இந்திய இலக்கியத்தை.. மேலும் ஒருபடி உயர்த்தும் 'ஜெய்ப்பூர் புக்மார்க் 2024'! எதிர்பார்ப்பு தீவிரம்
ஜெய்ப்பூர்: இந்திய இலக்கிய சூழலில் எழுத்தாளர்கள், வாசகர்கள், பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் என இலக்கியம் சார்ந்து அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைப்பது மிக சவாலான பணி. அதைதான் 'ஜெய்ப்பூர் புக்மார்க்' தொடர்ந்து செய்து வருகிறது. இந்த ஆண்டு 11வது முறையாக இப்பணியை ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்கிறது.
சர்வதேச அளவில் இந்திய இலக்கியங்கள் சமீப காலமாக பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த விவாதங்களை இன்னும் கூர்மைபடுத்த புத்தக திருவிழாக்கள், இலக்கிய திருவிழாக்கள் அவசியமாக இருக்கிறது. 'ஜெய்ப்பூர் புக்மார்க்'(JBM) இதைதான் செய்துக்கொண்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக இலக்கியம் தொடர்புடையவர்களை ஒருங்கிணைத்து வருகிறது. அந்த வகையில் 'ஜெய்ப்பூர் புக்மார்க் 2024' விழா வரும் பிப்ரவரி 1 முதல் 5 வரை நடைபெறுகிறது.

இது குறித்து ஜெய்ப்பூர் இலக்கிய விழாவின் எழுத்தாளர், வெளியீட்டாளர் மற்றும் இணை இயக்குநரான நமிதா கோகலே கூறுகையில், "புத்தக வணிகத்தில் புதிய ஒருங்கிணைப்பு மற்றும் பரிமாற்றத்திற்கு ஜெய்ப்பூர் புக்மார்க் தொடர்ந்து பங்களித்து வருகிறது. எங்களின் 2024 பதிப்பு, இந்தியா முழுவதிலும் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து அனுபவமிக்க பேச்சாளர்களையும், பார்வையாளர்களையும் ஈர்க்கும்" என்று கூறியுள்ளார்.
ஜெய்ப்பூர் புக்மார்க்கின் இயக்குநர் மனிஷா சௌத்ரி கூறுகையில், "புதிய உரையாடல்களைத் தொடங்கவும், பழைய நட்பைப் புதிய வீரியத்துடன் முன்னெடுக்கவும், தேசிய மற்றும் சர்வதேச வெளியீட்டாளர்களை இணைக்கவும் ஜெய்ப்பூர் புக்மார்க் 2024 அவசியமானதாக இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.
மொழிபெயர்ப்பில் தனது அர்ப்பணிப்பை மேம்படுத்தி, இந்திய பதிப்பகத்தின் செழுமையான பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் 'ஜெய்ப்பூர் புக்மார்க் 2024' விழா பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கிறது. அதன்படி 5 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், 4 முக்கிய அமர்வுகள் திட்டமிட்டிருக்கின்றன.
அதன்படி, முதல் அமர்வில் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், புத்தகம் வெளியீடுகள், பாட்காஸ்ட்கள் மற்றும் ஓடிடி தளங்களுக்கு இடையே வளர்ந்து வரும் நெருக்கம் குறித்து விவாதிக்கப்படும்.
இரண்டாவது அமர்வில் இந்தியப் பதிப்பகத்தின் தலைசிறந்தவர்களின் சாதனைகளை மையமாகக் கொண்ட உரையாடல்கள் இடம்பெற்றிருக்கும். மூன்றாவதாக குழந்தைகளின் கல்வி குறித்து விரிவாக கலந்துரையாடல்கள் இருக்கும். நான்காவது அமர்வில் ஜெர்மனி, ஸ்பெயின், நைஜீரியா, மாலத்தீவுகள், மொரீஷியஸ், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளை சேர்ந்தை வெளியீட்டாளர்கள் கலந்துரையாடுவார்கள்.
இது தவிர 10 அமர்வுகளும் திட்டமிடப்பட்டுள்ளன. அதாவது, இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளில் பதிப்புத்துறையில் பெண்களின் பங்களிப்பு குறித்து உரையாடல்கள் இருக்கும். இதில் ஊர்வசி புட்டாலியா மற்றும் ரிது மேனன் ஆகியோர் மூத்த பதிப்பாளரான சிவபிரயாவுடன் கலந்துரையாடுகிறார்கள்.
இரண்டாவதாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் பதிப்பு துறை குறித்து அமித் வர்மாவுடன் மேரு கோகலே, மார்கஸ் டு சவுடோய், சார்லஸ் கோலியர், சஃபிர் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்துரையாடுகின்றனர். இதனை தொடர்ந்து அகராதிகள், சொற்களஞ்சியம் என மொழியில் மேற்கொள்ளப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து உதய நாராயண சிங்குடன் மீதா லால், டயானா மிக்கேவிசியென்கே, ஆஸ்கார் புஜோல் ஆகியோர் கலந்துரையாடலை மேற்கொள்கின்றனர்.
மேலும், பாட்காஸ்ட்கள் மற்றும் புத்தகங்கள், இந்தியாவில் கல்வி, புத்தக வடிவமைப்பில் உள்ள சவால்கள், புத்தக விற்பனையில் மேற்கொள்ளப்பட வேண்டிய விஷயங்கள், எல்லைகளை கடந்து புத்தகங்களை பதிப்பித்தல், கொண்டு சேர்த்தல், பிரிட்டன் மற்றும் இந்தியா இலக்கிய அறிவை பகிர்ந்துக்கொள்ளுதல், சர்வதேச இலக்கியங்களை அடையாளப்படுத்துதல் என மொத்தம் 10 அமர்வுகள் நடைபெறுகின்றன.
இவை அனைத்துமே சர்வதேச இலக்கிய சூழலில் இந்தியாவின் மதிப்பையும், அங்கீகாரத்தையும் நிச்சயம் உயர்த்தும் என எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், வாசகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனவே, 'ஜெய்ப்பூர் புக்மார்க் 2024' விழா மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications