Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்தடுத்து ஆடியோ ரிலீஸ்- ஒன்றிய அண்ணா திமுகவும் சசிகலாவின் பங்கும்.... பா. கிருஷ்ணன்

Subscribe to Oneindia Tamil

இப்போதெல்லாம் ஒன்றியம் என்ற சொல்லைக் குறிக்காமல் அரசியல் விமர்சனம் எழுத இயலாது.

அதனால்தான் அனைத்திந்திய அண்ணா திமுகவை இன்றைக்கு ஒன்றிய அண்ணா திமுக என்று குறிப்பிடலாம் என்று தோன்றுகிறது. அக்கட்சி ஒன்றாகத்தானே இருக்கிறது, பிளவு ஏதும் இல்லையே. அப்படியிருக்க, கட்சிக்குள் அனைவரும் ஒன்றியதாக எந்த நிகழ்வும் இல்லையே என்று கேட்கலாம். ஆனால், அதுதான் உண்மை. இந்த முறை அதைச் செய்தது சசிகலாவின் ஆடியோ ரிலீஸ்தான்!

எம்ஜிஆர் மறைவை அடுத்து, அண்ணா திமுக இரண்டாகப் பிரிந்து இணைந்தது கூட உண்டு. ஆனால், வெளியிலிருந்து யாரும் அதைச் செய்யவில்லை. கட்சியின் தலைமைகளே விட்டுக் கொடுத்து, இரு அணிகளும் இணைந்தன.

Paa Krishnan views on Sasikala’s audio and AIADMK

ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பின், ஓ பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதவியிலிருந்து இறங்கியது, தர்மயுத்தம் நடத்தியது, என்று பிளவுகள் வந்தன. அது ஆர்.கே. நகர் தேர்தல் வரை நீடித்தது. எல்லாம் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைக்குச் சென்றது வரையில். அதற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியும் தர்மயுத்தம் நடத்திய ஓ. பன்னீர்செல்வமும் இணைந்த அல்லது இணைக்கப்பட்ட பின்னர் கட்சியில் வெளிப்படையான பிளவு ஏற்படவில்லை.

ஆர்.கே. நகர் தேர்தலில் ஏற்பட்ட பிளவு, டிடிவி தினகரன் தலைமையில் தனிக்கட்சிக்கு வழியமைத்ததே தவிர, கட்சி பிளவுண்டதாக அமையவில்லை.

ஆளும் கட்சியாக இருந்த அண்ணா திமுகவில் பிளவு என்ற நிலையே ஏற்படாமல், முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சராக ஓ. பன்னீர்செல்வமும் நீடித்தனர். எனினும், இரு தரப்பினரின் ஒற்றுமையில் அவ்வப்போது சந்தேகம் ஏற்படும் வகையில் நிகழ்வுகளும் ஏற்பட்டன. ஆட்சியில் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்குப் போதிய முக்கியத்துவம் தரப்படவில்லை என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தி, "அணிகள் இணைந்தன, மனங்கள் இணையவில்லை" என்று பஞ்ச் டயலாக் பேசியவர் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் டாக்டர் வா.மைத்ரேயன். மைத்ரேயன் கூறிவிட்டாலும், மற்றவர்கள் "எங்க அப்பன் குதிருக்குள் இல்லை" என்பதைப் போலத்தான் பேசுகிறார்கள்.

இரட்டைத் தலைமையை அண்ணா திமுகவின் அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொண்டதாகப் பிரகடனம் செய்தாலும் இல்லை என்பதும் அவ்வப்போது வெளிப்படுவதுண்டு. அதனால், ராஜன் செல்லப்பா "இரட்டைத் தலைமைக்குப் பதில் ஒற்றைத் தலைமை" என்று குரல் எழுப்பினார்.

சட்டப் பேரவைத் தேர்தல் வந்தபோது யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை அறிவிக்க நேர்ந்தபோது, இன்னொரு பிரிவு தலை தூக்கியது. இதை அறிவிப்பதற்கு இரவு பகல் என்று சில தினங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இறுதியில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அதை ஓ.பன்னீர்செல்வமே அறிவித்ததும் சுமுகமானது. ஓபிஎஸ் விட்டுக் கொடுத்ததால், கட்சியில் ஒன்றியம் நீடித்தது.

ஆனால், தேர்தலில் அண்ணா திமுக வெற்றி வாய்ப்பை இழந்து பிரதான எதிர்க்கட்சி ஆனதால் மீண்டும் தலைதூக்கியது விரிசல். எதிர்க்கட்சித் தலைவராக ஓபிஎஸ் அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதையும் எடப்பாடி பழனிசாமி சாதுர்யமாகக் கைப்பற்றினார். ஓபிஎஸ் கையெழுத்துப் போட்டுவிட்டார். ஒற்றுமைக்கு வர இருந்த பாதிப்பு தாற்காலிகமாக நீங்கியது.

தற்போது ஒரு மாத காலமாக வி.கே. சசிகலாவின் ஆடியோ கட்சியில் பிளவை ஏற்படுத்துமோ என்ற பேச்சு தொடங்கியது. ஆரம்பத்தில் அமமுக கட்சியினருடன் அவர் பேசுகிறார் என்று அண்ணா திமுக அலட்சியம் செய்தது. ஆனால், முன்னாள் அமைச்சர் ஆனந்தன், முன்னாள் எம்பி சின்னசாமி ஆகியோர் சசிகலாவுடன் பேசிய ஆடியோ வெளியானதால், "ஓபிஎஸ்ஸும் பேசுவாரோ" என்ற கேள்விக் குறி தோன்றியது.

பல தரப்பினருடன் சசிகலா உரையாடியதன் ஆடியோவை முதலில் அலட்சியம் செய்த அண்ணா திமுகவினர் முன்னாள் அமைச்சர் என்று தலைவர்கள் மீதும் தொடர்பு வந்ததால், "எங்கே கட்சி நம் கைவிட்டுப் போய்விடுமோ" என்று கவலைப்பட ஆரம்பித்தனர். போதாக் குறைக்கு ஓபிஎஸ் தரப்பினரின் மவுனமும் இதற்கு வலுவூட்டியது.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்தார் எடப்பாடி. சட்டப் பேரவையின் அண்ணா திமுக தலைவராக எடப்பாடி மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவர், கொறடா, பொருளாளர் ஆகிய பதவிகளுக்கான அறிவிப்பு இல்லை. அதற்கான தேர்தல் திங்கள்கிழமை (2021, ஜூன் 14) நடத்தி, ஓபிஎஸ் ஒரு வழியாகத் துணைத் தலைவர் ஆகிவிட்டார். இது இன்னொரு பிரிவு முயற்சியைத் தடுத்துவிட்டது. அதே சமயம் ஆடியோவில் சசிகலாவுடன் பேசிய அண்ணா திமுகவினரும் களை எடுக்கப்படுகின்றனர்.

எது எப்படியோ சகிகலாவின் ஆடியோ ரிலீஸ் அண்ணா திமுகவில் ஏதோ ஒரு வகை ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

"அந்த அம்மா வந்துடுவுங்களோ" என்ற பயமும் பதற்றமும் அவர்களை ஒன்று சேர்த்துவிட்டன. சசிகலா வருவது கூட அவர்களைப் பெரிதும் பாதிக்காது. அவரைத் தொடர்ந்து மன்னார்குடி குடும்பம் வந்துவிடும் என்ற அச்சம்தான் முக்கியம். அதனால்தான் அனைத்து தரப்பினரும் ஒரே குரலில் "சசிகலாவைக் கட்சிக்குள் சேர்க்கக் கூடாது" குரல் எழுப்பினர்.

"கட்சியைச் சரி செய்யலாம். எல்லோரையும் அரவணைக்கலாம்" என்று ஆடியோவில் திரும்பத் திரும்ப சசிகலா கூறி வருகிறார். அப்படி ஒரு பணியைக் கட்சிக்குள் வந்துதான் செய்ய வேண்டியதில்லை. இப்படி ஏதாவது பேசினாலே கூட போதும். சசிகலாவை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றைப் புள்ளியில் கட்சியில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துவிடுகிறார்கள். இதுதான் கடந்த காலங்களில் இருந்ததும், இப்போது நீடிப்பதும்.

ஒரு வகையில் சசிகலா அண்ணா திமுகவை ஒன்றுபடுத்தியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+