தங்கம், வெள்ளியில் துலாபாரம்.. செல்வம், மகிழ்ச்சிக்குதவும் வழிபாடு.. துலாபாரத்தில் இதை தானம் தரலாமே
சென்னை: வாழ்க்கையில் எந்தவொரு சிக்கலும், பிரச்சனையும், கஷ்டமும் வந்துவிடும்போது இறைவனையே நாடுகிறோம்.. அப்போது மனமுருகி பிரார்த்தி நம்முடைய குறைகளை சொல்லும்போது, அனைத்து இன்னல்களும் தீர்ந்துவிடும்.. அந்த அளவுக்கு பிரார்த்தனைகளுக்கு சக்தி உள்ளது.. எத்தனையோ விதமான பிரார்த்தனைகளை, எத்தனையோ வழிபாடுகளின் மூலமாக செய்தாலும், துலாபாரம் வழிபாடு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.. இதற்கு என்ன காரணம் தெரியுமா? துலாபாரம் வழிபாட்டை எப்படி கடைப்பிடிக்க வேண்டும்? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
துலாம் என்றால் தராசு என்று பொருள்.. ஒருமுறை, ருக்மணியும் சத்தியபாமாவும் கிருஷ்ணரிடம் யாருக்கு அன்பு அதிகம் என்பதை சோதித்து பார்க்க விரும்பினார்கள்.. இதை கிருஷ்ணரிடம் சொல்லவும், அவரும் ஒப்புக்கொண்டார்..

இதற்காக ஒரு துலாபாரம் கொண்டுவரப்பட்டு, கிருஷ்ணரை அதில் அமர செய்தனர்.. முதலில் சத்தியபாமா தன்னிடமிருந்த நகைகள் அனைத்தையும் தராசின் ஒரு தட்டில் வைத்தாள். ஆனால் கிருஷ்ணர் அமர்ந்திருந்த தராசு கீழிறங்கவில்லை. பிறகு சத்தியபாமா, உடம்பில் அணிந்திருந்த அத்தனை நகைகளையும் தராசில் வைத்தாள். அப்போதும் நகைகள் வைக்கப்பட்ட தட்டு கீழே வரவில்லை. இதனால் சத்தியபாமாவுக்கு தலைகுனிவாகிவிட்டது.
பின்னணி காரணம் என்ன
பிறகு ருக்மணி, கிருஷ்ணரை வணங்கி, ஒரேயொரு துளசி இலையில் கிருஷ்ணரின் நாமத்தை எழுதி, தராசின் நகைகள் இருந்த தட்டில் வைத்தாள். உடனே கிருஷ்ணனுடைய எடைக்கு சமமாக அந்த தராசு தட்டு நின்றது. அதாவது நாமத்தை உச்சரித்து, ஒரு துளசி இலையை வைத்தாலும், அதை கிருஷ்ணன் அதை ஏற்றுக் கொள்வார் என்பதையே இது உணர்த்துகிறது.. எனவேதான் இதற்கு கிருஷ்ண துலாபாரம் என்றும் சொல்வார்கள்.
துலாபாரம் என்பது மன்னர் காலத்தில் இருந்தே நடைமுறையில் இருந்து வருகிறது. இது இறைவனுக்கு செலுத்தப்படும் நேர்த்திக்கடன் வழிபாடாகும்..
அதாவது அந்த காலத்தில் மன்னர்களுக்கு பிள்ளை வரம் இல்லாதபோது, இறைவனை வேண்டி பிரார்த்திப்பார்கள்.. பிறகு பிள்ளை வரம் நிறைவேறியதுமே, பிறந்த குழந்தையின் எடைக்கு எடை துலாபாரமாக தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை இறைவனுக்கு நேர்த்தி கடனாக செலுத்தினார்கள்.. இந்த நடைமுறை இன்றும்கூட கோயில்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது..
தங்கம், வெள்ளி துலாபாரம்
குறிப்பாக, கிரகண நேரத்தில் தங்கத்தினால் ஆன நகைகளை துலா பாரமாக தருவது கூடுதல் நன்மையை தரும் என்பார்கள்.. அதேபோல அமாவாசை நாளில் வெள்ளி நாணயங்களை துலாபாரமாக கொடுப்பது நன்மை என்றும் கூறப்படுகிறது .
குழந்தை வரம் வேண்டி மட்டுமல்ல, தீராத நோய், திருமணத்தடை, எதிரிகள் தொல்லை, தொழிலில் நஷ்டம், குடும்பத்தில் சச்சரவு, இப்படி எந்த குறைகளாக இருந்தாலும், அவைகளை போக்க உதவுவதுதான் இந்த துலாபார வழிபாடு. இறைவனிடம் முன்வைக்கும் பிரார்த்தனை நிறைவேறியதுமே, மஞ்சள், உப்பு, அரிசி, சர்க்கரை, வெல்லம், நெய், வெள்ளி, தங்கம், வாழைப்பழம், போன்றவற்றை தானமாக செலுத்தலாம்.
துலாபாரத்தில் தானம் தரவேண்டியவை
உதாரணத்துக்கு, நீங்காத நோயில் அவதிப்பட்டுக் கிடந்தால் நெய் துலாபாரம் செய்ய வேண்டும் என்பார்கள்.. ஆரோக்கியமாக வாழ சர்க்கரை துலாபாரம் தர வேண்டும்..
அதேபோல செல்வம், செழிப்பு அமைய வேண்டுமானால் துலாபாரத்தில் தேன் தர வேண்டும்.. மஞ்சளை துலாபாரமாக தரும்போது குடும்பத்தில் நிலவும் சண்டைகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.. தொழில் போட்டி உள்ளிட்ட எதிரிகள் தொல்லைக்கு, பஞ்ச பாத்திரங்களை துலாபாரமாக வழங்கலாம். முகத்தோற்றத்தில் பொலிவு தேவையானால், சந்தனம் துலாபாரம் தர வேண்டும்.
துலாபாரம் தந்துவிட்டால், மனதை பிசைந்து கொண்டிருந்த பயம், கவலை, குழப்பம் அனைத்தும் நீங்கி, உற்சாகமும் தெளிவும் பிறக்கும் என்பார்கள்.












Click it and Unblock the Notifications