கொரோனா மாதிரியே இருக்கே.. சீனாவில் இருந்து வருவோருக்கு தடை? அமெரிக்காவில் வலுக்கும் கோரிக்கை
வாஷிங்டன்: சீனாவில் நிமோனியா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ள நிலையில், சீனா மீது பயண தடையை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்காவில் அதிகரித்துள்ளது.
சீனாவில் கடந்த சில காலமாகவே நிமோனியா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக அங்குள்ள குழந்தைகள் மத்தியில் இந்த நிமோனியா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.

இதற்கான காரணம் துல்லியமாக தெரியவில்லை. உலக சுகாதார அமைப்பு இது குறித்து சீனாவிடம் கேட்ட நிலையில், புதிய நோய் கிருமிகளால் இந்த பாதிப்பு ஏற்படவில்லை என்றும் ஏற்கனவே தெரிந்த பாதிப்பால் தான் இது ஏற்பட்டதாக கூறியிருந்தது.
நிமோனியா பாதிப்பு: இதற்கிடையே சீனாவில் இப்போது இந்த நிமோனியா பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில், சீன நாட்டவர் அமெரிக்கா வர பயண தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் எம்பிக்கள் குழு அதிபர் பைடனுக்கு கடிதம் எழுதியுள்ளது. சீனாவில் குழந்தைகளிடையே சுவாச நோய்கள் மற்றும் நிமோனியா பாதிப்பு ஏற்படுவது குறித்து சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு கடிதம் எழுதிய நிலையில் இது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா: இது குறித்து அவர்கள் தங்கள் கடிதத்தில், "சீனாவில் திடீரென சுவாச கோளாறு பரவி வருகிறது. இதனால் துளியும் தாமதம் இல்லாமல் அமெரிக்கா சீனா இடையே போக்குவரத்து தடையை விதிக்க வேண்டும். கடந்த காலங்களில் பார்க்கும் போது சீனா பொது சுகாதார நெருக்கடிகள் பற்றி பொதுவெளியில் பொய்களை சொல்லி உள்ளது. கொரோனா விவகாரத்தில் கூட உண்மையை மழுங்கடித்தது. வெளிப்படையாக இருக்கவில்லை... இன்னும் கொரோனா தோற்றம் குறித்து நமக்கு தெரியவில்லை.
உலக சுகாதார அமைப்பும் சீனாவுக்கு சாதமாகவே இயங்கி வருகிறது. எனவே, அவர்கள் நடவடிக்கை எடுக்கும் வரை நாம் காத்திருக்கக் கூடாது. அமெரிக்கர்களின் ஆரோக்கியத்தையும், நமது பொருளாதாரத்தையும் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பயண தடை: அதாவது, இந்தப் புதிய நோயால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து மேலும் நாம் அறியும் வரை, அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பயணத்தை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும். இப்போது சீனாவுக்கு நாம் பயண தடையை விதித்தால் அது மரணம், லாக் டவுன், நிமோனியா பாதிப்பில் இருந்து நமது நாட்டை காக்கும்" என்று அதில் கூற்பபட்டுள்ளது. கொரோனா காலத்தில் தான் இதுபோன்ற பயண தடைகள் இருந்தது. அதன் பிறகு இப்போது மீண்டும் இது எழுந்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
மேலும், கொரோனா பரவ தொடங்கிய காலத்தில் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு வருபவர்களுக்கு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தடை விதித்திருந்தார். கடந்த 2020 ஜன. 31ஆம் தேதி அவர் தடை விதித்த நிலையில், அது உலக நாடுகளிடம் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. அவர் பாகுபாடு காட்டுவதாகவும் விமர்சனம் எழுந்தது. ஆனால், அவரது முடிவு சரி என்பதையே வரலாறு காட்டியதாகவும் இந்த எம்பிக்கள் குழு கடிதம் எழுதியுள்ளது.
சீனா சொல்வது என்ன: திடீர் நிமோனியா பாதிப்பு குறித்து சீனாவும் விளக்கமளித்தே வருகிறது. சமீபத்தில் இது தொடர்பாக பேசிய அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ, அதிகரித்து வரும் சுவாச நோய்கள் சீனாவில் மட்டும் இல்லை என்றும் இது சர்வதேச பிரச்சினை என்றும் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "சமீபத்தில் சீனாவின் சில பகுதிகளில் குழந்தைகளிடையே காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கிறது.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சீனா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. தற்போது சீனாவில் நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்கிறோம். இதனால் உலக நாடுகள் உடனான சீனாவின் உறவு எந்த விதத்திலும் பாதிக்காது. உலக நாடுகளில் இருந்து மக்கள் வழக்கம் போல சீனாவுக்கு வந்து செல்லலாம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications