ப.சிதம்பரம் வாக்களிக்காதது ஏன்? களையிழந்த கண்டனூர் வாக்குச்சாவடி! பின்னணி இது தான்!
சிவகங்கை: காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் நேற்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கவில்லை.
சிவகங்கை மாவட்டம் கண்டனூரில் உள்ள பெத்தாள் ஆச்சி பள்ளியில் ப.சிதம்பரம் ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்களிப்பது வழக்கமாகும்.
இந்நிலையில் நேற்று அவர் வாக்களிக்க வருகை தராததன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

முன்னாள் மத்திய அமைச்சர்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு டெல்லி, சென்னை, இரண்டு இடங்களில் வீடுகள் இருந்தாலும், பூர்வீக இல்லம் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம் கண்டனூரிலேயே தேர்தலின் போது வாக்களிப்பது அவரது வழக்கமாகும். கண்டனூரில் ப.சிதம்பரம் இல்லம் அமைந்துள்ள மோதிலால் தெருவை பொறுத்தவரை 7-வது வார்டுக்குள் வருகிறது. இந்த வார்டில் திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் நிறுத்தப்படாத நிலையில் சுயேச்சை வேட்பாளர்களாக இருவரும் பாஜக, அமமுக, வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

மொத்தம் 15 வார்டுகள்
திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் நிறுத்தப்படாததற்கு காரணம் லோக்கல் அண்டர்ஸ்டாண்டிங் அரசியல் தான் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. கண்டனூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக 10 வார்டுகளிலும், 3 வார்டுகளில் காங்கிரசும் வேட்பாளர்களை நிறுத்தியது. மீதமுள்ள இரண்டு வார்டுகளான 7 மற்றும் 15 வது வார்டில் திமுக, காங்கிரஸ் சார்பில் யாரும் வேட்பாளர்களாக நிறுத்தப்படவில்லை.

ப.சிதம்பரம் வரவில்லை
தனது சொந்த வார்டில் திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் போட்டியிடாத காரணத்தால் தான் ப.சிதம்பரம் வாக்களிக்க வரவில்லை என காரணம் தெரிவிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அவருக்கு ஏற்கனவே கோவா மாநில சட்டமன்றத் தேர்தல் பணிகள் தலைக்கு மேல் உள்ளதால் அதை கவனிப்பதற்கே அவருக்கு நேரம் போதவில்லை என்கிறார்கள் உள் விவரம் அறிந்தவர்கள். இதனிடையே ப.சிதம்பரம் இல்லம் அமைந்துள்ள கண்டனூரில், பேரூராட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கண்டனூர் வாக்குசாவடி
கண்டனூர் வாக்குச்சாவடியை பொறுத்தவரை ஒவ்வொரு தேர்தலின் போதும் ப.சிதம்பரம் வருகையால் களைகட்டும். ஓட்டுப்போட்டுவிட்டு ப.சிதம்பரம் தெரிவிக்கும் கருத்தை அறிவதற்காக உள்ளூர் தொலைகாட்சி சேனல் முதல் ஆங்கில செய்தித்தொலைக்காட்சி சேனல் வரை அங்கு முகாமிட்டிருக்கும். ஆனால் நேற்று இது போல் எதுவும் இல்லாததால் கண்டனூர் வாக்குச்சாவடி மையம் களையிழந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications