தம்மாத்துண்டு சுண்டக்காயில் துவையல் செய்து! சூடான சாதத்தில் நெய் ஊற்றி! பிசைந்தால்! சொர்க்கம்!
சென்னை: தம்மாத்துண்டு சுண்டக்காயை வைத்து காரக் குழம்பு மட்டுமே செய்கிறீர்களா? அதில் ஒரு துவையல் அரைத்து சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் வேற லெவலில் இருக்கும். எப்படி செய்யுறதுனு பார்க்கலாமா?
சுண்டக்காய் சிறிய அளவில் இருக்கும். இதில் லேசான துவர்ப்பு அல்லது கசப்பு சுவை இருப்பதால் இதன் மகத்துவம் தெரியாதவர்கள், இது இருக்கும் திசை கூட தலை வைத்து படுக்க மாட்டார்கள்.

இந்த சுண்டக்காயை வற்றலாக காய வைத்து அதை பொரித்து காரக்குழம்பில் போட்டும் சாப்பிடலாம். எப்படி பார்த்தாலும் ஒரு சிறு கசப்பு இருக்கத்தான் செய்யும். சுண்டக்காயை சாப்பிட்டால் வயிறு தொடர்பான பிரச்சினைகள் நீங்கும்.
இதில் இரும்புச் சத்து, கால்சியம், புரதம் உள்ளிட்டவை இருக்கின்றன. இதனால் ரத்த சோகை, செரிமான பிரச்சினைகள், வயிற்று பூச்சிகள் உள்ளிட்டவைகளுக்கு அருமருந்து. அது போல் மூச்சுக் குழாயில் இருக்கும் கிருமிதொற்றையும் நீக்கும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இந்த சுண்டக்காயை கடைந்து இட்லிக்கு சாம்பார் வைப்பார்கள், தேங்காய் துருவி போட்டு பொரியல் செய்வார்கள். நசுக்கி விதைகளை நீக்கிவிட்டு காரக் குழம்பு வைப்பார்கள். ஆனாலும் சுண்டக்காயை எடுத்து எறிந்துவிட்டு குழம்பை மட்டும் சாப்பிடுவோரும் உள்ளனர்.
அவர்களுக்காக சுண்டக்காய் போட்டதே தெரியாத அளவுக்கு ஒரு துவையல் செய்து சாப்பிடலாம். அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
சுண்டக்காய் - இரு கைப்பிடிகள் (நசுக்கி விதைகள் நீக்கியது)
சிவப்பு மிளகாய் - 6
உளுத்தம் பருப்பு- 2 டீஸ்பூன்
கடலை பருப்பு- 2 ஸ்பூன்
தேங்காய் துருவல்- 2 டேபிள் ஸ்பூன்
புளி- சிறிதளவு
உப்பு, எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி (நல்லெண்ணெய் ஊற்றினால் நல்லது) அது காய்ந்ததும், இரு பருப்புகளை போட்டு பொரிக்கவும். அத்துடன் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பிறகு நசுக்கி தண்ணீர் வடித்து வைத்திருக்கும் சுண்டகாயை போட்டு வதக்கவும். அதன் நிறம் மாறும் வரை வதக்கவும். பின்னர் தேங்காய் துருவல், புளி, உப்பு சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி எடுத்து ஸ்டவ்வை ஆஃப் செய்யவும்.
வதக்கிய கலவையை ஆற வைத்து கட்டியாக மிக்ஸியிலோ அல்லது அம்மியிலோ வைத்து அரைத்துக் கொள்ளவும்.
இந்த துவையலுக்கு தாளிப்பு தேவையில்லை. விருப்பப்பட்டால் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து துவையலில் கொட்டவும். அதன் பிறகு துவையலை வதக்க தேவையில்லை.
இந்த துவையலை எடுத்து சூடான சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் அல்லது சுட்ட எண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் தேவாமிர்தம் போல் இருக்கும். சுண்டக் காய் போட்டதே தெரியாது. குழந்தைகளை எளிதாக ஏமாற்றி கொடுத்துவிடலாம்! செய்து பார்த்துவிட்டு எப்படி இருந்தது என்பதை கமென்ட்டில் சொல்லுங்கள்.












Click it and Unblock the Notifications