அண்ணாமலையார் தரிசனம்..துருக்கி பெண் ஆடிய சிவ தாண்டவம்..திருவண்ணாமலையில் மெய்சிலிர்த்த பக்தர்கள்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் துருக்கி நாட்டு பெண் பக்தை ஒருவர் ஆடிய சிவ தாண்டவம் காண்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. நினைத்தாலே முக்தி தரும் ஆலயமாக திருவண்ணாமலையில் தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் வெளிநாட்டு பெண் பக்தை ஆடிய சிவ தாண்டவத்தை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திகழ்வது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இந்த ஆலயத்தில் மலையே சிவலிங்கமாக திகழ்கிறது. தினசரியும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்து வணங்குவது வழக்கம். பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வணங்குகின்றனர்.

திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை மாதம் நடைபெறும் தீப திருவிழா உலகப்பிரசித்தி பெற்றது. வெளிநாட்டு பக்தர்களும் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை தினமான நேற்று அதிகாலையில் இருந்தே தரிசன வரிசையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோயில் வெளி பிரகாரம் வரை பொது தரிசன வரிசை நீண்டிருந்தது. அதனால், சுமார் 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.
பக்தர்கள் வருகை அதிகரித்ததால், சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலுக்கு சமீப நாட்களாக வெளிநாட்டு பக்தர்கள் வருகையும் அதிகரித்துள்ளது. அதன்படி, நேற்று துருக்கி நாட்டு பெண் பக்தர் ஒருவர், தரிசனம் முடிந்துவிட்டு வெளியே வந்ததும் பக்திப்பெருக்கால் திடீரென 3ம் பிரகாரத்தில் சிவ தாண்டவம் ஆட தொடங்கினார்.
சிவ பெருமானை நினைத்து பய பக்தியுடன் அபிநயத்துடன் வெளிநாட்டு பெண் நாட்டியமாடுவதை அங்கிருந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.












Click it and Unblock the Notifications