அரசியல்வாதிகளின் 'சென்டிமென்ட்' கோவில்! திருச்செந்தூரில் நீடிக்கும் விஐபி கலாச்சாரம்!
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோடை விடுமுறை மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளால் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வரும் நிலையில், இன்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூருக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் கூட்ட நெரிசல் வழக்கத்தை விட அதிகமாகக் காணப்படுகிறது. இந்தச் சூழலில், இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கோவிலுக்கு வருகை தந்தார். அவருக்குக் கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர் சண்முகர், வள்ளி, தெய்வானை மற்றும் பரிவார தெய்வங்களை வணங்கிச் சென்றார்.

இருப்பினும், திருச்செந்தூர் கோவிலில் தற்போது நிலவும் அதீத கூட்டத்திற்குப் பின்னால் ஒரு சுவாரசியமான அரசியல் பின்னணியும் பேசப்படுகிறது. நடிகர் விஜய் அரசியலில் தடம் பதித்த பிறகு, அவர் இக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்ததும், அதன் பின்னர் அவர் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் பக்தர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் ஒரு 'அதிசயமாகப்' பார்க்கப்படுகிறது. "விஜய் வந்தார், தரிசனம் செய்தார், இப்போது முதல்வராகிவிட்டார்" என்ற பேச்சுகள் பக்தர்களிடையே பரவலாக உள்ளதால், பல்வேறு மாநில அரசியல் தலைவர்களும், விஐபிக்களும் இக்கோவிலை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மருமகன், திருச்செந்தூர் கோவிலில் சிறப்பு பூஜை செய்தார் என்ற தகவல் சில வருடங்கள் முன்பு பரவிய பிறகே கோவிலில் விஐபிகள் வருகை அதிகரிக்க தொடங்கியது. இப்போது அது உச்சத்திற்கு போய்க்கொண்டுள்ளது.
விஐபிக்களின் இந்தத் தொடர் வருகையால், மணிக்கணக்கில் காத்திருக்கும் சாமானிய பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஏற்கனவே கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், அரசியல்வாதிகளின் வருகைக்காகப் பொதுமக்களின் தரிசனம் நிறுத்தப்படுவதும், கட்டுப்படுத்தப்படுவதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, முக்கியப் பிரமுகர்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமையைக் குறைத்து, வெயிலில் வாடும் சாமானிய பக்தர்கள் எளிதாகவும் விரைவாகவும் சுவாமி தரிசனம் செய்யத் தமிழ்நாடு அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மிகவேக அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications