ஓடிடியில் அதிரடி வெற்றி.. 20 நாளில் 10 கோடி வியூஸ் பெற்ற கன்னட படம்.. கதை இதுதான்!
சென்னை: கன்னட திரையுலகில் வெளியாகி கவனம் பெற்ற த்ரில்லர் படமான "செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம்" தற்போது ஓடிடி தளங்களில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. திரையரங்குகளில் சாதாரண வரவேற்பைப் பெற்ற இந்த படம், டிஜிட்டல் வெளியீட்டிற்கு பிறகு எதிர்பாராத அளவில் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
நடிகர் விஜய் ராகவேந்திரா நடித்துள்ள இந்த படம், கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியானது. பின்னர் ஏப்ரல் மாதம் Amazon Prime Video ஓடிடி தளத்தில் வெளியானதும், பார்வையாளர்கள் மத்தியில் வேகமாக பரவியது. வெளியான 20 நாட்களுக்குள் 10 கோடி பார்வை நிமிடங்களை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க சாதனையாக பார்க்கப்படுகிறது.

கதை என்ன சொல்லுகிறது?
இந்த படம் ஒரு சாதாரண சீரியல் கில்லர் கதையாக மட்டும் இல்லாமல், ஒரு போலீஸ் அதிகாரியின் மனப்போராட்டத்தை மையமாகக் கொண்டு நகர்கிறது. படத்தின் ஆரம்பத்திலேயே இரட்டை கொலை நடக்கிறது. அதில் கொலை நடந்த இடத்தில் கொலைகாரன் ஒரு பொருளை வைத்து விட்டு போகிறான் இதை வைத்து தான் கதை நகருகிறது. ஆனால் எதிர்பாராத திருப்பங்கள் வந்து கடைசி வரை படத்தை பார்க்க வைத்து விடுகிறது.
மேற்குக் கர்நாடகாவின் மலைப்பகுதியான 'ஆனேகடா' பகுதியில் தொடர் கொலைகள் நடக்கின்றன. அந்த வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் சீதாராம், ஒவ்வொரு தடவையும் கொலைகாரன் பக்கத்தில் போனாலும் கடைசியில் நடக்கும் சம்பவங்கள் ரசிகர்களையும் ஏமாற்றம் அடைய வைத்து விடுகிறது.

அந்த இன்ஸ்பெக்டர் ஒரு சூப்பர் ஹீரோ அல்ல; பயப்படும், மனஅழுத்தத்தில் சிக்கிக்கொள்ளும் ஒரு சாதாரண மனிதர். இந்த இயல்பான அணுகுமுறையே கதைக்கு வலு சேர்க்கிறது. விசாரணை மட்டுமல்லாமல், அவரது குடும்ப பின்னணி மற்றும் கிளைமேக்ஸ் எமோஷனல் காட்சிகளும் படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.
அதிலும் அவருடைய அக்கா ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொள்ளும்போது இளைஞராக இருந்த ஹீரோவிடம் அவருடைய அக்காவை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று அப்பா அழுத்தம் கொடுக்கிறார். அதனால் அவரும் வழியே இல்லாமல் அக்காவை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறார். பிறகு இவர் இன்ஸ்பெக்டர் ஆன பிறகு அவருடைய அக்கா அதே ஊருக்கு குடும்பத்துடன் வருவது கடைசியில் கதையில் ஒரு முக்கிய டுவிஸ்ட்க்கு காரணமாகி விடுகிறது. இந்த சென்டிமென்ட் பல தமிழ் மக்களில் பார்த்தது தான்.
தொழில்நுட்பமும் நடிப்பும்
படத்தின் ஒளிப்பதிவு மலையக கர்நாடகாவின் மர்மமான சூழலை அழகாகப் பதிவு செய்கிறது. குறிப்பாக இருண்ட காட்சிகளிலும் பதட்டத்தை உருவாக்கும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. பின்னணி இசையில் வீணையை பயன்படுத்திய விதம், சீரியல் கில்லர் படங்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தருகிறது.
விஜய் ராகவேந்திரா, சீதாராம் கதாபாத்திரத்தில் மிகுந்த நிதானத்துடன் நடித்துள்ளார். அதிக ஆக்ஷன் இல்லாமல், மனநிலையை மையமாக வைத்து அவர் வெளிப்படுத்தும் நடிப்பு பாராட்டுக்குரியது.

ராட்சசன் தாக்கம்
ராட்சன் படத்தை கொஞ்சம் சுட்டிருக்கிறார்கள் படக்குழுவினர். ராட்சசனில், கடத்தப்படுவோர் வாசலில் பொம்மை வைப்பதை போல இதில் வீணை பொம்மை வைக்கிறார் கொலையாளி. ஆனால் ராட்சசன் அளவுக்கு இறுக்கமான திரைக்கதை இல்லை. நடிகர்கள் பலரும் அனுபவம் இல்லாதவர்கள் என்பதால் அமெச்சூர்த்தனம் அவ்வப்போது எட்டிப் பார்க்கிறது.
இருப்பினும், கன்னட திரையுலகிற்கு இதுபோன்ற கதைகள் புதிது என்பதால் ஓடிடியில் வரவேற்பை பெற்றுள்ளது. இவரா அவரா என கொலையாளி பற்றி வேறு மாதிரி க்ளூ கொடுத்து போலீசை போலவே பார்வையாளர்களையும் ஏமாற்றியதாலும் படம் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், ஏற்கனவே பல மலையாள த்ரில்லர் படங்களில் பார்த்து சலித்துப்போன மாவைதான் எடுத்து ஷிமோகா ஏரியா சூழலில் தோசையாக வார்த்துள்ளார் இயக்குநர்.
OTT Review: போலீஸ்காரர்களின் இதயத்தை பிடுங்கும் கொலைகாரன்! நடுங்க வைக்கும் அஞ்சாம் பாதிரா.. ரிவ்யூ
மொத்தத்தில், "செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம்" ஒரு வேகமான ஆக்ஷன் த்ரில்லர் அல்ல. ஆனால் மன அழுத்தம், எமோஷனல் மனிதர்களுக்குள் இருக்கும் குறைகள் மற்றும் குற்ற விசாரணையை இணைக்கும் ஒரு மெதுவான, நிதானமான த்ரில்லர். பெரும் சலசலப்பு இல்லாமல் அமைதியாக வந்து, ஓடிடியில் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்த படம், கன்னட சினிமாவுக்கு புதிய பாதையை காட்டும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.













Click it and Unblock the Notifications