அயோத்தி ராமருக்கு கும்பாபிஷேகம்.. தென்னக அயோத்தி.. கும்பகோணம் ராமசாமி கோவிலின் சிறப்பு தெரியுமா?
கும்பகோணம்: அயோத்தி ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் தென்னக அயோத்தி என்று போற்றப்படும் கும்பகோணம் சீதா தேவி சமேத ராமசாமி கோவில் பற்றி அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். கும்பகோணத்தில் இப்படி ஒரு கோவிலா என்று ஆச்சரியப்படுபவர்கள் இந்த ஆலயத்தின் சிறப்பை பற்றியும் இங்கு தரிசனம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்றும் பார்க்கலாம்.
தென்னக அயோத்தி: காசிக்கு நிகரான புனிதமும், அயோத்திக்கு நிகரான சிறப்பும் கொண்ட தலம். கும்பகோணம் கலையும் ஆன்மிகமும் கலந்து செழித்திருக்கும் பூமியான கும்பகோணத்திலுள்ள வைணவத் தலங்களில் முக்கியமான இடத்தைப் பெறுவது ராமசாமி கோயில். தென்னக அயோத்தி என போற்றப்படும் ராமசாமி கோவில் கி.பி.1600 முதல் கி.பி.1645 வரை தஞ்சாவூரை ஆட்சி செய்த ரகுநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டது.

ராம பக்தர்: இவருக்கு ராம சரிதத்தைக் கேட்பதிலும் படிப்பதிலும் பேரார்வம் இருந்தது. தினமும் தன் அவையில் ராமாயணத்தைப் படிக்கச் சொல்வாராம். பண்டிதர்கள் அந்தப் புண்ணியக் கதையைக் கேட்கும்போது மெய் சிலிர்ந்துக் கேட்பாராம். ராமாயணத்தைப் படிக்கும் பண்டிதர்களுக்குத் தன் கையாலேயே தாம்பூலம் மடித்துக்கொடுத்து மகிழ்வானாம். அதனால் இந்த மன்னனுக்கு, 'அனுவிரத ராமகதாம்ருத சேவகன்' என்னும் திருப்பெயர் ஏற்பட்டது என்கிறார்கள்.
ராமன் சீதை சிலைகள்: ராம பக்தரான ரகுநாத நாயக்க மன்னரால் அற்புதமான இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது. கும்பகோணத்திற்கு அருகே உள்ள தாராசுரத்தில் தாராசுரத்தில் குளம் வெட்டும்போது ராமன், சீதையின் சிலைகள் கிடைத்தன. இதைக் கண்டு மகிழ்ந்த ரகுநாத நாயக்க மன்னர்,கும்பகோணத்தில் ராமபிரானுக்கு ஆலயத்தை எழுப்பி அந்த சிலைகளை பிரதிஷ்டை செய்தார் என்கிறது தல வரலாறு.

கம்பீர ஆலயம்: வடக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக அமைந்துள்ள கோயில். பிரம்மாண்டமான தூண்களில் அற்புதமான சிற்பங்கள் காணப்படுகின்றன. ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்புக்குரிய தலமாகும். மற்ற ஆலயங்களில் ராமன் சீதை, லட்சுமணர் நின்ற கோலத்தில் காட்சியளிப்பார்கள். ஆனால் ராமசாமி கோயிலில் ராமனும், சீதையும் ஒரே ஆசனத்தில் அருகருகே அமர்ந்து அருள்பாலிக்கின்றனர்.
பட்டாபிஷேக கோலம்: கருவறையில் பட்டாபிஷேகக் கோலத்தில் ராமர், சீதை, லட்சுமணன், சத்ருகனன், அனுமார் இருக்கும் காட்சி காண்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும். வடக்கு நோக்கிய கருவறையில் மூலவர் இராமரும் சீதைப்பிராட்டியும் பீடத்தில் அமர்ந்திருக்க, பரதன் குடை விரிக்க, இலக்குவன் அஞ்சலி பந்தத்துடன் நிற்க, சத்துருக்கனன் வெண்சாமரம் வீச அனுமன் கையில் வீணையையும், சுவடியையும் ஏந்தியிருக்க அனைவரும் ஒன்றாக எழுந்தருளியுள்ளனர். இதனை தரிசனம் செய்தலே குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

அனுமன் அருள்: ராமன் இங்கு இடது காலை மடக்கி வலது காலை பூமியில் தொங்கவிட்டு அமர்ந்துள்ள கோலம் அற்புதமானது. சதா சர்வ காலமும் ஶ்ரீ ராம நாமம் சொல்லும் அனுமன் இங்கு சிரஞ்சீவியாக அருள்பாலிக்கிறார். இந்த சந்நிதியில் சில கணங்கள் நின்று ராம நாமத்தை உச்சரிப்பவர்கள், ராமனின் அருளைப் பெறுவதோடு ஶ்ரீ ஆஞ்சநேயரின் அருளையும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
ராமாயணம்: இந்த ஆலயத்தின் சுவர்களில் இராமாயண ஓவியங்கள் மூன்று வரிசையாக வரையப்பட்டுள்ளன. மூன்று சுற்று நாம் சுற்றி வந்தாலே நாம் முழுமையாக இராமாயணத்தைப் படித்துவிடலாம். ராமாயணத்தின் அனைத்து காண்டங்களும் கோயில் சுற்று சுவர் முழுவதும் மூலிகை வண்ணங்களால் வரையப்பட்டுள்ளது.
அயோத்தி கும்பாபிஷேகம்: அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவிற்காக கும்பகோணம் ராமசாமி ஆலயத்தில் சிறப்பு யாகம் செய்யப்பட்டு காவேரி, மகாமகம், பொற்றாமரை குளம் ஆகியவற்றில் இருந்து புனித நீர் எடுத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளன்று, கும்பகோணம் ராமசாமி கோயிலில் சீதாராமருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது என்பது சிறப்பம்சம்.
இந்த ஆலயத்திற்கு வந்து சீதா ராமர் சமேதராக பட்டாபிஷேக கோலத்தில் அருள்பாலிக்கும் அனைவரையும் தரிசனம் செய்தால் திருமண தடை நீங்கும் என்பது நம்பிக்கை. அயோத்தி செல்ல முடியாதவர்கள் கும்பகோணம் வந்து பட்டாபிஷேக ராமரை தரிசனம் செய்யுங்கள்.












Click it and Unblock the Notifications