வெள்ளி ரிஷபத்தில் வீதியுலா வந்த மீனாட்சி.. சொர்க்கம் போல் மாறிய மாமதுரை! காணக் கண் கோடி வேண்டுமே!
மதுரை: சித்திரை பெருவிழா 6ம் நாளான இன்று தங்கம் மற்றும் வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருளி அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாசி வீதிகள் முழுவதும் தூங்கா நகர் மதுரையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்தனர்.
மதுரை மட்டுமல்ல தமிழகமே எதிர்பார்த்து காத்திருக்கும் முக்கிய விழா என்றால் அது மதுரை சித்திரை திருவிழா தான். மதுரையை அரசாலும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை மணமுடித்து அண்ணன் கள்ளழகரை பார்க்க காத்திருக்கும் சித்திரை திருவிழாவில் மதுரையே குலுங்கி தான் போய்விடும்.
16 நாட்கள் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த விழாவில் மீனாட்சி திருக்கல்யாணமும். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதும் முக்கிய வைபவங்கள். திருவிழா என்றாலே மதுரை தான், மதுரை என்றாலே சித்திரைத் திருவிழா தான்.

16 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பல விழாக்கள் நடைபெற்றாலும், சித்திரைத் திருவிழா தான் மிகவும் சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்டு பெண்கள் புது தாலி கயிறு மாட்டிக்கொண்டால் மீனாட்சியைப் போலவே தாங்களும் தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை அடைவோம் என்பது நம்பிக்கை.
இந்தாண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் பெருவிழா கடந்த 19ம் ஆம் தேதி கொடியேற்றத்துடன் விமர்சையாகவும், கோலாகலமாகவும் நடைபெற்ற வருகிறது. தினசரி அம்மனும் சுவாமியும் கைலாய பரவதம்,சிம்ம வாகனம்,கற்பக விருட்சம், அன்னவாகனம் உள்ளிட்ட அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் மாலை நேரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தனர்.
இன்று ஆறாம் நாள் திருவிழாவை முன்னிட்டு மாலையில் சுவாமி பிரியாவிடை அம்மனுடன் தங்க ரிஷப வாகனத்திலும், மீனாட்சி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் புறப்பட்டு நான்கு மாசி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்களும் சுவாமி வேடம் அணிந்திருந்த குழந்தைகளும் பெண்களும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய சிலம்பம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நான்கு மாசி வீதிகள் வழியாக அம்மன் வீதி உலா வரும்போது முன்னே ஊர்வலமாக தங்களுடைய நிகழ்வுகளை நிகழ்த்தி சென்றனர்
கைலாய வாத்தியங்கள் முழங்க திரளான பக்தர்களுக்கு மத்தியில் அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சித்திரை திருவிழாவின் ஆறாம் நாள் வீதி உலா கோலாகலமாக நடைபெற்று நிறைவு பெற்றது. இதில் தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்தனர்.














Click it and Unblock the Notifications