நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையானே! சித்ரா பௌர்ணமிக்கு தயாராகும் திருவண்ணாமலை! உகந்த நேரம் என்ன?
சென்னை: உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி தரக்கூடிய ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சித்ரா பௌர்ணமி ஒட்டி 30 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், பக்தர்கள் வெயிலில் சிரமமின்றி தரிசனம் செய்ய ஏதுவாக பந்தல் அமைக்கும் பணி உள்ளிட்ட முன்னேற்பாடுகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி தரக்கூடிய ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்வர்.

மேலும், கோவிலின் பின்புறம் உள்ள மலையை சிவனாக எண்ணி 14 கிலோமீட்டர் கொண்ட கிரிவலப்பாதையில் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபாடு செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி சித்ரா பௌர்ணமி ஆகும், இந்த பௌர்ணமி தினத்தில் கிரிவலம் வந்தால் ஆண்டு முழுவதும் உள்ள 12 பௌர்ணமிக்கும் கிரிவலம் வந்ததாக பலன் கிடைக்கும்.
சித்ரா பௌர்ணமி கிரிவலம் நேரம்
அது மட்டுமின்றி சித்ரா பௌர்ணமி தினத்தில் சித்தர்களும் பக்தர்களுடன் இணைந்து கிரிவலம் வருவார்கள் என்பது ஐதீகமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமிக்கு 20 முதல் 30 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை வழிபட்டு கிரிவலம் வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி வியாழக்கிழமை அன்று இரவு 9:52 மணிக்கு தொடங்கி மறுநாள் வெள்ளிக்கிழமை மே 1ம் தேதி இரவு 11:08 மணி வரை கிரிவலம் வர உகந்த நேரமாக அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை
ஆகவே பக்தர்கள் வியாழக்கிழமை இரவு மற்றும் வெள்ளிக்கிழமை முழுமையாக கிரிவலம் வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கிரிவலப் பாதை முழுவதும் ஆக்கிரமிப்பு அகற்றுதல், அடிப்படை வசதிகளான தற்காலிக கழிப்பிடம் அமைத்தல், குடிநீர் வசதிகள் ஏற்படுத்தல் என பல்வேறு முன்னேற்பாடு பணிகளை செய்து வருகின்றனர். திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் 16க்கும் மேற்பட்ட தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு தற்காலிக பேருந்து நிலையங்களில் கழிப்பிடம், குடிதண்ணீர் வசதிகள் ஏற்பாடுகள் செய்யும் பணி தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
கிரிவலப் பாதை
அதேபோன்று இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமிக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து கார், வேன், போன்ற வாகனங்களில் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்கு ஏதுவாக மாநகராட்சிக்குட்பட்ட புறவழிச் சாலைகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் கார் பார்க்கிங் வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதை முழுவதிலும் நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ஏற்பாடுகள் தீவிரம்
14 கிலோமீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் may I help you பூத் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அது மட்டும் இன்றி அண்ணாமலையார் கோவிலை சுற்றி உள்ள மாட வீதியில் என்று அழைக்கக்கூடிய தேரடி வீதி, பெரியத்தெரு உள்ளிட்ட வீதிகளில் பக்தர்கள் வெயிலில் சிரமமின்றி காத்திருந்து சாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி பந்தல் அமைக்கும் பணியில் கோவில் ஊழியர்கள் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தற்காலிக கடைகள்
அதேபோல் 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையிலும் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள், தற்காலிக கடைகள் என அனைத்தையும் அகற்றி பக்தர்களுக்கு கிரிவலம் செல்லும் போது இடையூறு இல்லாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும் கோயில் நிர்வாகமும் இணைந்து முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications