Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'சமூக நீதி காவலர்’ பிரதமர் பதவியை துறந்த ’மாமன்னன்’ வி.பி.சிங்- கருணாநிதி, ஸ்டாலின் புகழாரங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய சரித்திரத்தில் சமூக நீதி காவலர் என போற்றப்படுகிற- காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இந்திய மக்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்திய சமூகப் புரட்சியாளர் விஸ்வநாத் பிரதாப் சிங் எனும் வி.பி.சிங் பிறந்த நாள் இன்று!

வி.பி.சிங் குறித்து அவரது மறைவின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியிருந்ததாவது: இந்திய திருநாட்டின் முன்னாள் பிரதமரும், தேசிய முன்னணியின் பிதாமகரும், சமூக நீதிக் காவலரும், சிறந்த கவிஞரும் ஓவியரும், எனது ஆழமான அன்புக்கும் பாசத்துக்கும் உரியவருமானவர் வி.பி. சிங்,.

 Social Justice - Karunanidhi, MK Stalin statements on Former PM VP Singh

அரசியல் நாகரீகத்துக்கும், பண்பாட்டுக்கும், உயர்ந்த லட்சியங்களுக்கும் அடையாளச் சின்னமாக விளங்கிய அவரது பிரிவு, இந்திய நாட்டுக்கு ஈடு செய்திட முடியாத பேரிழப்பாகும். தமிழகத்தை பொருத்தவரை, வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது வழங்கிய கொடைகள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. காவிரி நடுவர் மன்றம் அமைத்திட அவர் உறுதுணையாக இருந்ததும்; எத்தனையோ எதிர்ப்புகளுக்கிடையே பிற்படுத்தப்பட்டோர் நலன் கருதி மண்டல் கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்திட முன்வந்ததும்; மாநிலங்களிடையே மன்றம் அமைத்ததும்; சென்னை மீனம்பாக்கத்திலுள்ள வெளிநாட்டு விமான தளத்துக்கு அண்ணா பெயரும், உள்நாட்டு விமானதளத்துக்கு காமராஜர் பெயரும் சூட்டவேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுத்து அதனை விழா மேடையிலேயே வி.பி. சிங் ஏற்று அறிவித்ததும் என்றைக்கும் மறக்க முடியாதவைகளாகும்.

திமுக மூன்றாவது முறையாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று, 27.1.1989 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பதவிப் பிரமாண உறுதிமொழி எடுத்துக் கொண்ட மாபெரும் விழாவில் வி.பி.சிங் கலந்துகொண்டு சிறப்பித்ததும்; அன்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில், ''இன்று காலையில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று, கலைஞர் கருணாநிதி முதல்வராக பதவியேற்றிருக்கிறார். எந்த வள்ளுவர் கோட்டத்தை அவர் உருவாக்கினாரோ; அந்தக் கோட்டத்துக்குள்ளேயே வந்து பதவிப் பிரமாணம் எடுத்திருக்கிறார். இந்த வெற்றி இந்தியாவுக்கே வழிகாட்டுகிற வெற்றி'' என்று வாழ்த்தியதும்; வி.பி. சிங் பிரதமராக பதவிப் பொறுப்பை ஏற்றதற்குப் பின்னர் எனது அழைப்பின் பேரில் சென்னைக்கு 1990 பிப்ரவரித் திங்களில் வந்தபோது, தமது நிகழ்ச்சி நிரலையே மாற்றிக் கொண்டு நேரடியாக எனது வீட்டிற்கு வந்து என்னை மகிழ்வித்துப் பெருமைப்படுத்தியதும்; எனது வாழ்நாளில் நெஞ்சத்தை விட்டு நீங்காத நிகழ்ச்சிகளாகும்.
அவர் மறைந்தாலும் அவரது மேதைமைத் தன்மையும், உயர்தனிச் சிறப்பும், சீரிய செயல்பாடுகளும் சரித்திரத்தில் என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும். இவ்வாறு கருணாநிதி கூறியிருந்தார்.

அண்மையில் தமிழ்நாடு சட்டசபையில், சென்னையில் விபி சிங்குக்கு சிலை அமைப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வி.பி.சிங், பூமிதான இயக்கத்தில் பங்கேற்றவர். அம்மாநில முதல்வர் மற்றும் மத்திய வர்த்தகம், பாதுகாப்பு, வெளியுறவு, நிதித் துறைஅமைச்சர் என உயர் பொறுப்புகளை வகித்தார். 1989-ல் தேசிய முன்னணியை உருவாக்கி, நாட்டின் பிரதமரானார்.

சுமார் 11 மாதங்களே அவர் பிரதமராக இருந்தாலும், அவரது சாதனைகள் மகத்தானவை. பி.பி.மண்டல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத ஒதுக்கீட்டை வழங்கிய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங். அதுமட்டுமின்றி, தகவல் அறியும் உரிமைச்சட்டம், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், வேலை உரிமையை அரசியல் சாசன உரிமையாக்கியது, மாநிலங்களுக்கிடையிலான கவுன்சில், தேசியப் பாதுகாப்புக் குழு, நுகர்வோர் பாதுகாப்பு என அவரது பதவிக் காலத்தில் பல சாதனைகளை நிகழ்த்தினார்.

தந்தை பெரியாரைத் தனது தலைவராக ஏற்றுக் கொண்ட வி.பி.சிங், கருணாநிதியை சொந்த சகோதரனைப்போல மதித்தார். 1988-ல் சென்னையில் நடைபெற்ற தேசிய முன்னணி தொடக்க விழாவில், மாபெரும் ஊர்வலத்தை தலைமை வகித்து நான் நடத்தி வந்தேன். வி.பி.சிங் பிரதமரான பின்னர்அதற்காக என்னைப் பாராட்டினார். அவர் அளித்த ஊக்கம் காரணமாகத்தான், சமூகநீதிப் பார்வையில், சமூகநீதிப் பயணத்தில் சலனமும், சமரசமும் இல்லாமல் திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

மருத்துவப் படிப்பில் அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது என்று சொல்லிவந்த மத்திய அரசை, 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஒப்புக்கொள்ள வைத்தது திமுக உள்ளிட்டஜனநாயக சக்திகள் நடத்திய போராட்டங்கள்தான்.

இதை மனதில் கொண்டுதான், தேசிய அளவில் சமூகநீதிக்கான கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்காகவும் குரல் கொடுத்து வருகிறோம்.

சிஆர்பிஎஃப் தேர்வை தமிழ்உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினேன். தற்போது, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் சிஆர்பிஎஃப் உள்ளிட்ட அனைத்து மத்திய ஆயுதக் காவல் படை தேர்வுகளும் நடைபெறும் என்ற செய்தி வந்துள்ளது. அந்த வகையில், சமூகநீதிக் கொள்கையை வழங்கியவர்களில் ஒருவர் வி.பி.சிங். காவிரி நடுவர்மன்ற ஆணையத்தை அமைத்தவர். சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு காமராஜர் பெயரும், பன்னாட்டு விமான நிலையத்துக்கு அண்ணா பெயரும் சூட்டினார். அவரது நினைவைப் போற்றும் வகையிலும், அவருக்கு தமிழ்ச் சமுதாயத்தின் நன்றியைத் தெரிவிக்கும் வகையிலும், சென்னையில் அவரதுமுழு உருவச் சிலை அமைக்கப் படும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி வி.பி.சிங் புகழ் ஓங்கட்டும்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+