திருப்பதியில் ஜூலை 17ல் ஆனிவார ஆஸ்தானம்.. பட்ஜெட் திருவிழா.. கணக்கு வாசிப்பதில் இத்தனை சிறப்புகளா?
திருப்பதி: ஆனி வார ஆஸ்தான விழா வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு ஏழுமலையான் கோவில் தயாராகி வருகிறது. வார விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பல கிலோமீட்டர் தூரம் வரிசையில் நின்று 24 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து செல்கின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வரவு, செலவு கணக்குகள் சுவாமியிடம் சமர்பிக்கும் ஆனி வார ஆஸ்தானம் எனப்படும் விழா ஆனி மாதம் கடைசி நாளில் பாரம்பரியமாக நடைபெறும். 1956ம் ஆண்டுக்கு பின்பு திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தொடங்கிய பின் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் கோவில் கணக்கு முடிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் புதிய கணக்கு தொடங்கப்பட்டு வருகிறது.

சம்பிரதாய முறைப்படி ஏழுமலையான் கோவிலில் ஆனி கடைசி நாளில் வரவு, செலவு கணக்குகள் சுவாமி முன் படிக்கப்படும். பின்னர், சுவாமிக்கு புதிய பட்டு வஸ்திரம் சமர்பிக்கப்படும். இந்த சேவையில் கலந்து கொள்ளும் பக்தர்களிடமிருந்து தலா 1ரூபாய் பெறப்பட்டு புதிய ஆண்டிற்கான கணக்கு தொடங்கப்படும்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு ஆனிவார ஆஸ்தானம் வரும் 17ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம், உற்சவரான மலையப்பர் முன்னிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆண்டு வருவாய் கணக்கு வழக்குகள் ஒப்பிக்கப்பட்டு, கணக்குகள் சமர்ப்பிக்கப்படும். அப்போது சிறிது நேரம் பக்தர்கள் முன்னிலையில் சுவாமி நிறுத்தப்படுவார். தங்க வாசல் அருகே சர்வபூபால வாகனத்தில் இந்த ஐதீகமுறை நடத்தப்படும். அப்போது, உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்பரும், இவர்களுடன் சேனாதிபதியாக கருதப்படும் விஸ்வகேசவரும் இருப்பர். பின்னர் தேவஸ்தான கோயில் சாவி மூலவரின் காலடியில் வைத்து பூஜை செய்த பின்னர் மீண்டும் தலைமை நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும். இந்த விழாவை முன்னிட்டு வரும் 11ஆம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் கோவிலை சுத்தம் செய்யும் பணி நடைபெறும் அந்த நேரத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரியும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனிவார ஆஸ்தான விழா திங்கட்கிழமை வருவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சனிக்கிழமையான இன்றும் ஞாயிற்றுக்கிழமையான நாளையும் விடுமுறை ஆகையால் திருப்பதி மலைக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ள காரணத்தால் திருப்பதி மலையில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்களில் இருக்கும் அனைத்து அறைகளிலும் பக்தர்கள் நிரம்பி உள்ளனர்.
திருப்பதியில் உள்ள இலவச தரிசன டோக்கன் கவுண்டர்களில் டோக்கன் வாங்காமல் திருமலைக்கு சென்று வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்களில் இடம் கிடைக்காத பக்தர்கள் ஐந்து கிலோ மீட்டர் நீள வரிசையில் இலவச தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகிய அடிப்படை வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்து வருகிறது. 300 ரூபாய் கட்டண தரிசனத்திற்கு 4 மணி நேரமும், இலவச தரிசன டோக்கன் வாங்கிய பக்தர்கள் 5 மணி நேரமும் காத்திருந்து ஏழுமலையானை வழிபட்டு செல்கின்றனர். நேற்றைய தினம் 69,483 பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டு கோவில் உண்டியலில் மூன்று கோடியே 58 லட்ச ரூபாயை காணிக்கையாக சமர்ப்பித்து இருந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 13ஆம் தேதி சர்வ ஏகாதசி கொண்டாடப்பட உள்ளது. 15ஆம் தேதி சனி திரயோதசி எனப்படும் மகாசனி பிரதோஷம், ஜூலை 17 ஆனிவார ஆஸ்தானம், 22ஆம் தேதி ஆண்டாள் திருவாடிப்பூர விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த நாட்களில் பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications