திருப்பதி ஏழுமலையானுக்கு 7 டன் மலர்களால் புஷ்பயாகம்.. ஆர்ஜித சேவைகள் ரத்து.. ஆன்லைன் டிக்கெட் ரிலீஸ்
திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் நாளை வருடாந்திர புஷ்பயாகம் நடைபெறுகிறது. நாளை மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த புஷ்பயாகம் நடைபெற உள்ளதால் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, பிரமோற்சவம் ஆகிய சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருமலையில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் முடிந்த பிறகு அதில் ஏற்பட்ட குறைகளை களைவதற்காக புஷ்ப யாகம் நடத்தப்படுகிறது. மேலும் பூகம்பம், புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களில் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டியும் புஷ்ப யாகம் செய்யப்படுகிறது.

திருமலை வெங்கடாச்சலபதிக்கு ஆண்டு தோறும் புஷ்பயாகம் நடைபெறுவது தொன்றுதொட்டு நடைபெற்ற வருகிறது. மொகலாயர்கள் ஆட்சி செய்து வந்த 15ஆம் நூற்றாண்டு வரையிலும் இது எவ்வித தடங்கலும் இல்லாமல் நடைபெற்று வந்தது. பின்னர், காலப்போக்கில் அது கைவிடப்பட்டது. ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்து பின்பு, திருமலை திருப்பதி தேவஸ்தான ஆஸ்தான வித்வான் வேதாந்த ஜெகந்நாதாச்சாரியலு 1980ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி முதல் மீண்டும் திருமலை ஏழுமலையானுக்கு புஷ்பயாகத்தை தொடர்ந்து நடத்த ஆரம்பித்தார்.
தெலுங்கு கார்த்திகை மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்த புஷ்ப யாகம் நடத்தப்படுகிறது.
அதன்படி திருமலையில் நேற்று புஷ்ப யாகம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. அன்று முதல் வழக்கம் போல், ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவம் முடிந்த பின்னர் வரும் கார்த்திகை மாத ஸ்ராவன நட்சத்திர தினத்தன்று, புஷ்பயாகம் நடத்தப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் நாளைய தினம் புஷ்ப யாகம் நடைபெற உள்ளது.
திருமலையில் நாளைய தினம் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த புஷ்பயாகம் நடைபெற உள்ளது. இதற்காக 7 டன் அளவில் பலவிதமான பூக்கள் கொண்டுவரப்படுகிறது. திருமலையில் உள்ள தோட்டக்கலை அலுவலக வளாகத்தில் இருந்து ரோஜா, முல்லை, மல்லி, சாமந்தி, தாழம்பூ, கனகாம்பரம், தாமரை, அல்லி, சம்பங்கி, மனோரஞ்சிதம் போன்ற மலர்களும் துளசி, தவனம், மருவம், வில்வம் போன்ற புனித இலைகளும் கொண்டு புஷ்ப யாகம் நடைபெறும்.
புஷ்ப யாகத்தை முன்னிட்டு நாளை கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, பிரமோற்சவம் ஆகிய சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாலையில் சகஸ்ரதீப அலங்கார சேவை முடிந்து மாடவீதிகளில் மலையப்ப சாமி காட்சியளிக்க உள்ளார்.
இதனிடையே ஸ்ரீவாரி ஆர்ஜித சேவைகளான கல்யாணம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோத்ஸவம், சஹஸ்ர தீபாலங்காரம் ஆகியவற்றுக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் வரும் 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படவுள்ளது. விர்ச்சுவல் ஆர்ஜித சேவைகளுக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் இம்மாதம் 21 ஆம் தேதி மாலை 3 மணிக்கு திருப்பதி தேவஸ்தான வலைதளத்தில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அங்கபிரதட்சணம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் வரும் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படவுள்ளன. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான டோக்கன்களும் 23ஆம் தேதியே வெளியிடப்படவுள்ளது. மேலும், பிப்ரவரி மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வரும் 24 ஆம் தேதியும், அதைத் தொடர்ந்து 25ஆம் தேதி திருப்பதியில் அறைகள் முன்பதிவுக்கான டிக்கெட்டுகளும் வெளியிடப்படவுள்ளது.
வரும் 26 ஆம் தேதி திருமலையில் உள்ள அறைகளுக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளன. சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளின் வெளியீட்டு தேதி ஞாயிற்றுக்கிழமை வந்தால், அவை மறுநாள் வெளியிடப்படும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications