ஆடி அமாவாசை.. சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தை தரிசிக்க 6 நாட்கள் அனுமதி.. உற்சாகத்தில் பக்தர்கள்
விருதுநகர்: ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 6 நாட்கள் வனத்துறை அனுமதி அளித்துள்ளது. கோவிலுக்கு வருபவர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அமைந்துள்ளது சதுரகிரி மலை. இந்த மலையில் சுந்தர மகாலிங்கம் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி என மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும். அதேசமயம் மழை நாட்களில் மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.

இந்த நிலையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் கோயிலுக்கு செல்ல 6 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை பக்தர்கள் செல்லலாம் என மாவட்டம் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கோவிலுக்கு வருபவர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை. மலைப்பகுதிக்கு எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட நாட்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் மலையேறி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு சதுரகிரிக்கு வழக்கத்தை விட அதிகமாக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications