ஆடி அமாவாசை.. பித்ரு லோகத்தில் இருந்து பூலோகம் வரும் முன்னோர்கள்.. தர்ப்பணம் செய்தால் தோஷம் நீங்கும்
சென்னை: சிறப்பு மிகுந்த ஆடி அமாவாசை நாளில் நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து கிளம்பி பூலோகத்திற்கு வருவதாக நம்பப்படுகிறது. எனவே நம்முடைய முன்னோர்களை வரவேற்கும் விதமாக நாம் எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் அளிப்பதன் மூலம் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
வீடு தேடி வரும் முன்னோர்கள்: அமாவாசையில், மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. உத்தராயன காலமான தை மாதத்தில் வருகிற அமாவாசை, தட்சிணாயன காலமான ஆடி மாதத்தில் வருகிற அமாவாசை... புரட்டாசி மகாளய பட்சம் என்று சொல்லப்படும் காலத்தில் வருகிற அமவாசை ஆகிய மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்கிறது சாஸ்திரம்.

ஆடி முதல் மார்கழி முடிய உள்ள காலத்தில் நம்முடைய முன்னோர்களான பித்ருக்கள் நம்மைப் பார்ப்பதற்காக இந்த உலகத்துக்கு வருகின்றனர். அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து புறப்படும் நாள் ஆடி அமாவாசை. எனவே, அவர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பது போலவும், அவர்களை பூமிக்கு வரும்படி அழைப்பு விடுப்பதுபோலவும் ஆடி அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்கிறது சாஸ்திரம்.
பித்ரு தர்ப்பணம்: ஆடி அமாவாசை நாளில் தன்னுடைய சொந்த வீடான கடக ராசியில் தாய் காரகன் சந்திரன் தந்தை காரகன் சூரியனுடன் இணைந்திருக்கிறார். சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நாளே அமாவாசை என்பது எல்லோருக்கும் தெரியும். சந்திரன் தேய்பிறை நிலையில் இருந்து விடுபட்டு வளர்பிறை நிலைக்கு செல்லும் நாள். அமாவாசை தினத்தில் முன்னோர்களையும் தாய், தந்தையர்களையும் யார் வழிபடுகிறார்களோ, அவர்களின் பிள்ளைகளுக்கும் தலைமுறைக்கும் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். அமாவாசை நாளில் நாம் செய்யும் தர்ப்பணங்கள் நம் பித்ருக்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரும் என்பதற்காகவே அமாவாசை தினம் பித்ரு தர்ப்பணத்துக்கு உரிய நாளாக கூறியிருக்கிறார்கள்.
ஆடி அமாவாசை எப்போது: இந்த ஆண்டு ஆடி மாதம் கிருஷ்ண பட்ச அமாவாசை திதி ஆகஸ்ட் 15 செவ்வாய்க்கிழமை மதியம் 12.42 மணிக்கு தொடங்குகிறது. இந்த தேதி அடுத்த நாள் ஆகஸ்ட் 16, புதன்கிழமை மாலை 03.07 மணி வரை உள்ளது. சூரிய உதயத்தின் அடிப்படையில் 16ஆம் தேதி புதன் கிழமைதான் ஆடி மாத அமாவாசை என்று கணக்கிடப்படுகிறது. ஆகஸ்ட் 16 அன்று காலை 6 மணி முதல் 9 மணி வரை புனித நீர் நிலைகளில் நீராடி தர்ப்பணம் செய்யலாம். ஆடி அமாவாசை நாளில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும், அன்னதானம் செய்வதும் புண்ணியத்தைத் தரும். இந்நாளில் வில்வ மரத்தை வணங்கி, தண்ணீர் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட்டால், முன்னோர்களும், தெய்வங்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பது நம்பிக்கை.
முன்னோர்கள் மகிழ்ச்சி: ஆகஸ்ட் 16 அன்று புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் போது அவர்களுக்கு பிடித்தமான உணவுப்பொருட்களை படையல் இடலாம் கருப்பு எள்ளும் வைத்து வழிபட வேண்டும். பித்ரு லோகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளதால் முன்னோர்கள் அமாவாசை அன்று தர்ப்பணம் வழங்குவதன் மூலம் அந்த நீரைப் பெறுவதாகவும், அதைப் பெற்றுத் திருப்தி அடைவதாகவும் ஐதீகம். இதனால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் பித்ரு தோஷம் நீங்கும். முன்னோர்களுக்கு நாம் செய்யக் கூடியதான இந்த தர்ப்பண காரியங்களை நாம் சிரத்தையாகச் செய்தால், நமக்கு அனைத்து வளங்களும் கிடைக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். அமாவாசை தினத்தில் நம்முடைய வீட்டினை சுத்தம் செய்து வீடுகளில் விளக்கேற்றி நம்மை காண வரும் முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து வரவேற்பதன் மூலம் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசி வழங்குவார்கள்.












Click it and Unblock the Notifications