தை அமாவாசை! முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள்
ராமேஸ்வரம்: தை அமாவாசை தினமான இன்று பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் நீராடிவிட்டு தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதற்காக ராமேஸ்வரத்தில் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.
ஜனவரி 18 அன்று தமிழகம் முழுவதும் தை அமாவாசை அனுசரிக்கப்படுகிறது. இத்தினத்தில் மறைந்த முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபடுவது பக்தர்களின் முக்கிய சடங்காகும். இதன் காரணமாக, ராமேஸ்வரம் அக்னித் தீர்த்தக் கடல், காவிரி சங்கமிக்கும் பூம்புகார் உள்ளிட்ட பல்வேறு புண்ணிய நீர்நிலைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையிலேயே திரண்டு புனித நீராடினர்.

தமிழகம் மட்டுமன்றி, பிற மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னித்தீர்த்தக் கடலில் குவிந்தனர். கடலில் புனித நீராடிவிட்டு, முன்னோர்களுக்கு எள் மற்றும் பிண்டம் சமர்ப்பித்துத் தர்ப்பண பூஜைகள் செய்து வழிபட்டனர்.
அதன் பிறகு, ராமநாதசுவாமி கோயிலின் 22 புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக, மதுரை, தூத்துக்குடி போன்ற நகரங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படிருந்தன.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள பூம்புகாரில், காவிரி ஆறு கடலுடன் சங்கமிக்கும் சங்கமத்துறையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இங்கு புனித நீராடிய பிறகு, வேதியர்கள் மற்றும் ஆச்சாரியர்கள் உதவியுடன் முன்னோர்களுக்குப் பலிகர்ம பூஜைகளை நடத்தினர். அரிசி, காய்கறிகள், தானியங்கள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை தானமாக அளித்து முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்தனர்.
அதேபோல, திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலின் ருத்ரபாதத்திலும் ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்குத் திதி கொடுத்தனர். மயிலாடுதுறை துலாக் கட்ட காவேரி, திருவையாறு புஷ்ய மண்டப படித்துறை, கோவை மாவட்டத்தின் பேரூர் படித்துறை, பவானி கூடுதுறை போன்ற முக்கிய நீர்நிலைகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே திரண்டு தர்ப்பணம் மற்றும் முன்னோர்களுக்குரிய பூஜைகளைச் செய்து வழிபட்டனர்.












Click it and Unblock the Notifications