குறுக்கே புகும் "குடி" மகன்கள்! மதுவை அழிக்கும் போதெல்லாம் இதே வேலையா போச்சு.. நம்ம ஆந்திராவில்..!
அமராவதி: ஆந்திர மாநிலத்தில் சட்டவிரோத மது பாட்டில்களை கடத்தும் சம்பங்கள் அதிகரித்துள்ளது. இதை தடுக்க போலீசார் நடவடிக்கைகளை எடுத்து வரும் போதிலும் இது போன்ற சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அப்படி தான் இன்று சட்ட விரோத மதுபானங்களை அழிக்க முயன்ற போது அங்கு திடீரென கூட்டத்தில் புகுந்த "குடி" மகன்களால் மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டது.
இந்தியாவில் மதுபானத்திற்கான கொள்கை என்பது ஒவ்வொரு மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். சில மாநிலங்களில் தனியார் இதில் அனுமதிக்கப்படுகிறார்கள். சில மாநிலங்களில் அனுமதிக்கப்படுவது இல்லை.

அப்படி தான் ஆந்திர மாநிலத்தில் தமிழகத்தைப் போலவே அரசே மது விற்பனையைக் கவனித்து வருகிறது. அங்குச் சட்டவிரோதமாகப் பிடிக்கப்படும் மது பாட்டில்கள் அழிக்கப்படும். அப்படி அழிக்கும் போது தான் அங்கு ஒரு காமெடி நிகழ்வு நடந்துள்ளது.
மது கடத்தல்: ஆந்திரா மட்டுமின்றி நமது நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் கடத்தப்படுவது தொடர் கதையாகவே உள்ளது. அப்படிக் கடத்தப்படும் மது பாட்டில்களை போலீசார் பிடித்து அழிப்பார்கள். அப்படி தான் ஆந்திராவின் குண்டூரில் சட்டவிரோத மதுபானங்களை அழிக்கும் வழக்கமான நடவடிக்கையை போலீசார் எடுத்தனர். அப்போது தான் அங்கு எதிர்பாராத குழப்பம் ஏற்பட்டது.
குறுக்கே பாய்ந்த குடிமகன்கள்: அதாவது சட்ட விரோத மது பாட்டில்களை அழிக்கப் பல ஆயிரம் மது பாட்டில்கள் ஒரே இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு போலீசார் அழிக்கத் திட்டமிட்டு இருந்தனர். அப்போது இதை வேடிக்கை பார்க்கக் கூடிய நபர்களில் ஒருவர் உள்ளே புகுந்து சில மது பாட்டில்களை எடுத்தார். அவரை பார்த்து அப்படியே வரிசையாகப் பலரும் சட்டவிரோத மது பாட்டில்களை கொள்ளையடித்தனர். இதை அங்கிருந்த போலீசாராலும் தடுக்க முடியவில்லை. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.
அதில் மது பாட்டில்களை திருட வரும் இளைஞர்களை போலீசார் பிடிக்க முயலவும், ஆனால், அவர்கள் கைகளில் அகப்படாமல் போலீசார் தப்பி செல்வதும் அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த களேபரங்களைப் பார்த்துக் கொண்டு இருந்த ஜேசிபி டிரைவர் என்ன செய்வதென்றே தெரியாமல் ஒரு நொடி ஷாக் ஆகி அப்படியே நின்றுவிட்டார். பிறகு அருகே இருந்த போலீசார் வந்து மது பாட்டில்களை திருடியவர்களை விரட்டியடித்தனர். அதன் பின்னரே அவை முறையாக அழிக்கப்பட்டன.
என்ன நடந்தது: இது குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், "குண்டூரில் சமீபத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள சட்டவிரோத மதுபானங்களை போலீசார் பிடித்தனர்.. குப்பை கொட்டும் இடத்தில் தான் இந்த மது பாட்டில்கள் இருந்தன. அதை அழிக்கும் நடவடிக்கையை போலீசார் எடுத்த போது தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் சில இளைஞர்கள் இதுபோல அத்துமீறிக் கொள்ளையடித்துச் சென்றனர்" என்கிறார்கள். போலீசார் இருந்தும் அவர்கள் கண் முன்னாலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
குண்டூரில் இதுபோன்ற சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இத்தனை பாதுகாப்பு இருந்தும் கூட மதுபானங்களை கொள்ளையடித்துள்ளனர். அங்கு பாதுகாப்பு பணிகளில் இருந்த போலீசாராலும் கூட இதை தடுக்க முடியவில்லை. இந்த கொள்ளை சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
இதுபோல சட்டவிரோதமாக மதுபானங்கள் கொள்ளையடிக்கப்படுவது இது முதல் முறையல்ல. ஆந்திராவில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்தே வருகிறது. அதை தடுப்பது போலீசாருக்கு பெரும் போராட்டமாகவே இருக்கிறது. இந்த ஆண்டு ஜூலை மாதம், மதுபானங்களை ஏற்றி வந்த லாரி விபத்தில் சிக்கியது. அதில் உள்ளே இருந்த 110 பெட்டிகளில் 30 பெட்டிகள் கீழே விழுந்தன. அவற்றை அங்கிருந்தவர்கள் அள்ளி சென்றனர்.












Click it and Unblock the Notifications