இருமுடி தாங்கி.. சபரிமலையில் அலைமோதும் கூட்டம்.. பக்தர்கள் வசதிக்காக தேவசம்போர்டு குட் நியூஸ்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பக்தர்களின் வசதிக்காக தரிசன நேரம் 16 மணிநேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 11 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கார்த்திகை மாத பிறப்பு மற்றும் மண்டல பூஜைக்காக கடந்த 16 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் மாலை அணிந்து 41 நாட்கள் விரதத்தை தொடங்கினர்.

17ஆம் தேதியில் இருந்தே சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக தென் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக குவிந்து வருகின்றனர். 5 நாட்களில் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர்.
சன்னிதானம் நடைப்பந்தல், பம்பை உள்ளிட்ட இடங்களில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தினமும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளதால் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தரிசன நேரம் குறித்து முக்கிய முடிவை எடுத்துள்ளது.
ஐயப்பனை தரிசனம் செய்வதற்கான நேரம் 16 மணிநேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, சுப்ரபாத சேவை மற்றும் நெய்யபிஷேகத்திற்குப் பிறகு தரிசனங்கள் தொடங்கப்படும். பின்னர் மதியம் 1 மணிக்கு தரிசனம் நிறுத்தப்படும். அதன்பிறகு மாலை 4 மணிக்கு மீண்டும் தரிசனம் தொடங்கப்பட்டு இரவு 11 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதனை தொடர்ந்து ஹரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு பின்னர் நடை அடைக்கப்படும்.
பொதுவாக சபரிமலை ஐயப்பன் கோவில் மாதாந்திர பூஜைகள் மற்றும் விசேஷ நாட்களில் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு மூடப்படும். பின்னர் மீண்டும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள். தற்போது தரிசன நேரத்தை அதிகரித்துள்ளதால் பக்தர்கள் காத்திருக்கும் நேரம் குறைந்துள்ளது. கூட்ட நெரிசலில் சிக்காமல் கூடுதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிகிறது.
அதிகாலை 3 மணிக்கே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவதால் 4 மணிக்கு பக்தர்கள் மலை இறங்கி வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை வரும் டிசம்பர் 27 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு கோவில் நடை மூன்று நாட்கள் மூடப்பட்டு மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்படும். மகர ஜோதி தரிசனம் ஜனவரி 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. பின்னர் படிபூஜை முடிந்து ஜனவரி 20ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மூடப்படும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்ட்ல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. பக்தர்களின் பாதுகாப்புக்காக 13 ஆயிரம் போலீசார் 6 கட்டங்களாக பணியில் ஈடுபட்டுள்ளனர். மகர விளக்கு பூஜையை முன்னிட்டு அரக்கோணத்தில் இருந்து 60 பேர் அடங்கிய பேரிடர் மீட்புக் குழுவினரும் சபரிமலைக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications