மொறுமொறு வாழைப்பூ வடை: மதிய சாதத்திற்கும் மாலை நேரத்திற்கும் சத்தான கிரிஸ்பி வடை!
Banana Flower Fritters Recipe In Tamil: வடை, பஜ்ஜி, முறுக்கு என எண்ணெய் பொருட்களை வெளியே வாங்குவதற்கு பயமாக இருக்கிறதா, அப்படி என்றால் வீட்டிலேயே இந்த மொறுமொறு வாழைப்பூ வடையை தயார் செய்யுங்கள். வாழைப்பூவை சுத்தம் செய்வது சற்று கடினம் என்று பலர் இதைத் தவிர்ப்பார்கள். ஆனால் அதன் அபாரமான மருத்துவ குணங்கள் தெரிந்தால் நிச்சயம் நீங்கள் அடிக்கடி செய்வீர்கள்.
வாழைப்பூ பெண்களுக்கும் அவர்களது கர்ப்பப்பைக்கு மிகவும் நல்லது. இதில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. வாழைப்பூவில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது ரத்த சோகையை நீக்கவும் செரிமானத்தை மேம்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. பொதுவாக வாழைப்பூவை பொரியல் அல்லது கூட்டு செய்தால் குழந்தைகள் விரும்பி உண்ண மாட்டார்கள்.
ஆனால் இப்படி வடையாக மொறுமொறுப்பாகச் செய்து கொடுத்தால் தட்டில் ஒன்று கூட மிஞ்சாது. இதில் சேர்க்கப்படும் சோம்பு மற்றும் இஞ்சி ஜீரணத்திற்கு உதவுவதோடு வடைக்கு ஒரு தனித்துவமான மணத்தையும் சுவையையும் சேர்க்கிறது.

இந்த ஆரோக்கியமான மற்றும் சுவையான வாழைப்பூ வடையை உங்கள் வீட்டிலேயே உணவக ஸ்டைலில் எப்படி செய்வது என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். மிகக் குறைந்த பொருட்களைக் கொண்டு மொறுமொறுப்பான பதத்தில் இந்த வடையைத் தயாரிப்பது எப்படி என்பதற்கான எளிய வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
வாழைப்பூவிலேயே காய் பூ, பழம் பூ என இருக்கும். அதில் காய் பூ லேசாக துவர்க்கும், பழம் பூ அவ்வாறு இருக்காது. எனவே என்ன பூ என்பதை கேட்டு வாங்குங்கள்.
தேவையான பொருட்கள்
- கடலைப்பருப்பு - 1 கப்
- சுத்தம் செய்த வாழைப்பூ - 1 கப் (பொடியாக நறுக்கியது)
- பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் - 3
- இஞ்சி - ஒரு சிறிய துண்டு
- பூண்டு - 4 பற்கள்
- சோம்பு - 1 டீஸ்பூன்
- கருவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
- சமையல் எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை விளக்கம்
- முதலில் கடலைப்பருப்பை நன்றாகக் கழுவிவிட்டு சுமார் 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
- பின் வாழைப்பூவில் உள்ள நரம்பு மற்றும் கள்ளன் பகுதியை நீக்கிவிட்டு, அதனை மோர் கலந்த தண்ணீரில் போட்டு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- அடுத்து ஊறவைத்த கடலைப்பருப்பில் உள்ள தண்ணீரை முழுமையாக வடித்துவிட்டு, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும்.
- பிறகு அதனுடன் சோம்பு, இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- அடுத்து அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி, அதனுடன் நறுக்கிய வெங்காயம், வாழைப்பூ, கருவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.
- பின் மாவை நன்றாகப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வடை வடிவில் தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
- அடுத்து ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்த வேண்டும்.
- பிறகு எண்ணெய் காய்ந்ததும் தட்டி வைத்துள்ள வடைகளை மெதுவாக எண்ணெயில் போட்டு பொரிக்க வேண்டும்.
- வடை பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் மாறியவுடன் எண்ணெயை வடித்துவிட்டு வெளியே எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications