Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அட்சய திருதியை..அழகாபுரி அரசனான குபேரன்...சிவன் அருளிய செல்வ வளம்..புராண கதை

Subscribe to Oneindia Tamil

சென்னை: குபேரன் போல செல்வ வளத்தோடு வாழ வேண்டும் என்று எல்லோரும் நினைப்பார்கள். எல்லோருக்கும் மகாலட்சுமியின் அருள் பார்வை கிடைத்து விடாது. நீதியும் நேர்மையும் கொண்டவர்களிடம் இறைவன் அருளால் செல்வம் தேடி வரும். அட்சய திருதியை கொண்டாடும் இந்த நாளில் குபேரன் செல்வத்திற்கு அதிபதியானது எப்படி என பார்க்கலாம். முகநூல் பக்கத்தில் இதை எழுதியவருக்கே இந்த கதையின் பலன் சேரும்.

செல்வத்துக்கு அதிபதியாகத் திகழ்பவர் குபேரன். பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர்.

 Akshaya Tritiya: Azhakapuri king Kuberan Shiva blessed wealth Purana story

அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர். தாமரை மலர் ஏந்தி, வரத முத்திரை காட்டி, வருபவர்களை செல்வச் செழிப்பாக மாற்றுபவர். வெண் குதிரை இவரது வாகனம். இவரது மடி மீது கீரிப்பிள்ளை அமர்ந்து இருக்கும்.

நளகூபன், மணிக்ரீவன் என்ற இரு மகன்கள் குபேரனுக்கு இருக்கிறார்கள். சிவந்த மேனியும் குள்ளமான உருவமும், பெரிய வயிறும் உடையவராக இவர் வர்ணிக்கப்படுகிறார். பத்ம நிதி, மஹாபத்ம நிதி, மகர நிதி, கச்சப நிதி, குமுத நிதி, நந்த நிதி, சங்க நிதி, நீலம நிதி, பத்மினி நிதி என நவநிதிகளையும் பாதுகாத்து அருளுபவர். இதில் பதும நிதி, சங்க நிதி ஆகிய தெய்வ மகளிரின் கணவரும் இவர்தான்.

ஒவ்வொரு வியாழக்கிழமை மாலை 5:30 மணிமுதல் 6:00 மணி வரை குபேர காலம்' என்று வழங்கப்படுவதால், அந்த நேரத்தில் இவரை வணங்கினால், செல்வச் செழிப்பு உண்டாகும். மனைவி சித்திரரேகையோடு இணைந்து அன்பர்களுக்கு அருளாசி வழங்குபவர்.

உலகின் அத்தனைச் செல்வங்களும் குபேரனிடம் வந்த காரணம் என்ன நேர்மையானவரிடம் தானே நிதிப்பொறுப்பை கொடுப்பார்கள்? சிவபெருமானே குபேரனை செல்வத்தின் அதிபதியாக நியமித்த காரணம் என்ன...
அட்சய திருதியை கொண்டாடப்பட உள்ள நல்ல நாளில் நாம் குபேரன் செல்வத்திற்கு அதிபதியானது எப்படி என பார்க்கலாம்.

நான்முகனின் மகன் புலஸ்திய முனிவருக்கு பிறந்தவர் விச்ரவசு. அவருக்கு இரண்டு மனைவிகள், அதில் மூத்த மனைவிக்குப் பிறந்தவர்தான் குபேரன். அப்போது அவரின் பெயர் வைஸ்ரவணன். இளையவளான கேகசிக்கு பிறந்தவர்கள் ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், சூர்ப்பனகை. ஆரம்பத்தில் இலங்கையை வைஸ்ரவணன் ஆண்டு வந்தார்.

ராவணன் தவம் இயற்றி வரங்கள் பல பெற்றதும், வைஸ்ரவணனைத் தோற்கடித்துவிட்டு, ஆட்சியை அபகரித்துக்கொண்டான். நாடிழந்த வைஸ்ரவணன் ஒரு தவசியாக நாடுதோறும் அலைந்துகொண்டிருந்தார். அவருக்குத் திருமணம் செய்துவைக்க அவரின் தாய், தந்தையர் விரும்பினார்கள்.

அதன்படி பெண் தேடவும் தொடங்கினார்கள். ஆனால், எந்தப் பெண்ணையும் வைஸ்ரவணனுக்கு பிடிக்கவில்லை.
பேரழகாகவும் குணவதியாகவும் இருக்கும் பெண்ணைத் தேடி நாடெங்கும் சுற்றிவரத் தொடங்கினார்.
சிவபெருமானின் மீது மாளாத பக்திகொண்ட குபேரன், சிவாலயம்தோறும் சென்று அழகிய பெண் வேண்டுமென்று வேண்டிக்கொண்டார்.

நாளடைவில், பல தலங்களில் தங்கியிருந்து தவம் இயற்றவும் செய்தார். இப்படி ஊர் ஊராகச் சுற்றிவரும் வேளையில், இறுதியாக காசி மாநகருக்கு வந்து சேர்ந்தார் வைஸ்ரவணன்.அந்த நகரின் அமைதியையும் பெருமையையும் கண்ட அவர் அங்கேயே தங்கிவிட்டார். அதுமட்டுமா... அகில உலகத்துக்கும் நாயகன்' எனப் பெயர் கொண்ட விஸ்வநாதரைக் கண்டதும் தனது வாழ்வின் அர்த்தமே விஸ்வநாதரை துதிப்பதுதான் என எண்ணிக்கொண்டார்.

பெண் தேடி வந்த நோக்கத்தைக்கூட மறந்து, சிவ தியானத்தில் மூழ்கிவிட்டார். எண்ணூறு ஆண்டுகளைக் கடந்த தவம் என்கிறது புராணம். அத்தனை ஆண்டுகளாக, எந்த நோக்கமும் இன்றி, பல இடையூறுகளைத் தாண்டி வைஸ்ரவணனின் தவம் தொடர்ந்தது. எதற்காகத் தவம் செய்கிறார் என்ற காரணமே தெரியாமல் தேவர்களும் குழம்பினர்.

ஆனாலும், அவருக்கு இடையூறு எதுவும் செய்யாமல்விட்டுவிட்டனர். காலம் செல்லச் செல்ல அவரின் தவத்தின் பயனாக எழுந்த அக்னிச் சூடு கயிலாயத்தையும் தொட்டது. பரம்பொருளான ஈசன், இனியும் தாமதிக்கக் கூடாது என வைஸ்ரவணனுக்கு அருள்புரியக் கிளம்பினார்.அப்போது அன்னை உமாதேவி, தானும் அந்த எளிய பக்தனை, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத தவசியைக் காண விரும்புகிறேன் என்று கூறி சிவனோடு கிளம்பினார்.

கடும் தவம் இயற்றிய வைஸ்ரவணன் முன்பு தோன்றிய சிவனும் பார்வதியும் அவரை அன்பு கனிய அழைத்தனர். அம்மையப்பரின் குரல் கேட்டு தவத்தில் இருந்து விடுபட்டார். இழந்து போன இலங்கைக்கு பதிலாக அவருக்கு அழகாபுரி பட்டணத்தையே சிவன் உருவாக்கித் தந்தார்.உலகத்து நிதிகளை எல்லாம் அவரிடம் ஒப்படைத்து, அவரை குபேரன்' என்ற பெயரோடு விளங்கச் செய்தார். வடக்கு திசைக்கு அவரை அதிபதியாக்கி, அஷ்ட திக் பாலகர்களில் ஒருவராக்கினார்.

செல்வத்தின் அதிபதியான திருமகளுக்கு துணையாக குபேரனை நியமித்தார் சிவன். சித்திரரேகை எனும் மங்கையை மணமுடித்துத் தந்து அவரை ஆசீர்வதித்தார். சிவபெருமானுக்குப் பிரியமான நண்பனாக குபேரன் மாறினார். இதனால் சிவசகா' என்ற பெயரையும் கொண்டார்.

எந்த எதிர்பார்ப்பும் இன்றி தவமியற்றி, சிவனை தரிசித்த காரணத்தால்தான் உலகத்து நிதிகளை எல்லாம் குபேரன் பெற்றார். தனக்கென ஒன்றையுமே எதிர்பாராத குபேரனின் தியாகச் செயலைப் போற்றியே அவர் தேவருலகின் நிதி அமைச்சர் பொறுப்பைப் பெற்றார். தனது செல்வ வளத்தை கொண்டு காக்கும் கடவுளான திருமாலின் அம்சமான வெங்கடாசலபதிக்கே கடனும் கொடுத்தார் குபேரன்.

எனவே, நியாயமான நேர்மையான எவருக்கும் நிச்சயம் உயரிய பொறுப்புகள் வந்தே தீரும். காலம் தாழ்ந்து நடைபெற்றாலும், கட்டாயம் தன்னலம் கருதாத பண்பாளர்களுக்கு சிறப்புகள் வந்தே சேரும் என்பதையே குபேரனின் கதை நமக்கு உணர்த்துகிறது. இன்றைக்கும் குபேரன் பலராலும் போற்றி வணங்கப்படுகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+