பொது சிவில் சட்டம் என்றால் என்ன? அரசியல் சாசனம் சொல்வது என்ன? 6 பாயிண்டுகள்! முழு விவரம்
டெல்லி: பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. பொது சிவில் சட்டம் தொடர்பான சில அடிப்படை கேள்வி பதில்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மதங்களின் தனிநபர் சட்டம் என்பது திருமணம், விவகாரத்து, குழந்தைகள் பாதுகாப்பு, பரம்பரை தொடர்பானவையாகும். ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு தனிநபர் சட்டத்தை பின்பற்றுகிறது. இப்படியான அனைத்து மதங்களின் தனிநபர் சட்டங்களுக்கும் பொதுவான நெறிமுறைகளைக் கொண்டதாக பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்கிறது மத்திய அரசு.
பொது சிவில் சட்டம் தொடர்பான இத்தகைய விவாதங்களில் தவறாமல் இடம்பெறுவது அரசியல் சாசன பிரிவுகள். அரசியல் சாசனத்தின் 44-வது பிரிவானது, . இதனைத்தான் பிரதமர் மோடியும் முன்மொழிந்துள்ளார். இந்திய அரசியல் சாசனத்தின் இந்த வழிகாட்டுதலின்படியே பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்பது பிரதமர் மோடியின் நிலைப்பாடு.

பொது சிவில் சட்டம் என்பது என்ன?
- மதங்கள், பழக்கவழக்கங்கள், பாரம்பரியம் அடிப்படையிலான தனிநபர் சட்டங்களை நீக்கிவிட்டு அனைவருக்கும் பொதுவான சட்டத்தை கொண்டு வருதல்தான் பொது சிவில் சட்டம் Uniform Civil Code அல்லது Common Civil Code எனப்படுகிறது.
அரசியல் சாசனத்தின் ஒரு பகுதியா பொது சிவில் சட்டம்?
இந்திய அரசியல் சாசனத்தின் 44-வது பிரிவானது, இந்தியா முழுவதற்கும் அனைத்து குடிமக்களுக்குமான பொதுவான ஒரு சிவில் சட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கலாம் என்கிறது. திருமணம், விவகாரத்து, தத்து எடுத்தல், வாரிசுரிமை,
ஜீவனாம்சம் என பல்வேறு அம்சங்களில் தனிநபர் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அரசியல் சாசன நிர்ணய சபையிலும் இது தொடர்பான விவாதங்கள் நடத்தப்பட்டன. அப்போதும் அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள், பொது சிவில் சட்டம் தேவை என்பதை வலியுறுத்தி உள்ளனர்.
பொது சிவில் சட்டம் தொடர்பாக அரசியல் சாசனத்தில் என்ன விவாதம் நடந்தது?
பொது சிவில் சட்டம் தொடர்பாக அரசியல் சாசன நிர்ணய சபையில் மிகப் பெரும் விவாதம் நடந்தது. இதில் பங்கேற்ற இஸ்மாயில் சாகேப், நசிருதீன் அகமது, மகபூப் அலி பெய்க், பாக்கர் சாகேப் பகதூர் உள்ளிட்டோர் தனிநபர் சட்டங்களில் உரிய திருத்தங்கள் கொண்டு வந்து பாதுகாக்க வேண்டும் என்றனர். அதேபோல பாரதிய வித்யா பவன் நிறுவனர் கேஎம் முன்ஷியும், தனிநபர் சட்டங்களில் கை வைத்தால் பெரும்பான்மை இந்துக்களும் பாதிக்கப்படுவர் என கூறினர். இதனால் அம்பேத்கர் அதிருப்தியை தெரிவித்தார். அதேநேரத்தில் ஒருமித்த கருத்து ஒற்றுமை அடிப்படையில்தான் பொது சிவில் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்பதையும் அம்பேத்கர் வலியுறுத்தினார். இந்த விவகாரத்தில் ஏற்பட்ட அதிருப்தியில்தான் சட்ட அமைச்சர் பதவியை அம்பேத்கர் ராஜினாமா செய்தார்.
பொது சிவில் சட்டம் தொடர்பான உச்சநீதிமன்ற கருத்துகள் என்ன?
உச்சநீதிமன்றமானது பல்வேறு வழக்குகளில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. 1985-ம் ஆண்டு ஷாபானு வழக்கில் பொது சிவில் சட்டத்தை வலியுறுத்தியது. 1995-ம் ஆண்டு சரளா முட்கல் வழக்கில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றது உச்சநீதிமன்றம்.
பொது சிவில் சட்டம் குறித்து சட்ட ஆணையம் சொல்வது என்ன?
2016-ல் மத்திய சட்ட அமைச்சகமானது பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடிய வழிமுறைகளை சட்ட ஆணையம் ஆராய பரிந்துரைத்தது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு குடும்ப சட்டங்களில் சீர்திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக சட்ட ஆணையத்திடம் கருத்து கேட்டிருந்தது. இதனடிப்படையில் 2018-ம் ஆண்டு 185 பக்க அறிக்கை ஒன்றை சட்ட ஆணையமானது மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. அதில், தனிநபர் சட்டங்கள் இருந்தும் ஒரே மதத்துக்குள் பாகுபாடுகள் இருக்கின்றன. ஆகையால் தனிநபர் சட்டங்கள் குறித்து ஆராய்ந்து உரிய திருத்தங்கள் செய்ய வேண்டும் என பரிந்துரைத்தது. ஆனால் பொது சிவில் சட்டத்தை எதிர்த்தது.
மேலும் சதி (இந்து மதத்தில் இருக்கும் உடன்கட்டை ஏறுதல்), தேவதாசி (இந்து மதத்தில் இருக்கும் பெண்களை கடவுளின் பெயரால் விபச்சாரத்துக்கு தள்ளுதல்), முத்தலாக் ( முஸ்லிம் மதத்தில் பெண்களை நினைத்த நேரத்தில் விவகாரத்து செய்தல்), குழந்தை திருமணங்கள் ஆகியவற்றை சமூகத்தை பிடித்திருக்கும் பேய்கள் எனவும் சட்ட ஆணையம் சாடியது.
கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், அரசியல் சாசனத்தின் 44-வது பிரிவு பொது சிவில் சட்டத்தை வலியுறுத்துகிறது. தனிநபர் சட்டங்களில் மாற்றம் செய்து பொதுவான சட்டத்தை உருவாக்குவதை 44-வது பிரிவு சுட்டிக்காட்டுகிறது என்றது. ஆனால் பொது சிவில் சட்டம் குறித்து நாடாளுமன்றமே முடிவு செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி இருந்தது.
நாட்டில் எத்தனை மாநிலங்களில் பொது சிவில் சட்டம் அமலில் உள்ளது?
கோவா மாநிலத்தில் பொது சிவில் சட்டமானது 1867-ம் ஆண்டு முதலில் அமலில் இருக்கிறது. நாடு விடுதலைக்குப் பின்னரும் போர்த்துகீசிய சட்டத்தின் அடிப்படையில் இந்த பொது சிவில் சட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்திலும் கடந்த ஆண்டு முதல் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்தது. இதற்காக ஐந்து நபர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு ஜூன் 30-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறது.
முஸ்லிம் பெண்களுக்கு நீதி வழங்க வேண்டும் எனில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் நிலைப்பாடு.
பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த குஜராத் அரசும் ஒப்புதல் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications