புரட்டாசியின் ஸ்பெஷாலிட்டீஸ்.. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு விரதம் உள்ளோர் "இதை" மட்டும் தொடக்கூடாது
சென்னை: புரட்டாசி மாதத்தின் சிறப்புகள் என்ன? கடைப்பிடிக்க வேண்டிய பூஜை முறைகள் என்னென்ன? புரட்டாசியில் செய்யக்கூடாத காரியங்கள் என்னென்ன என்பது குறித்து முன்னோர்கள் விரிவாகவே சொல்லி வைத்துள்ளனர்.
தமிழ் மாதங்களிலேயே புரட்டாசி மாதம் சிறப்புக்குரியதாக கருதப்படுவதற்கு காரணம், இது மழை துவங்கும் மாதம் என்பார்கள்.. தமிழ் மாதங்களில் 6வது மாதமாக புரட்டாசி வருவதுடன் கன்னி ராசிக்குரிய மாதமாக போற்றப்படுகிறது..

சனி பாதிப்பு: நட்சத்திரம், திதி, கிழமை என அனைத்துமே சிறப்பாக உள்ள மாதம் இந்த புரட்டாசிதான்.. புரட்டாசி மாத சனிக்கிழமையில் தான் சனி பகவான் அவதரித்தார் என்பார்கள்.. எனவேதான், சனியால் பாதிப்பு இருப்பவர்கள், அதிலிருந்து விடுபட புரட்டாசியில் விரதம் இருப்பார்கள். புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால் அனைத்து விதமான கஷ்டங்கள், துன்பங்களில் இருந்தும் விடுபடலாம் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், திருமாலுக்கு பூஜைகளை செய்து வழிபடுவதோடு, அன்னதானமும் செய்து வந்தால், குடும்பத்துக்கு மிகவும் நல்லது.. அதேபோல புரட்டாசி மாதத்தில் திருப்பதி உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவம் நடத்தப்படுவது வழக்கமாகும்..
பெருமாளுக்கு விரதம்: அதுமட்டுமல்ல, இந்த புரட்டாசி மாதம்தான் மகாளய பட்சம் வருகிறது. இந்த நாளில் மூதாதையர்களுக்கு திதி கொடுக்கப்படுகிறது.. புரட்டாசி சனிக்கிழமைகளில், பெருமாளுக்கு விரதம் இருப்பதால் சனி பகவானால் ஏற்படும் தொல்லைகளில் இருந்தும், மூதாதையர்கள் சாபங்களில் இருந்தும் விடுபட முடியும் என்று நம்பப்படுகிறது.
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள், பூஜையறையை எப்போதுமே சுத்தம் செய்து, மாக்கோலம் போட்டு வைத்திருக்க வேண்டும். துளசி, தாமரை பூக்களை கொண்டு அர்ச்சிப்பதும் கூடுதல் விசேஷம் தரும். பெருமாள் படங்களுக்கு ஐந்து முக குத்து விளக்கை ஏற்றி வைத்தும், நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜித்தும் வரவேண்டும். சர்க்கரைப்பொங்கல், வடை, எள் சாதத்தை திருமாலுக்கு நிவேதனமாக படைக்கலாம்.
அரிசி மாவு: அதேபோல, அரிசிமாவு, வெல்லம் இரண்டையும் கலந்து கொண்டு, இரண்டு பாகமாக பிரித்து கொள்ள வேண்டும். அதில், ஒரு பாக மாவில், இளநீர் விட்டு பிசைந்து விளக்கு போல செய்து, மீதமுள்ள மாவை குவித்து, அதற்கு மேல் பஞ்சினால் பூவத்திபோல் செய்து சுத்தமான நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும்.
எனவே, இந்த புரட்டாசி மாதம் துவங்கிவிட்ட நிலையில், என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.. இந்த புரட்டாசி மாதத்தில், பெருமாள் வழிபாடு, நவராத்திரி பூஜை கட்டாயம் செய்ய வேண்டும். அதேபோல, நவராத்திரியின் கடைசி நாளான விஜயதசமியில், கல்வி கற்க குழந்தைகளை சேர்த்துவிடலாம்.
புரட்டாசி: இந்த புரட்டாசியில் புதிய வீடு வாங்குதல், புதிதாக தொழில் வியாபாரம் தொடங்குதல், கிரகப்பிரவேசம் அல்லது புதுமனை புகுவிழா செய்தல் வாடகைக்கு குடிபுகுதல் போன்ற சுபகாரியங்கள் இந்த மாதத்தில் செய்ய மாட்டார்கள். அதேபோல, புரட்டாசி மாதத்தில் பகலில் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.. வெற்றிலை, பாக்கு போடக்கூடாது. மது, மாமிசத்தை தொடவே கூடாது.. விரதம் இருந்து வழிபடுவதால், இந்த மாதம் முழுவதுமே கருணையின் வடிவமாகவே திகழ வேண்டும்.
இந்த புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்தால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும் என்பது ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது. பெருமாள் கோயிலில் கொடுக்கப்படும் துளசி தீர்த்தம் உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்தக்கூடியது.. அதேபோல, இந்த புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு பஜனைகள் செய்து வழிபடுவது, ஆலயங்களில் பிரம்மோத்ஸவங்கள் நடத்துவதும் சிறப்புக்குரியதாகும்.












Click it and Unblock the Notifications