Aadi Pooram 2025: ஆடிப்பூரம் எப்போது? அம்பாளுக்கு வளையல் மாலை போட உகந்த நேரம் எது?
சென்னை: அம்பிகைக்கு உகந்த நாளான ஆடிப்பூரம் எப்போது கொண்டாடப்படுகிறது? அம்பிகைக்கு வளையல் வாங்கி கொடுத்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். ஆடிப்பூரம் ஆடி மாதத்தில் வரக் கூடிய முக்கிய நிகழ்வாகும். இந்த நாளில் பெண்கள் அம்பாளுக்கு விரதம் இருந்து மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்ட மங்கல பொருட்களை படைத்து வழிபடுவது வழக்கம்.
இதுகுறித்து பிரியா லட்சுமணன் என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஆடிப்பூரம் வரும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. பூரம் நட்சத்திரம் ஜூலை 27ஆம் தேதி மாலை 6.55 மணிக்கு தொடங்கி, ஜூலை 28ஆம் தேதி இரவு 8 மணி வரை இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் திங்கள்கிழமை சதுர்த்தி திதியும் வருவதால் விநாயகர், ஆண்டாள், அம்பாளை வழிபடுவது மிகவும் சிறப்பானது. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் நாச்சியார் அவதரித்தது ஆடிப்பூரத்தின் போதுதான்!
ஆடிப்பூரம்
அதனால் ஆடிப்பூரத்தை ஆண்டாள் ஜெயந்தியாகவும் 10 நாள் உற்சவமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். அது மட்டுமல்லாமல் ஆடிப்பூரத்தின் போது அம்மன் கோயில்களில் அம்மனுக்கு வளைகாப்பு விழா நடத்துவார்கள்.
ஆடிப்பூரம் வளையல் மாலை
ஆடிப்பூரத்தன்று அம்மனை முழுவதுமாக கண்ணாடி வளையல்களில் அலங்காரம் செய்து வழிபடுவார்கள். வழிபாடு முடிந்ததும் அந்த கண்ணாடி வளையல்களை பெண்களுக்கு பிரசாதமாக கொடுப்பது வழக்கம். அந்த வளையலை நாம் அணிந்தால், அம்பாள் தாய்மை கோலம் கொண்ட நாள் என்பதால் குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
திருமண தடை
திருமணத் தடை இருப்போருக்கு நீங்கி திருமணம் விரைவில் நடக்கும் என்பது ஐதீகம். ஆடிப்பூரத்தன்று அம்மன் கோயில்களில் கண்ணாடி வளையல் வாங்கிக் கொடுத்தால் அம்பிகை நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வளங்களையும் நிச்சயம் தருவாள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஆடி மாதம் சக்தி வழிபாடு
ஆடி மாதங்களில் சக்தி வழிபாடு முக்கியம் என்பதால்தான் ஆடியில் திருமணங்கள் செய்வதை தவிர்க்கிறார்கள். அது போல் கணவன்- மனைவி ஒன்று சேராமல் இருக்கிறார்கள். ஆடிப்பூரம் என்பது அம்மனுக்கு வளைகாப்பு நடக்கும் நாள் என்பதால் குழந்தை பாக்கியத்திற்கு ஏங்கும் பெண்களுக்கு குழந்தை உருவாகும்.
11 ஆவது நட்சத்திரம்
27 நட்சத்திரங்களில் 11 ஆவது நட்சத்திரமாக வருவது பூரம் நட்சத்திரம். இது சிம்ம ராசிக்குரிய நட்சத்திரம். கிரகங்களில் செல்வ செழிப்பு, சுக போக வாழ்க்கைக்கு காரணமாக இருக்கும் கிரகம் சுக்கிரன் ஆகும். அவரை அதிபதியாக கொண்ட நட்சத்திரம்தான் பூரம்.
அம்பிகை வழிபாடு
ஆடி பூரத்தன்று அம்பிகையை வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்கும். அன்றைய தினம் நாக சதுர்த்தியும் சேர்ந்து வருகிறது. எனவே இந்த ஆடிப்பூரத்தன்று நாகதேவதைகளையும் வணங்குவது நல்லது. ஆடிப்பூரத்தன்று வழிபாடு நடத்த உகந்த நேரம் காலை 6 மணி முதல் 7.20 மணி வரை, 9.10 முதல் 10.20 மணி வரையும் ஆகும்.
ஆடிப்பூரகம் வளையல் மாலை அணிவது எப்போது
இந்த ஆடிப்பூரத்தன்று வண்ண வண்ண வளையல்களை மாலையாக கோர்த்து கோயில்களிலோ வீடுகளில் உள்ள அம்மன் படங்களுக்கோ மலையாக போடலாம். அப்போது குழந்தை பேறு வேண்டுவோர், அம்மனிடம் மனமுருகி வழிபட வேண்டும். விரைவில் வளைகாப்பு வளையல் அணிந்து கொள்ளும் பாக்கியத்தை தரும்படி வேண்டிக் கொள்ள வேண்டும். இது போல் திருமணத்திற்கு வேண்டிக் கொள்வோர், நலங்கு வைத்து வழிபட வேண்டும். அம்மனுக்கு வளையல் வாங்கியும் தரலாம். இல்லாவிட்டால் கோயில்களுக்கு வருவோருக்கு வளையல் தரலாம்.












Click it and Unblock the Notifications