மாநகர தந்தை, கென்டகி கர்னல் விருது, துணை முதல்வர், திமுக தலைவர்-முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெற்றிப் பாதை
சென்னை: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் "மாநகரத் தந்தை" என்ற பெருமையை 1996 உள்ளாட்சி தேர்தலில் பெற்ற தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் 2 வது முறை 2001ஆம் ஆண்டு மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2006-ல் தமிழகத்தின் உள்ளாட்சித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், 2009ம் ஆண்டு தமிழகத்தின் முதல் துணை முதல்வர் பொறுப்பையும் ஏற்றார்.
மக்கள் நலத் திட்டங்களில் மிகுந்த அக்கறை கொண்ட தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பல திட்டங்களை நிறைவேற்றினார். மக்களிடம் எளிமையாகப் பழகக்கூடியவர். கழக முன்னோடிகளை மதித்து, அவர்களுக்குப் பொற்கிழி எனும் நிதி வழங்கி உதவியவர்.

விருதுகள்
தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் பொது வாழ்வுப் பணிகளைப் பாராட்டி லண்டன் ஐரிஷ் பல்கலைக்கழகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளன.
அமெரிக்காவின் " கென்டகி கர்னல் " விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட்
கார்கில் போர் நடந்தபோது, நிதி திரட்டுவதற்காக சென்னையில் நடந்த கிரிக்கெட் காட்சிப் போட்டியில் பங்கேற்று, புகழ்பெற்ற வீரர்களான கபில்தேவ், ஸ்ரீகாந்த் ஆகியோருடன் சிறப்பாக விளையாடினார்.
தமிழகம் வந்த ஆஸ்திரேலிய அரசியல் பிரமுகர்களைக் கொண்ட கிரிக்கெட் அணியுடனும், தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான அணி விளையாடி வெற்றி பெற்றது.

டெசோ
ஈழ மக்கள் சுய உரிமை பெறுவதற்கான தனது நிலைப்பாட்டை வலியுறுத்துவதற்காக பல்வேறு இயக்கங்களை ஒருங்கிணைத்து தொடங்கப்பட்ட டெசோ அமைப்பின் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை சர்வதேச அரங்கின் கவனத்துக்கு கொண்டு சென்ற மு.க.ஸ்டாலின், ஐநா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நவநீதம் பிள்ளை அவர்களை நேரில் சந்தித்து தீர்மான நகல்களை வழங்கி, அவற்றை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியதை தொடர்ந்து ஐநாவின் சார்பில் ஈழ மண்ணில் நேரடி ஆய்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

சாதனைகள்
துணை முதல்வராக பொறுப்பேற்றவுடன் நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் திட்டங்கள், கூட்டுக் குடிநீர் திட்டங்கள், பாதாள சாக்கடை பணிகள் என எத்தனையோ சாதனைகளை பட்டியலிட்டாலும் அனைவரின் நெஞ்சங்களிலும் நீங்காத இடம்பிடித்த ஒரு நிகழ்வும் நடந்தேறியது. மாநிலம் முழுவதும் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களில் தானே பங்கேற்று மகளிர் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்தவர்களுக்கு நிதியுதவி, கலைஞர் வீடு வழங்கும் திட்டம் என அத்தனை திட்டங்களையும் பலநூறு மணிநேரங்கள் நின்றபடியே மு.க.ஸ்டாலின் வழங்கிய சம்பவம் புதிய கின்னஸ் சாதனைக்கு ஒப்பானது.
1996 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் நாள் முதல் 2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் நாள் வரை சென்னை மாநகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, சென்னையில் 10க்கும் மேற்பட்ட பாலங்களை கட்டி போக்குவரத்து நெரிசலுக்கு முடிவைக் கொண்டு வந்தார். பொது சுகாதாரம், சாலை வசதிகள், பூங்காக்கள் போன்றவற்றில் தளபதி செயல்படுத்திய திட்டங்கள் சென்னையை சிங்கார சென்னையாக மாற்றியது. மேலும் மழைக்காலம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் விரைந்து செயல்பட்டு, பாதுகாப்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டதால் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளார். தொடர்ந்து 2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் நாள் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு 2002ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் நாள் வரை 8 மாதங்கள் மேயராக பணியாற்றினார்.
2006 ம் ஆண்டு உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், 2009 ம் மேமாதம் தமிழக துணை முதல்வராகவும் ஆட்சிப்பணியில் பல்வேறு பொறுப்புகளை வகித்த மு.க.ஸ்டாலின் எண்ணிப் பார்க்க முடியாத மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றினார்.
2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் பொது கொளத்தூர் தொகுதியில் நின்றபோது, பொய் பிரச்சாரங்களின் பலத்தில் நின்ற எதிர்கட்சியிடம் பெரும்பான்மை இடங்களில் திமுக தோற்றபோதும் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இன்றைக்கும் தினசரி மக்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் வாரிசு என்பதை நிரூபித்து வருகிறார்.
தொடர்ந்து 2016, 2021 சட்டமன்ற தேர்தல்களில் அதே தொகுதியில் வென்று, முதல்வர் பொறுப்பேற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications