முதல் 200 ஏவுகணைகளை இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் நோக்கி ஏவி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா எச்சரித்த நிலையில் அதேபோல் ‛அட்டாக்' நடந்துள்ளது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால் மோசமான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்தும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.
இதனால் கண்சிவந்த ஜோ பைடன், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகள் ஈரானின் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டார். இதன் மூலம் இஸ்ரேலுக்கு உதவியாக அமெரிக்கா நிற்பது தெளிவாகி உள்ளது. இந்நிலையில் தான் பலருக்கும் தற்போது அமெரிக்கா ஏன் இஸ்ரேலை விட்டு கொடுக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதன் பின்னணியில் சில விஷயங்கள் உள்ளன. அதாவது அமெரிக்காவில் வசிக்கும் யூதர்களும், அதிகாரத்தில் இருக்கும் யூதர்களும் தான். அதாவது அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் 2 சதவீதம் பேர் யூதர்களாக உள்ளனர். அதாவது 7.5 மில்லியன் (75 லட்சம் மக்கள்) மக்கள் யூதர்களாக உள்ளன.
அதேபோல் 118 வது யுனைடெட் ஸ்டேட்ஸ் காங்கிரஸ் (118th United States Congress)-ல் 33 யூதர்கள் எம்பிக்களாக உள்ளனர். யுனைடெட் ஸ்டேட்ஸ் காங்கிரஸ் என்பது அமெரிக்காவின் செனட் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளின் சபையை உள்ளடக்கியதாகும். இதில் 9 யூதர்கள் செனட்டர்களாகவும், 26 பேர் அமெரிக்க பிரதிநிதிகளின் சபை உறுப்பினர்களாகவும் உள்ளனர். கடந்த முறை 34 யூதர்கள் இதில் பொறுப்பு வகித்த நிலையில் தற்போது எண்ணிக்கை ஒன்று குறைந்துள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த வேளையில் யூதர்களின் ஓட்டுகளும், அந்த எம்பிக்களின் ஆதரவு என்பதும் கட்சிகளுக்கு வேண்டும். அந்த வகையில் அமெரிக்காவில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி என்று எந்த வேட்பாளர்கள் அதிபரானாலும் கூட யூதர்களின் நாடான இஸ்ரேலை பகைத்து கொள்வது இல்லை. இதனால் காலம் காலமாக அமெரிக்கா - இஸ்ரேல் இடையேயான பந்தம் என்பது தொடர்ந்து வருகிறது.
அந்த வகையில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இதனால் யூதர்களின் ஆதரவை பெறும் வகையில் தற்போதைய அதிபர் இஸ்ரேலுக்கு உதவி செய்யும்படி அமெரிக்க படைகளுக்கு நேற்றும் உதவி செய்தது.
மேலும் யூதர்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்கா தொடர்ந்து ஆதரித்து வந்தது. 1948 ல் இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டபோது அதனை அமெரிக்கா தான் முதலில் ஆதரித்தது. மேலும் 1967ல் நடந்த ஆறு நாள் போரில் இஸ்ரேல், தனி ஆளாக ரஷ்யாவுக்கு ஆதரவாகவும், அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட எகிப்து, சிரியாவை வீழ்த்தி இருந்தது.
இதனால் மேற்கு ஆசியாவில் ரஷ்யாவின் ஆதிக்கத்தை முறியடிக்க இஸ்ரேலின் ஆதரவு தேவை என்று அமெரிக்கா உணர்ந்தது. இதுவும் அமெரிக்கா - இஸ்ரேல் இடையேயான நீண்டகால பந்தத்துக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இதனால் இஸ்ரேலுக்கு தொடர்ந்து அமெரிக்க ராணுவ உதவிகளை தாராளமாக வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications