ஜாதி, மத வேறுபாடுகளை கடந்து விளையாடுவதே மிகப்பெரிய வெற்றி.. ஈஷா கிராமோத்சவம் பற்றி சத்குரு பெருமிதம்
கோவை: ஈஷா சார்பில் நடத்தப்பட்டு வரும் கிராமோத்சவம் திருவிழாவில் மக்கள் ஜாதி, மத வேறுபாடுகளை கடந்து விளையாடுவதே ஒரு பெரிய வெற்றி என சத்குரு தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய அளவில் நடத்தப்பட்ட 15-வது ஈஷா கிராமோத்சவம் திருவிழாவில் 25,000 கிராமங்களில் இருந்து 60,000 வீரர்கள் பங்கேற்று விளையாடினர். குறிப்பாக, கிராமங்களில் ஜாதி, மதம், வயது என பல வேறுபாடுகளை கடந்து ஒரே அணியாக ஒற்றுமையாக விளையாட இத்திருவிழா காரணமாக அமைந்துள்ளது.

இது குறித்து சத்குரு அளித்துள்ள பேட்டியில், "கிராமோத்சவம் திருவிழா வெற்றிகரமாக நடந்துள்ளது. 25,000 கிராமங்களில் இருந்து 60,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடினர். இது ஒரு மகத்தான இயக்கமாக நடந்துள்ளது. இது வெறும் போட்டிக்காக மட்டும் அல்ல, எல்லோரையும் ஒன்றிணைக்கும் கருவியாக இதனை நடத்தியுள்ளோம்.

குறிப்பாக, கிராமங்களில் ஜாதி, மதம், வயது என பல வேறுபாடுகளை கடந்து ஒரே அணியாக ஒற்றுமையாக விளையாட இத்திருவிழா காரணமாக அமைந்தது. இதுவே மிகப்பெரிய வெற்றி தான். வாழ்க்கையில் ஒரு விளையாட்டுத்தனம் வேண்டும். இல்லையென்றால் நம் வாழ்க்கையை வாழ்வதே மிகப்பெரிய சுமை போல ஆகிவிடும். இதனால் தான் பல விதமான மன நோய்கள் நமக்கு வருகின்றன. இதைத் தாண்டி வாழ வேண்டும் என்றால் விளையாட்டுத்தன்மை வேண்டும்.

நாம் செய்யும் தொழிலில், குடும்பத்தில் ஒரு விளையாட்டுத்தன்மை வேண்டும். இதற்காகத்தான் இந்த கிராமோத்சவம் திருவிழா உற்சாகமாக நடக்கிறது. இந்த உற்சாகம் எல்லோருக்கும் வர வேண்டும். நமது கிராமங்களில் மக்கள் ஏழ்மையால் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அந்த வலிகளை தாண்டிப் போக வேண்டும் என்றால் ஒரு விளையாட்டுத்தனம் ரொம்ப அவசியமானது.

இது நம் கலாச்சாரத்தில் இருந்தது. எந்த ஒரு செயலைச் செய்தாலும், அதில் ஆட்டம் பாட்டம் எல்லாமும் இருந்தது. எல்லாவற்றையும் விட்டுவிட்டு மாடு போல வேலை செய்கிறோம். இதனால் ஆனந்தமில்லாமல் கிராம மக்கள் கஷ்டப்படுகிறார்கள். நம் நாட்டில் மக்களிடையே கொண்டாட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக இதனை மீண்டும் செயல்படுத்தியுள்ளோம்." எனத் தெரிவித்துள்ளார்.


















Click it and Unblock the Notifications